வியாழன், 26 மே, 2011

மலேசியாவில் இடம்பெற்ற உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு ''கவியரங்க கவிதை''

மலேசியாவில் கோலாலம்பூரில் நடைபெற்ற 6வது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில்  22.5.11 அன்று 'கவிக்கோ 'அப்துல்ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில் வாசிக்கப்பட்டு பார்வையாளர்களினதும் பேராளர்களினதும் அதிதிகளினதும் அதிகளவிலான பாராட்டினை பெற்ற கவிதை.


இறைவாழ்த்து

உலகக் கவியரங்கில் உயர்வாய் கவிபடைக்க
அழகுக் கவிதருவாய் ஆண்டவனே!-நபியருளால்
கோலாலம் பூரில் கூடிநிற்கும் சான்றோர் முன்
வீழாத செந்தமிழை தா.

தமிழ் வாழ்த்து

அண்ணல் நபியிடத்தில் ஆழ்கடல்போல் இருந்திட்ட
கன்னல் குணத்தில் சிறுதுளியை சிந்தவந்தேன்-இன்னுமேன்
மறைவாக இருக்கின்றாய் மணித்தமிழே? அவன்துணையால்
விரைவாக என்முன்னே வா.!




அவையடக்கம்.

நெற்பதர்நான் எனைக்கவிதை
நெய்துபடி என்றார்கள்

கற்கண்டு சொற்கொண்டு
கவிபாடும் புலவர்முன்

முட்புதர்நான் முஹம்மதெனும்
முழுநிலவை பாடுவதா..?

அற்பன்நான் கற்பனையில்
ஆழ்ந்தபடி யோசித்தேன்.

விக்கித்தேன் எனக்குள்ளே
விடைகேட்டு வினாத்தொடுத்தேன்...

துக்கித்தேன் பலநாட்கள்
துயரத்தில் உயிர்துடித்தேன்.

கத்தியிலே நடக்கின்ற
காலம்தனை மறந்துவிட்டு

புத்தியினை உலகத்தின்
புதைகுழிக்குள் செலுத்தியதால்

நித்திரையை தொலைத்துவிட்டு
நித்தம்நான் தவித்திருந்தேன்.

அல்லாஹ்வை நேசித்தால்
அண்ணலினை சுவாசித்தால்

பொல்லாத கோடையிலும்
பொசுக்கென்று மழைவருமே...

எனவே நான் சிந்தித்தேன்
என்னைநான் நிந்தித்தேன்

வல்லோனை தொழுது ஒரு
வழிசொல்லு என்றழுதேன்....

பொறுமையாய் இருந்தேன்
பொங்கியது சங்கத்தேன்....!-இங்கே
தங்கத்தேன் கொட்டுவோர் முன்-இதை
தந்துநான் தப்பித்தேன்...!!

 கவியரங்கத் தலைவருக்கு.

தேமாங்காய் பூமாங்காய் ஒரு மண்ணும் விளங்காமல்
தெம்மாங்காய் பாடுகிறேன் பாட்டு-கவிக்கோவே!
நான்பாடும் பாட்டை நானறியேன் பெருங்கவியே
கூனுண்டோ ஆயந்துநீர் கூறும்.

கிறுக்கும் கவியெல்லாம் கீழென்று வளர்கவியை
நறுக்கி பின்னவரே நாறுகின்றார்-திருக்கவியே!
நொறுக்கி என்நெஞ்சில் நோக்காடு தந்தோர்முன்
சருகல்ல இவனென்று சாற்றும்

அழகுத்தமிழ் கவியின் ஆற்றலினை உணராதோர்
மிளகாய் போல்மரபை நினைக்கின்றார்-விலகாமல்
பழகும் தமிழ்மொழியில் மரபுத்தாய் மாண்புகளை
உலகுக்கு சொல்வேன்உணர்ந்து.


அண்ணலாரின் அழகிய குணங்கள்
•    பொறுமை.

வாவியை கடப்ப தென்றால்
வள்ளமொன் றிருந்தால் போதும்..
ஓவியம் வரைவ தற்கு
ஓரிரு வரைகள் போதும்
ஆவியை ஆட்சி செய்யும்
அரசரை  மக்கள் நெஞ்சை
கூவியே விழிக்கச் செய்த
குயிலினை குறைஷிப்பூவை
காவியம் பாடு தற்கு
காலம்நாள் போதாதெனவே...
 தீவினை ஓடச் செய்து
தீனினை ஒளிரச் செய்ய
நோவினை பொறுத்த எங்கள்
'கோ'வினை நபிகள் என்னும்;
பூவினை பற்றித்தான்யான்
பாவினை ஏந்தி வந்தேன்..
மேவிய தகைமை மிக்க
மேதைகாள் வளருமெந்தன்
பாவிலே குறைகள் காணிண்
பாவியை மன்னியுங்கள்.
காவியாய் இருந்த நெஞ்சை
கவிதை போல் வெண்மையாக்கி
சாவியாய் தொழுகை தந்த
சத்திய புருஷர் நாமம்
நாவினால் நவின்றால் கூட
நரம்பெலாம் கலிமாச்சொல்லும்.
'லாயிலாஹ இல்லல்லாஹ்
முஹம்மதுர் ரஸூலுல்லாஹ்'
எல்லாப் புகழும் உருவில்லா
இறைவனுக்கே அல்ஹம்துலில்லாஹ்!!
      

  
எண்சீர் விருத்தம்.

நெறிகெட்ட காபிர்கள் மக்காவெங்கும்
             நெருப்போடு இணைவைத்து வணங்கும்வேளை
தறிகெட்டோர் வெறிகொண்டு கஃபாவெங்கும்
             தங்கத்தால் சிலைவைத்து களிக்கும்வேளை
புரியாத மாந்தர்கள் நபிகள் நெஞ்சை
             புண்ணாக்கி பழியுரைகள் கூறும் வேளை
அறியாமை இருள்விலக இஸ்லாம் மார்க்கம்
            அண்ணலார் பொறுமையினால் தளைக்கலாச்சு!


கருணைமிகு எம்பெருமான் மக்கா நகரில்
             காலாற அவ்வேளை நடந்து வந்தார்.
தெருவழியே ஒருகிழவி தலையில் மூட்டை
            சுமந்தபடி முனகலுடன் முன்னே வந்தாள்.
கிறுகிறுப்பு தரும்வெயிலில் நடந்துவந்த
            கிழவியவள் நிலைகண்டு முன்னே சென்ற
திருநபியோ 'என்தாயே உங்கள் சுமையை
             நான்தலையில் சுமக்கின்றேன் தருவீர் என்றார்


'இல்லைநான் தொலைதூரம் செல்லவேண்டும்
            வீண்சிரமம் உமக்கெதற்கு' விலகுமென்றாள்.
வெள்ளைமனம் உள்ள நபி அவளைப் பார்த்து
            வெகுதூரம் சென்றாலும் வருவே னுங்கள்
பிள்ளைபோல் எனை எண்ணி தருவீரென்று
            பிரியமுடன் அவளிடத்தில் கேட்டுநின்றார்
சுள்ளென்ற வெயில்பொழுதில் நபிகள் தலையில்
           சுமைஏற்றி அவள்பின்னே நடக்கலானாள்...!

'தள்ளாடும் இவ்வயதில் நீங்க ளுங்கள்
           தாய்மண்ணை விட்டுஏன் போகின்றீர்கள்..
பிள்ளைகள் உள்ளனரா அங்கு?' என்;று
           தொலைதூரம் சென்றநபி வினவலானார்.
'பொல்லாத ஒருகொடியோன் எங்கள் முன்னோர்
          வணங்கிவரும் தெய்வமெலாம் பொய்என்கின்றான்
'அல்லாஹ்'வை வணங்கட்டாம் என்று சொல்லி
           ஆத்திரத்தை கிளப்பு கிறான் அதனால் போறேன்'


'கல்லெடுத்து அவன் தலையை உடைக்கும் சக்தி
           கடுகளவும் எனக்கில்லை அதனால் போறேன்.
கொள்ளையிலே போகட்டும் 'முஹம்மத்' என்னை
            கொன்றாலும் அவன்பேச்சை கேட்கமாட்டேன்.
எல்லோரும் அவன் வழியில் போனால் கூட
            ஒருபோதும் அவன்வழியில் போகமாட்டேன்.
நில்லேன்நான்  அவனில்லா ஊரை நோக்கி
            நிம்மதியை தேடித்தான்; போறேன் என்றாள்.'

வறுமைப்பூ தன்வாழ்வில் பூத்தபோதும்
            வயிற்றினிலே கல்சுமந்து நின்றமன்னர்.
பொறுமையினை எளிமையினை நேர்மைதன்னை
             பொக்கிஷமாய் வைத்திருக்கும் எங்கள்தூதர்.
அருமைநபி 'அல்லாஹ்'வின் அருளினாலே
            அருங்குணங்கள் அத்தனையும் கொண்ட அண்ணல்.
சிறுமையுடன் அவள்சொன்ன பேச்சை கேட்டு
            சிறிதளவும் கோபமின்றி தொடர்ந்து சென்றார்.

கேவலமாய் ஒருவர் எமை கேலிசெய்தால்
            கேட்டிருந்து ரசிப்போமா உடனேபேசும்
நாவறுத்து அவர்கையில் கொடுத்துவிட்டு
            நம்சக்தி என்னவென்று காட்டுவோமா?
சாபமிட்ட கிழவியவள் சுமையைத் தூக்கி
            சாந்திநபி சாந்தமுடன் செல்லுகின்றார்.
கோபமென்ற சொல்கூட அறியா தந்த
            கோமகனின் பொறுமையினை என்னவென்பேன்.

செல்லுமிடம் சேர்ந்ததனால் தலையின் சுமையை
             வள்ளல்மனம் உள்ளநபி இறக்கி வைத்து
'நல்லபடி வந்துவிட்டோம் மகிழ்ச்சி 'உம்மா'
            நான்சென்று வருகின்றேன்' என்றார் பணிவாய்.
'எல்லையற்ற பேரன்பு உள்ளம் கொண்ட
            பிள்ளைநீர் யாரென்று' கிழவி கேட்டாள்.
அல்லல்தரும் கொடியவனாய்  நீங்கள் சொன்ன
            பொல்லாத நபிமுஹம்மது நான்தான் என்றார்.

சங்கைமிக்க நபிபெருமான் வார்த்தை கேட்டு
            கங்கைபோல் நீர்பெருக அழுதமாது
தங்கமனம் படைத்;தவரே! நபியே உம்மை
           தவறாகப் பேசியதை மன்னியுங்கள்.
உங்களது பொறுமையினால் இஸ்லாம் மார்க்கம்
          உலகமெலாம் பரவுமிது உண்மையென்று
அங்கமெல்லாம் நடுநடுங்க ஈமான் கொண்டு
         அண்ணலார் கரம்பற்றி கலிமா சொன்னார்.

(வேறு)

'ஹாத்தமுன்' நபியின் பொறுமையை பற்றி
கவிதை படிப்பேனா.-இல்லை
கருணைநபி பட்ட கஷ்டங்கள் பற்றி
கண்ணீர் வடிப்பேனா..?

தொழுதிடும் நபியினில் அழுகிய குடலை
தூக்கிப் போட்டார்கள்-நபியோ
அழுதவர் நிலையை மாற்றிட இறையிடம்
'துஆக்கள்' கேட்டார்கள்.

நபியினைப்பார்த்து பைத்தியமென்று
கைகொட்டி சிரித்தார்கள்-நபியோ
மனிதனாய் அவர்கள் மாறிட இறையிடம்
கைகளை விரித்தார்கள்.

அண்ணலின் தோழர்கள் நெஞ்சிலே எதிரிகள்
அம்பினை தொடுத்தார்கள்-நபியோ
உண்ண வழியின்றி வந்த எதிரிக்கு
உணவும் கொடுத்தார்கள்.

'அபுலஹப்' உட்பட 'குறைஷிகள'; அனைவரும்
கல்லை எறிந்தார்கள்-நபியோ
குறைஷிகள் உட்பட அடிமை யிடத்திலும்
அன்பை சொரிந்தர்கள்.

பாதையில் காபிர்கள் பதுங்கி இருந்து
பாய்ந்து அடித்தார்கள்-நபியோ
போதையில் ஆடிடும் அவர்நிலை மாறிட
தினமும் துடித்தார்கள்.

சூனியக்காரன் 'முஹம்மது' என்று
பெண்களும் பழித்தார்கள்-நபியோ
பெண்களை உயிருடன் புதைக்கின்ற கொடிய
பேதமை ஒழித்தார்கள்.

இறைவன் ஒன்றென சொன்ன தற்காக
இழிவாய் நினைத்தார்கள்-நபியோ
இன்னல் தந்திட்ட எதிரியை மார்புடன்
இழுத்து அணைத்தார்கள்.

கட்டிய கடவுள்கள் பொய்யென சொன்னதும்
எட்டி உதைத்தார்கள்;-நபியோ
வெட்டி எறிந்திட வந்தவரிடமும்
சென்று கதைத்தார்கள்.

கோத்திரச் சண்டையில் மூழ்கியோர் பள்ளியில்
மூத்திர மடித்தார்கள்-நபியோ
ஆத்திரம் கொண்டு அடித்து விடாதவர்
மனதை படித்தார்கள்.

'கலிமா'ச்சொன்ன 'ஸஹாபிகள்' தலையினை
கொய்து முடித்தார்கள்-நபியோ
கொய்தவர் கொண்டு  இறையருள் பணிகளை
செய்து முடித்தார்கள்.

நபியவர் தலையினில் நாளும்பெண்கள்
குப்பையை போட்டார்கள்-நபியோ
மனபிறழ்வாக  நடந்திட்ட அவருக்கு
மருந்தினை போட்டார்கள்.

கொடுத்த வாக்கை மறந்துவிட்டு
கொட்ட மடித்தார்கள்-நபியோ
உண்மை என்ற கொடியை நாளும்
உயர்த்திப் பிடித்தார்கள்.

சத்திய தூதர் நபியிடம் கூட
சந்தேகப் பட்டார்கள்.-நபியோ
சற்றும் தளர்வின்றி பொறுப் பதிலேதான்
சந்தோசப் பட்டார்கள்.

கயவர்கள் கதைகளை சிறுவர்கள் கேட்டு
கற்களை எறிந்தார்கள்-நபியோ
சின்னஞ் சிறுசுகள் செயல்களை கண்டு
புன்னகை  புரிந்தார்கள்.

எதிரிகள்கூடி மாநபி தோழர்கள்
நெஞ்சை பிளந்தார்கள-நபியோ
நஞ்சைக் கலந்திட வந்தவர் நெஞ்சிலும்
அன்பைக் கலந்தார்கள்.

நிலவு முகத்தில் எச்சிலை துப்பி
நிம்மதி கண்டார்கள்-நபியோ
சேவகம் செய்யும் மனிதர்களோடும்
சேர்ந்தே உண்டார்கள்.

ஆண்டவன் ஒருவன் என்பவர் குரல்வளை
அறுத்திடச் சொன்னார்கள்.-நபியோ
கொடுமை கண்டு கொதித்திட்ட 'உமரிடம்'
பொறுத்திடச் சொன்னார்கள்.

பரிவுள்ள நபிதலை கொய்திடின் அவருக்கு
பரிசுண்டு என்றார்கள்.-நபியோ
உண்மையை அன்பினை நெஞ்சினில் பற்றியே
உலகத்தை வென்றார்கள்.

பாவிகள் அனுதினம் பழியுரை கூறியே
பல்லினை உடைத்தார்கள்.-நபியோ
சத்திய வேதத்தை உலகெலாம் பரப்பி
சரித்திரம் படைத்தார்கள்.

பகைவர்கள் நண்பராய் பாங்குடன் நடித்து
பழியினை தீர்த்தார்கள்.-நபியோ
அநீதிகள் செய்த 'அபூசுபியானையும்'
அணியிலே சேர்த்தார்கள்.

அவதூறென்னும் சேற்றினை நபியிடம்
அள்ளி எறிந்தார்கள்.-நபியோ
கீழ்தரமாக மக்கள் நினைப்பதை
கிள்ளி எறிந்தார்கள்.

தாயிப் நகரின் வீதியில் அவரை
தாக்கி மிதித்தார்கள்.-நபியோ
தனக்குஏசிய தாயவள் சுமையை
தூக்கி மதித்தார்கள.

பிடரி சிவந்து நோகுமளவுக்கு
பிடித்து இழுத்தார்கள்.-நபியோ
அழுக்கு படிந்து கிடந்த மனதை
அன்பால் வெளுத்தார்கள்.

நபியவர் கொள்கையின் உண்மை அறிந்தும்
நாளும் மறுத்தார்கள்-நபியோ
நாளை யொருநாள் விடிந் திடுமென்று
யாவும் பொறுத்தார்கள்.

பொறுமையின் சிகரம் நபிதா னென்று
சொல்லி முடிப்பேனா.-இங்கு
இன்னும் அவர்துயர் சொல்லிடப்போனால்
அழுதிடும் என்பேனா...!!



22.5.11


செவ்வாய், 17 மே, 2011

இலங்கையின் 'விக்கிலீக்ஸாக' திகழும் ''இருக்கிறம்.

தமிழ்பேசும் மக்களின் தனித்துவ குரலாக இலங்கையின் 'விக்கிலீக்ஸாக' திகழும் ''இருக்கிறம்'' சஞ்சிகையில் 16.5.2011 அன்று வெளிவந்துள்ள எனது நேர்காணல்.
இந்த சஞ்சிகையை www.irukkiram.tk என்ற இணையத்தளத்தினூடகவும் வாசகர்கள் பார்வையிடலாம்.




நேர்கண்டவர்: வர்ஷினி
நன்றி:  இருக்கிறம்.


சனி, 14 மே, 2011

மலேசியா மாநாட்டில் கவிதைபாடும் கவிஞர் பொத்துவில் அஸ்மின்

'மலேசியா மாநாட்டில் கவிதைபாடும் கவிஞர் பொத்துவில் அஸ்மின்''என்ற தலைப்பில் அமைந்துள்ள இந்த செய்தி''தினகரன் வாரமஞ்சரியில்''  இன்று15.5.2011 வெளியாகியுள்ளது.


'

படைப்பாளி அறிமுகம் -13 கவிஞர் கிண்ணியா சபருள்ளா

இலங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் கிண்ணியா சபருள்ளா திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேசத்தில், அடப்பனார் வயல் எனும் இடத்தை பிறப்பிடமாக கொண்டவர்.

கிண்ணியா மத்திய கல்லூரி,கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் தனது சட்டமானி பட்டத்தை நிறைவுசெய்து அதிலே சிறப்பு தேர்ச்சி பெற்று சட்டபீடத்திலே சிறிது காலம் விரிவுரையாளராக கடமையாற்றினார்.அதன் பிற்பாடு இவர் கடந்த 7வருடங்களாக திருகோணமலை மாவட்ட நீதிமன்ற தொகுதியில் முன்னணி சட்டத்தரணியாக திகழ்வதோடு கிண்ணியா மாநகரசபையின் பிரதி மேயராகவும் கடமையாற்றி வருகின்றார்.

சட்டம், அரசியல்,சமூகம், மற்றும் இலக்கியம்,ஆன்மீகம் என பன்முகத்தளத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர் கிண்ணியா சபருள்ளா கவிதை, சிறுகதை, பாடுதல், பாடலியற்றல், பட்டிமன்றம், இசை,மேடைப்பேச்சு  என பல தளங்களில் தனது முத்திரையை பதித்துவருகின்றார்.
1989களில் எழுத்துலகுக்குள் நுழைந்த இவர்  இதுவரை 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளையும் அரசியல் கட்டுரைகளையும் இலங்கையின் தேசிய பத்திரிகைகள் சஞ்சிகைகளில் எழுதியிருக்கின்றார்.
இவரது முதலாவது கவிதை நூல் 'வியர்த்தொழுகும் மாலைப்பொழுது' அண்மையில் வெளியிடப்பட்டு பலரதும் கவனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 தனது காத்திரமான கவிதைகள் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்துறையில் முத்திரை பதித்துவரும்  கவிஞர் கிண்ணியா சபருள்ளாவை  நாமும் வாழ்த்துவோம்.


ஞாயிறு, 8 மே, 2011

படைப்பாளி அறிமுகம் -12 கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன்

லங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன் யாழ்ப்பாணம் நுணாவிலை பிறப்பிடமாக கொண்டவர்.
யாழ் மானிப்பாய் இந்துக் கல்லூரி, கிழக்கு பல்கலைக்கழகம் என்பவற்றின் பழைய மாணவரான இவர் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் வாழ்ந்து வருகின்றார்.



ஜேர்மனிய மொழி போதனாசிரியரான மட்டுவில் ஞானக்குமாரன் 
கவிஞர், எழுத்தாளர் , பாடலாசிரியர், குறுந்திரைப்பட இயக்குனர் என பன்முக ஆளுமைகொண்டவர்.
இவர் ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக புலம்பெயர் இலக்கியத்துக்கு வளம் சேர்த்து வருகின்றார்.


கவிதை, சிறுகதை, மேடை நாடகம், வானொலி நாடகம், குறுந்திரைப்படம் என பல துறைகளிலும்  தனது திறமை பறைசாற்றிவரும் மட்டுவில் ஞானக்குமாரனின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகளிலும் சர்வதேச சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளன. இணையத்தில் வெளிவரும் பல இலக்கிய சஞ்சிகைளிலும் தொடர்ந்து எழுதிவருகின்றார்.

2008ம் ஆண்டு தகவம் அமைப்பினரால் தேசிய மட்டத்தில் நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் 'பள்ளிக்கூடம்' சிறுகதைக்காக முதலாம் பரிசினை வென்று 'தகவம் விருதினை'  பெற்றிருக்கும் இவர் சுடர்ஒளி  பத்திரிகை சர்வதேச மட்டத்தில் நடத்திய சிறுகதைப் போட்டியில்  சிறப்பிடத்தையும் பெற்றிருக்கின்றார்.


'வெளிச்ச வீடுகள்' எனும் கவிதை இறுவட்டை பின்னணி இசையோடு தனது குரலில்  வெளியிட்டிருக்கும் மட்டுவில் ஞானக்குமாரன்  லண்டன் தமிழ் வானொலியில் ஒலிபரப்பான 'கரையை தேடும் ஓடங்கள்' எனும் வானொலி நாடகத்தை எழுதி, இயக்கி, நடித்து பலரதும் பாராட்டை பெற்றிருக்கின்றார் .

வசந்தம் வரும் வாசல் (2004) முகமறியாத வீரர்களுக்காக (2000) சிறகு முளைத்த தீயாக (2011) எனும் மூன்று கவிதை நூல்களை இலக்கிய உலகுக்கு தந்திருக்கும் இவர் தற்போது 'ஒரு துளி கண்ணீர்' என்ற குறுந்திரைப்படத்தை இயக்கி வருகின்றார். இவரது ''ஊருக்குள் நூறு பெண்கள்'' சிறுகதை நூல் மிகவிரைவில் வெளிவருகின்றது.

தனது காத்திரமான கவிதைகள் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்துறையில் முத்திரை பதித்துவரும்  கவிஞர் மட்டுவில் ஞானக்குமாரன்
அவர்களை நாமும் வாழ்த்துவோம்.


செவ்வாய், 3 மே, 2011

இலக்கிய மாநாட்டிற்கு பொத்துவில் அஸ்மினின் கவிதை தெரிவு

 ''இலக்கிய மாநாட்டிற்கு பொத்துவில் அஸ்மினின் கவிதை தெரிவு'' எனும் தலைப்பில் இலங்கையின் ''எங்கள் தேசம்'' பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தி


நன்றி
*எங்கள் தேசம் (01.5.11)

திங்கள், 2 மே, 2011

படைப்பாளி அறிமுகம் -11 எழுத்தாளர் வீ.ஜீவகுமாரன்.


புலம் பெயர் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான வீ.ஜீவகுமாரன் அவர்கள் யாழ்ப்பாணம் சங்கானையை பிறப்பிடமாகக் கொண்டவர்.
இவர் தற்போது டென்மார்க் அரச நூலகத்தின் தமிழ் பகுதி பொறுப்பாளராகவும் மொழி பெயரப்பாளராகவும்  கடமை புரிந்து வருகின்றார்.

கவிதை,சிறுகதை,நாவல்,பதிப்புத்துறை போன்றவற்றில் தடம்பதித்துவரும் இவரது படைப்புக்கள்  புலம்பெயர் இதழ்களிலும் இணையத்தளங்களிலும் இலத்திரனியல் ஊடகங்கள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன.


தமது வெளியீடாக வரும் நூல்களை  இலவசமாக இலங்கையில் உள்ள தமிழ் பாடசாலை நூலகங்களுக்கு வழங்கும் முனைப்போடு செயற்பட்டு வரும்
விஸ்வசேது இலக்கியபால பதிப்பகத்தின்  பொறுப்பாளராக இருக்கும் இவர் 'மக்கள் மக்களால் மக்களுக்காக' என்ற நாவலுக்காக சிறந்த நாவலுக்குரிய பரிசினை பெற்று அண்மையில் மட்டக்களப்பு எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் 'தமிழியல் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
அத்தோடு 'தகவம்' கதைஞர் வட்டம் நடாத்திய தேசிய மட்ட சிறுகதைப்போட்டியில்

•    கிராமத்து பெரிய வீட்டுக்காரி
•    அகால மரணம்


ஆகிய சிறுகதைகளுக்காக முதலாம் இரண்டாம் இடங்களை பெற்றிருக்கின்றார்.


2008ம் ஆண்டு இணையத்தளத்தில் எழுதும் இளையோர்களின் கவிதைகளை தொகுத்து 'மெல்லத் தமிழினி துளிர்க்கும்' எனும் பெயரில் நூலாக  வெளியிட்டிருக்கும் இவர்


    டெனிஷ் - தமிழ் - ஆங்கில மருத்துவ அகராதியும் கையேடும்

    யாவும் கற்பனைஅல்ல (சிறுகதை தொகுதி)

    மக்கள் மக்கள் மக்களுக்காக (நாவல்)

    சங்கானைச் சண்டியன்  (சிறுகதை தொகுதி)

    இப்படிக்கு அன்புள்ள அம்மா (மொழி பெயர்ப்பு நூல் )



ஆகிய நூல்களை வெளியிட்டிருப்பதோடு ஈழத்து எழுத்தாளர்கள்
50 பேரின் சிறுகதைகளை தொகுத்து 'முகங்கள்' எனும் பெயரில் நூலாகவும் வெளியிட்டுள்ளார்.


தனது எழுத்துக்கள் மூலம் ஈழத்து எழுத்துத்துறைக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர் வீ.ஜீவகுமாரனை நாமும் வாழ்த்துவோம்.

ஞாயிறு, 1 மே, 2011

படைப்பாளி அறிமுகம் -10 - கவிதாயினி நிஹாஸா நிசார்



இலங்கையின் கம்பஹா மாவட்டத்தில் ''கஹட்டோவிட்ட'' என்ற இடத்தை பிறப்பிடமாக கொண்ட 'நிஹாஸா நிஸார்' ஒரு வளர்ந்து வரும் கவிஞரும், எழுத்தாளருமாவார்.

கஹட்டோவிட்ட முஸ்லிம் பாலிகா வித்தியாலயம், மாவனல்லை ஸாஹிரா தேசிய பாடசாலை ஆகியவற்றின் பழைய மாணவியான இவர் தனது தீவிரமான வாசிப்பின் ஊடாகவும் ஆசிரியர்களின் வழிநடத்தல் போன்றவைகளாலும் இன்று ஒரு எழுத்தாளராக பரிணமித்திருக்கின்றார்.


கற்கின்ற காலத்தில் எழுத்துத்துறைக்குள் நுழைந்த  இவரின்;
கவிதை, சிறுகதைகள் இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் களம்கண்டுள்ளன.
உயர்தரம் கல்வி கற்கும் காலத்தில் இலக்கிய போட்டிகளில் கலந்துகொண்டு பல தடவை வெற்றியீட்டியுள்ளார்.குறிப்பாக இவர் 2002 ம் ஆண்டு அகில இலங்கை மட்டத்தில்  நடாத்தப்பட்ட தமிழ் தினப்போட்டியில் கவிதைப் பிரிவில் 2ம் இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்படுள்ளார்.

இவரது முதலாவது கவிதை நூல் 'கண்ணீர் வரைந்த கோடுகள்'' அண்மையில் 'வேகம்' பதிப்பகத்தின் வெளியீடாக வெளிவந்து இலக்கிய ஆர்வலர் பலரதும் கவனத்தை பெற்றுள்ளது.




இவர் தனது அடுத்த வெளியீடாக 'பூமாலையாகாமல்....' என்ற நாவலை தர இருக்கின்றார். கணவரோடு கட்டாரில் வசித்து வரும் இவர் அங்கிருக்கும் தனிமை,வெறுமை மட்டுமல்லாது  வாழ்வின் பல கூறுகளையும் கவிதைகளால் மொழி பெயர்க்க முயல்கின்றார்.
இவரது படைப்புலக பணி மேலும் சுவடுகளை  பதிக்க நாமும் வாழ்த்துவோம்.






படைப்பாளி அறிமுகம் -09 - கவிஞர் மன்னார் அமுதன்


லங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் மன்னார் அமுதன்; மன்னார் மாவட்டத்தில் சின்னக்கடை என்ற இடத்தை பிறப்பிடமாக கொண்டவர்.
கவிஞருடன் & கவிஞர் கிண்ணியா அமீர் அலி
 இளநிலை கணணி விஞ்ஞானவியல் பட்டதாரியான இவர் அமைச்சின் தகவல் தொடர்பு மற்றும் வலையமைப்புப் பிரிவில் அபிவிருத்தி உதவியாளராக கடமையாற்றி வருகின்றார்.


கவிதை, சிறுகதை, கட்டுரை, திறனாய்வு போன்ற துறைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும்  இவரின் படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்,சஞ்சிகைகள்  மற்றும் இணைய சஞ்சிகைகள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன. தனது வலைப்பூவிலும் தனது படைப்புக்களை படைத்துவருகின்றார்.



கொழும்பு தமிழ்சங்கம், மன்னார் தமிழ்சங்கம், கொழும்பு திருமறை கலாமன்ற இலக்கிய பாசறை பொறுப்பாளராகவும் மன்னார் இலக்கியவட்டத்தின் தலைவராகவும்  இருக்கும் இவர்  வானொலி, தொலைக்காட்சி கவியரங்கங்களிலும் பங்குபற்றி தனது கவிதை ஆளுமையை வெளிப்படுத்தி  வருகின்றார். இவர் மன்னார் செம்மொழி மாநாட்டின் கவியரங்கில் பாடிய கவிதை இவரது ஆளுமையை அளவிட போதுமானது.


2009இல் வெளிவந்த இவரின் முதலாவது கவிதைத் தொகுதியான   
'விட்டு விடுதலை காண்'  வெளிப்படுத்திய அதிர்வு தணிவதற்குள்  அண்மையில் 'அக்குரோணி' என்ற பெயரில் மற்றுமொரு கவிதை நூலை இலக்கிய உலகுக்கு தந்திருக்கின்றார்.மரபில் புதுமையையும் புதுமையில் மரபையும் கலந்து கவிபாடும் இவரது கவித்துவத்தையும் தனித்துவத்தையும் இத்தொகுதியில்  தரிசிக்க  முடியும்.

தனது காத்திரமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்தில் முத்திரை பதித்துவரும் கவிஞர் மன்னார் அமுதனின்   படைப்புலக பணி மேலும் சுவடுகளை  பதிக்க நாமும் வாழ்த்துவோம்.!!