'தடாகம்' கலை இலக்கிய வட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவிஞர் எஸ்.ஜனூஸ் எழுதிய ''தாக்கத்தி'' கவிதை நூல் வெளியீட்டு விழாவில் இடம்பெற்ற சிறப்பு கவியரங்கில் பாடப்பட்ட கவிதை.(20.2012)
இறைக்கும்
இறை மறைக்கும்
உண்மை உரைக்கும்
உயர் நபிக்கும்
என்னை முறைக்கும்
இந்த அறைக்கும்
எங்கள் பிறைக்கும்
கண்டு விறைக்கும்
கலைத் துறைக்கும்
அதன் திரைக்கும்...
என்னை அணைக்கும்
கல்முனைக்கும்
இங்கே இணைக்கும்
தாக்கத்திக்கும்....
இந்த அவைக்கும்
கவிஞர் சபைக்கும்
கவிதை சுவைக்கும்
உங்கள் செவிக்கும்....
இந்த புவிக்கும்...
இங்கே முளைக்கும்
எங்கள் கலைக்கும்
என்னை அழைக்கும்
தமிழ் மழைக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும்...!
நான் உரைக்கும் கவிதை
இனிக்கும் பின்னர் இடிக்கும்
உறைக்கும்-மென்மை
குறைக்கும்-நெஞ்சை
கரைக்கும்-கொஞ்சம்
குரைக்கும்
பொத்துவிலின் முன்னேற்றத்துக்கு உழைத்த பல்துறையை 33 பேர் பொத்துவில் பிரதேச சபையினால் அண்மையில் கௌரவிக்கப்பட்டனர்.அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படம்.எனது அருகில் பொத்துவிலின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சங்கர் அவர்கள் காணப்படுகின்றார்.
இது நான் புதிதாக இசையமைப்பாளர் ஷமீலின் இசையில்
எழுதியுள்ள பாடல்.உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
மிகவிரைவில் பாடலை நீங்கள் கேட்கலாம்.
பல்லவி
கொண்டாடா 'ஜில்ஜில்' சோடா
கொண்டாட 'புல்புல்' வாடா
துண்டாடும் கவலை தான்டா...
தூக்கிப் போடு
தூரம் தான்டா....!
அரிவாளை நெஞ்சில் தீட்டடா
அறிவாலே வென்று காட்டடா
அறியாமை அடித்து ஓட்டடா...
அஞ்சும் நெஞ்சை
கொல்வோம் வாடா...
'வெற்றி'யின் வெற்றிப்பாட்டு எட்டு திக்கும் கேக்கட்டும்
நெற்றியின் வியர்வை பட்டு பூமி பூக்கட்டும்
நாசங்கள் உன்னை கண்டால் கைககள் கட்டி நிற்கட்டும்..
'நாசாவும்'உன்னிடத்தில் பாடம் கற்கட்டும்...!
நண்பா வா.....
நண்பா வா...
நண்பா வா....
வானம் பூமி உனக்காய்தான்டா...
(கொண்டாடா 'ஜில்ஜில்' சோடா)
(சொல்லிசை - Rap)
உழவர்கள் உழுது
உலகமே அழுது
மறைந்திட்ட பொழுது
தோன்றாதே...
சந்தக் கவிதைகளால் சங்கத்தமிழுக்கு சரிகை கட்டி சாகாவரம் பெற்ற படைப்புக்களால் பல மனங்களுக்குள் பந்தலிட்டிருப்பவர் கவிஞர் கிண்ணியா அமீர் அலி அவர்கள்.
கொழும்பு, வடக்கு, கலைமகள் தமிழ் வித்தியாலயத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் இவர் பத்திரிகை ஜாம்பவான் அமரர் எஸ்.டி. சிவநாயகம் அவர்களின் 'சிந்தாமணி' மூலம் பட்டை தீட்டப்பட்ட, நாடறிந்த நல்லதொரு மரபுக் கவிஞர்.
கலாபூஷணம் கவிஞர் ஏ.எம்.எம். அலி அவர்களிடம், 'கவிதை யாப்பிலக்கணம்' கற்றுத் தேர்ந்த இவர், சிறுகதை, நாடகம், குறுங்காவியம், மெல்லிசைப் பாடல்கள் எனப் பல்துறை சார்ந்து இலக்கியமே மூச்சாக இயங்கி வருகின்றார்.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியாவை பிறப்பிடமாககொண்ட இவர்
1984 ஆண்டு 'பதவி' என்ற கன்னிக்கவிதை மூலம் இலக்கிய உலகுக்குள் நுழைந்தார். அன்றிலிருந்து இற்றைவரை சுமார் 500க்கும் மேற்பட்ட கவிதைளையும் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியிருக்கும் இவர் 100க்கும் மேற்பட்ட பல மெல்லிசைப் பாடல்களையும் இலங்கையின் முக்கியமான இசையமைப்பாளர்களின் இசையில் எழுதியுள்ளார்.
யதார்த்தம் தொனிக்கும் எழுத்து நடையின் சொந்தக்காரரான
கிண்ணியா அமீர் அலி ஹாஸ்யம் கலந்து எழுதுவதில் தேர்ச்சிபெற்றவர்.தனது அனுபவங்களை ஒளிவு மறைவின்றி இயல்பாக இலக்கியத்தினூடக வெளிப்படுத்துவதில் தயங்காதவர். கவியரங்குகளில் சந்தக் கவிதைகள் பாடும் இவரை, கம்பவாரிதி இ. ஜெயராஜ் அவர்கள் 'இஸ்லாமிய அருணகிரிநாதர்' என்று பாராட்டியுள்ளார்.
இவர் எழுதியுள்ள கவிதைகள், மெல்லிசைப்பாடல்கள் வானொலி நாடகங்கள்; இலங்கையின் தேசிய பத்திரிகை, சஞ்சிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்கள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன.
1988ம் அண்டு தொடக்கம் இலங்கை வானொலியில் பகுதி நேர கலைஞராக பலதரப்படட்ட நிகழ்ச்சிகளில் பங்காற்றிவரும் இவர் கடந்த 5 வருடங்களுக்கும் மேலாக இலங்கை வானொலியில் கவிதைக்களம் நிகழ்ச்சி தொகுத்து வழங்கி வருகின்றார். பிரபல இசையமைப்பாளர் சரத் விக்கரம அவர்களின் இசையில் ஏ.ஏம்.யேசு ரட்ணம் பாடிய 'பணமும் உறவும் நகமும் சதையும்' என்ற தத்துவப்பாடல் இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்த பாடலாகும் இவரது பாடல்கள் 'ரிதம் ஓப் லவ்' என்ற பெயரில் வெளிவந்துள்ளது.
இவரது இலக்கிய பணியை பாராட்டி பலவேறு அமைப்புக்கள் பொன்னாடை போர்த்தி பொற்கிழி வழங்கி கௌரவித்துள்ளன.
குறிப்பாக 2002 ஆம் ஆண்டு பண்டாரநாயக்கா மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ள கவிஞர் கிண்ணியா அமீர் அலி 2009 ஆம் ஆண்டு இலங்கை முஸ்லிம் கலைஞர் முன்னணி விருது விழாவில்'சந்தக் கவிமணி' என்ற பட்டம் சூட்டி கௌரவிக்கப்பட்டுள்ளார். 2011ம் ஆண்டு 'தடாகம்' கலை இலக்கிய பேரவை 'அகஸ்தியர்' விருது வழங்கி இவரை கௌரவித்துள்ளது.
இலங்கையின் வவுனியா மாவட்டத்தின் பம்பைமடு என்னும் அழகிய சிறிய விவசாயக் கிராமத்தில் சேனாதிராஜா நாகலிங்கம், நல்லம்மா தம்பதிகளுக்கு ஏழாவது புதல்வராக 1953 ஆம் ஆண்டு பிறந்தவர் எழுத்தாளர் அகளங்கன். இவரது இயற்பெயர் நா .தர்மராஜா
பம்பைமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும், இடை நிலைக் கல்வியை வவுனியா தமிழ் மகா வித்தியாலயத்திலும், க .பொ .த உயர்தரத்தை யாழ்ப்பாணத்து சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியிலும் பல்கலைக்கழகக் கல்வியை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணித விஞ்ஞானத் துறையிலும் கற்று பின்னர் கணித புள்ளிவிபரவியல் துறையில் பட்டப் படிப்பையும் பூர்த்தி செய்துள்ளார்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக கணித ஆசிரியராகக் கடமையாற்றியுள்ள இவர் பின்னர் அச் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார். அத்தோடு கலை இலக்கிய ஈடுபாடுள்ள இவர் பாடசாலைக் காலத்திலேயே கவிதை எழுதத் தொடங்கினார் வில்லுப்பாட்டு எழுதி நண்பர்களோடு மேடை ஏற்றினார். கவியரங்குகளில் பங்கு கொண்டார். பேச்சுத் துறையில் ஈடுபாடு கொண்டார்.
ஆசிரியப்பணி புரிந்தபோது, சுயமாகவே பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று, பழந்தமிழ் இலக்கியக் கட்டுரைகளை எழுதத் தொடங்கினார். அக்காலத்தில் "இலக்கியச்சிமிழ்", "இலக்கியத்தில் நகைச்சுவை" என்ற தலைப்புக்களில் இரு கட்டுரைத் தொடர்களை சிரித்திரனில் எழுதியதோடு, "வாலி கொலைச்சரமும் கேள்விச்சரமும்" என்ற தலைப்பில் ஈழநாடு பத்திரிகையில் தொடர்கட்டுரை ஒன்றையும் எழுதினார்.தொடர்ந்து ஈழமுரசு, முரசொலி, வீரகேசரி, தினகரன், தினக்குரல் ஆகிய பத்திரிகைகளிலும், பல சஞ்சிகைகளிலும் பல பழந்தமிழ் இலக்கிய கட்டுரைகளை எழுதியிருக்கின்றார். எழுதுவதுடன் பட்டி மன்றங்கள், கவியரங்கங்கள், ஆலயங்களில் சொற்பொழிவுகள் என பல நிகழ்வுகளைச் செய்துள்ளார்.
வானொலி, தொலைக்காட்சி என்பனவற்றிலும் நிகழ்ச்சிகளை வழங்கிய இவரது மெல்லிசைப்பாடல்கள் வெளிவரத்தொடங்கிவிட்டன. அதில் "சேற்றுவயல் காட்டினிலே" என்ற கிராமிய மெட்டுக் கொண்ட பாடல் புகழ் பெற்ற பாடல். எண்பதுகளின் ஆரம்பத்தில் பல சொற்பொழிவுகளை ஆற்றிய இவர், எண்பதுகளின் பிற்பகுதியில் இருந்து ஏராளமான வானொலி நாடகங்களையும் எழுதியுள்ளார்.. தொண்ணூறுகளின் ஆரம்பத்திலிருந்து கவியரங்கங்கள், கவிதைக்கலச நிகழ்வுகளில் ஏறக்குறைய நூறு நிகழ்ச்சிகள் நடத்தி, இளங்கவிஞர்களது பல கவிதைகளை வானலையில் தவழ விட்டார்.
இவரின் ஜின்னாவின் "இரட்டைக்காப்பிய ஆய்வு" என்ற நூல் தமிழ்நாட்டு ஆளுநர் பாத்திமா பீபியால் வெளியிடப்பட்டது. மகாகவி பாரதியாரின் சுதந்திரப்பாடல்கள் ஆய்வு நூல் தமிழ் நாட்டில் வெளியிடப்பட்டது. வாலி ஆய்வு நூல் பட்டப்படிப்பு துணைப்பாடநூலாக பயன்படுகின்றது. ஏற்கெனவே வெளியிடப்பட்ட இவரது 30 நூல்களோடு, - கம்பனில் நான்- கட்டுரைகள்,`தமிழர்- கட்டுரைகள்,`பாரதியாரும் பாவையரும்'-ஆய்வு ஆகிய மூன்று நூல்கள் அச்சில் உள்ளன, அவற்றை விரைவில் வெளியிடவுள்ளார்.
இவருக்கு இதுவரை காவியமாமணி, தமிழ்மணி, திருநெறிய தமிழ் வேந்தர்,கவிமாமணி,தமிழறிஞர், பல்கலைஎழில், புராணபடன புகழ்தகை,புராணபடன வித்தகர், வாகீசகலாநிதி, சிவனருட் செல்வர் ஆகிய பட்டங்களும் தேசிய சாகித்திய மண்டல விருது, வடக்கு கிழக்கு மாகாண சாகித்திய மண்டல விருது, வடக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விருது ஆகிய விருதுகளும் இதுவரை கிடைத்துள்ளன.
''எந்தன் காதலி'' இது புதிய ஆண்டின் புத்தம் புதிய பாடல். இசையமைப்பாளர் வேரணண் அவர்களின் இசையில் நான் எழுதியுள்ள இந்த பாடலை லண்டனை சேர்ந்த பாடகர் ஆனந் பாடலை பாடியுள்ளார்.அழகான காட்சியமைப்புக்களுடன் பாடல் வெளிவந்துள்ளது.
இந்த பாடல் உருவான விதம் சுவாரசியமானது.எனது முகநூலில் நான் தினம் தினம் கவிதை மாதிரிகளையும் என்னுடைய பாடல் வரிகளையும் விதைப்பது வழக்கம்.அதை கண்ணுற்ற ஆனந் மற்றும் வேரணன் ஆகியோருக்கு வரிகள் பிடித்துப்போக என்னை ஆச்சரியப்படுத்தும் ஆர்வத்தில் பாடலுக்கு இசையமைத்து பாடி புத்தாண்டு பரிசாக எனக்கு அனுப்பிவைத்தார்கள்.
ஒரு சில வரிகள் நான் முன்பு எழுதியுள்ள பாடலில் இடம்பெற்றுள்ளன.அதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.இருந்தும் இசை அதற்கு வித்தியாசமாக ஆடைகட்டி அழகு பார்த்திருக்கிறது....
Singer: Ananth VS (UK) Lyrics: Kavignar Asmin (Sri-Lanka) Music: Vernon G Segaram (UK) Video Editing: Ragenthan K (UK) Starring - RaguJan - RJ Cinematography | Edit | Direction - Cinematic Production.
மலையக மண்ணில் இதுவரை வெளிவந்த நாவல்களுக்கெல்லாம் சிகரமா திகழ்வது 'குருதி மலை' என்ற நாவலாகும். இந்த நாவல் ஒரு இலக்கிய பிரதி மட்டுமல்லாது ஒரு காலகட்ட வரலாற்று ஆவணமாகவும் விளங்குகின்றது. இலங்கை அரசின் தேசிய சாஹித்திய மண்டல விருதினை பெற்றிருக்கும்; இந்த நாவல் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஆயு பட்டப்படிப்புக்கு பாடநூலாகவும் வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புக்கள் பல பெற்ற நாவலினை தமிழ் உலகுக்கு தந்த பெருமைக்குரியவர்தான் எழுத்தாளர் DR.தி.ஞானசேகரன் அவர்கள்.
கடந்த 4 தசாப்தகாலத்துக்கும் மேலாக இலக்கிய பணியில் ஈடுபட்டு ஈழத்து இலக்கிய பரப்பில் தனது வேரினை ஆழப்பதித்திருக்கும் எழுத்தாளர் ஞானசேகரனை ஈழத்தின் பிரபல இலக்கிய இதழான 'மல்லிகை'யும் தனது முகப்பில் பதித்து கௌரவப் படுத்தியுள்ளது.
எழுத்தாளர்.தி.ஞானசேகரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் புன்னாலை கட்டுவான் என்ற கிராமத்தை பிறப்பிடமாக கொண்டவர்.ஆரம்பக்கல்வியை உரும்பிராய் இந்துக்கல்லூரியில் கற்றார். பின்னர் இலங்கை மருத்து கல்லூரியில் மருத்துவ கல்வியினை பெற்றுக்கொண்டார்.அதனை தொடர்ந்து மலையகத்திலே மூன்று தசாப்தத்துக்கும் மேலாக வைத்தியராக கடமையாற்றினார். யாழ்பாணத்திலும் மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்களே சிறுகதைகளாகவும்இ நாவல்களானவும் மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.
ஈழத்தின் சிறுகதை இலக்கிய வளர்ச்சியினை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த இவரது படைப்புக்களில் புதிய நோக்கு இழையோடுகிறது. ஆழமான சமுதாய பார்வையை வீசி நிற்கும் இவரது கதைகளில் சுபீட்ஷமும் செழுமையும் நிறைந்து புதிய தொரு தரிசனத்தை தருகின்றன.
ஒரு தசாப்தகாலமாக 'ஞானம்' என்ற கலை இலக்கிய சஞ்சிகையினை இடைவிடாது மாதந்தோரும் வெளியிட்டு வரும் இவர் ஒரு வைத்தியராக இருந்தும் கலைமீது கொண்ட தீராத காதலால் பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பபையும் நிறைவுசெய்துள்ளார்.
உலகளாவிய ரீதியல் நடைபெற்ற பல கலை இலக்கிய நிகழ்வுகள் பலவற்றில் பங்குபற்றியுள்ள இவர் இலங்கையில் நடைபெற்ற உலக தமிழ் எழுத்தாளர் விழாவின் இணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பல தேசிய மட்ட இலக்கிய போட்டிகளில் பரிசில்கள் விருதுகள் பெற்றுள்ள எழுத்தாளர் ஞானசேகரன் அவர்களுக்கு இலங்கை அரசின் கலாபூஷண விருதும் வழங்கப்பட்டுள்ளது.
ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. அதில் 'அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும்' என்ற இவரது சிறுகதை நூல் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பாட நூலக வைக்கப்பட்டுள்ளது.
படம்:பனைமரக்காடு
இயக்குனர்:கேசவராஜன்
இசை:விமல் ராஜா
பாடலாசிரியர்: கவிஞர் அஸ்மின்
பாடகர்: ஆனந்
தயாரிப்பு:செவ்வேள்
நடிப்பு:அக்ஷரா & ஜெகதீஸ்
ஈழத்தில் தமிழ் திரைப்படம் சாத்தியமா என்ற கேள்விக்கு பதில் சொல்ல வருகிறது 'பனைமரக்காடு' முழுநீள தமிழ் திரைப்படம் .இப்படத்தை இயக்குனர் கேசவராஜ் இயக்கியிருக்கின்றார்.இத்திரைப்படத்தில் தென்னிந்திய கலைஞர்களோடு ஈழத்து கலைஞர்களும் நடித்துள்ளனர்.
முற்று முழுதாக யாழ்மண்ணில் படப்பிடிப்புக்கள் நடாத்தப்பட்டுள்ளன.இத்திரைப்படத்தில் ஜெகதீஸ் கதாநாயகனாகவும் கதாநாயகியாக அக்சராவும் நடிக்கின்றனர்.இத்திரைப்படத்தில் 7 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
பாடல்களை முகேஷ் மாணிக்கவிநாயகம் பாலாஜி ஆனந்த் இன்னும் பல முன்னணி பாடகர்கள் பாடியுள்ளனர்.இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு அருமையான பாடலை உங்களுக்கு நாம் தருகின்றோம். இசையமைப்பாளர் விமல் ராஜாவின் இசையில் கவிஞர் பொத்துவில்அஸ்மின் எழுதியுள்ள இந்த பாடலை ஆனந் பாடியுள்ளார்.
இலங்கையின் தமிழ் இசைத்துறையில் அண்மைக் காலமாக ஆரோக்கியமான பல மாற்றங்கள் சத்தமில்லாது நடந்தேறி வருகின்றன.ஒரு காலத்தில் சிங்கள திரைப்படங்களுக்கு கூட இலங்கை தமிழ் இசையமைப்பாளர்கள் இசையமைத்திருத்தார்கள்.
'சின்ன மாமியே', 'சுராங்கனி', 'அழகான இருசோடி கண்கள்', 'கள்ளுக்கடை பக்கம் போகாதே' போன்ற பல பாடல்கள் சர்வதேசமெங்கும் புகழ் தேடி கொடுத்த இலங்கை கலைஞர்களின் பாடல்களாக இருந்து வந்தன. அதையே நாங்களும் திரும்ப திரும்ப சொல்லி சொல்லி பெருமிதப்பட்டு கொண்டிருந்தோம்.
அதன் பிறகு வந்த படைப்புக்கள் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை அதற்குக் காரணம் எம்மவர்களின் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்ட தென்னிந்திய சினிமா பாடல்களாகும். அதனோடு போட்டி போட முடியாது எம்மவர்கள் படைப்புக்கள் மூலையில் நின்று அழுத கொண்டிருந்தன.எமது ஊடகங்களும் எம்மவர் படைப்புக்களை கண்டு கொள்ளாது இருந்தனர்.
இது இவ்வாறு இருக்க அண்மையில் வெளிவந்த இலங்கை கலைஞர்களின் 'காந்தள் பூக்கும் தீவிலே' பாடல் இலங்கையின் இசைத்துறையில் மட்டுமன்றி தமிழ்பேசும் உலகெங்கும் பெரும் அதிர்வை ஏற்படுத்தி வரவேற்பை பெற்றது. இதன் மூலம் தென்னிந்திய சினிமாவில் இசையமைப்பதற்கு, பாடல் எழுதுவதற்கான வாய்ப்பினை எமது கலைஞர்கள் பெற்றுக் கொண்டனர்.
kaanthalpookkum (காந்தள் பூக்கும் )
இந்த மாற்றத்தை கொண்டு வந்த கலைஞர்கள் வவுனியாவை சேர்ந்த கந்தப்பு ஜெயந்தன் அவரோடு இணைந்து கவிஞர் பொத்துவில் அஸ்மின் அவர்கள்.இவர்கள் இருவரது கூட்டணியில் கடந்த வருடம் வெளிவந்த 'எங்கோ பிறந்தவளே' பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரபேற்பை பெற்றிருந்தது.அதனை தொடர்ந்து வெளிவந்த 'காந்தள் பூக்கம் தீவிலே' பாடல் வெளியாகி ஒரு வாரத்துக்குள் 60,000க்கும் மேலான ரசிகர்கள் youtube இணையத்தளத்தில் கண்டுகளித்துள்ளனர்.
இலங்கையில் வெளிவந்த ஒரு பாடல் அதிகளவிலான ரசிகர்களை கொள்ளை கொண்டது இதுவே முதல் முறையாகும்.இது இலங்கையின் தமிழ் இசைத்துறையை பொறுத்தவரையில் பெரும் சாதனையாக கருதப்படுகிறது. 'காந்தள் பூக்கம் தீவிலே' பாடல் ஐரோப்பா, மலேசியா, கனடா வானொலிகள், இணையத்தள வானொலிகள், சில உள்ளுர் வானொலிகளிலும் ஒலிபரப்பாகி வருகின்றது.
இந்தப்பாடலின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து கந்தப்பு ஜெயந்தனின் நேர்காணல் இப்போது வெளியாகியுள்ளது.
இசையமைப்பாளர் ஜெயந்தனின் நேர்காணல்
நன்றி: செய்தி. மனிதன்
யாழ் ஓசை
யாழ்மின்னல்
பொத்துவில் புதல்வன் நேசம் நெட்
தென்னிந்திய சினிமாவை திரும்பி பார்க்கவைத்த இலங்கை கலைஞர்களின் பாடல்.
kaanthalpookkum (காந்தள் பூக்கும் )
நம்நாட்டுக் கலைஞர்களின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'காந்தல் பூக்கும் தீவிலே' என்ற புதிய பாடல் தமிழ்பேசும் உலகில் வாழும் இசை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று தென்னிந்திய திரை உலகத்தையே திரும்பி பார்க்கவைத்துள்ளது.
பாடலாசிரியர் பொத்துவில் அஸ்மினின் வரிகளுக்கு வவுனியாவைச் சேர்ந்த இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்துள்ளார்.இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனுடன் இணைந்து அவரது சகோதரி ஜெயபிரதா இந்தப்பாடலைப் பாடியுள்ளார்.
கந்தப்பு ஜெயந்தனும் பாடலாசிரியர் அஸ்மினும் இணைந்து உருவாக்கிய 'எங்கோ பிறந்தவளே' என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்ட பாடலாக மாறியிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்தப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இலங்கையின் தமிழ் இசைத்துறை வேகமாக வளர்ந்து வருகின்றது.இலங்கையிலும் தென்னிந்திய கலைஞர்களுக்கு நிகரான கலைஞர்கள் இருக்கின்றனர் என்பதற்கு சாட்சியமாக இப்பாடல் திகழ்கின்றது.
இந்தப்பாடலை அனைவரும் கட்டாயம் பார்க்கவேண்டும் இலங்கை கலைஞர்களின் திறமை எந்தளவுக்கு உலகத்தரத்திற்கு வளர்ந்து வருகின்றது என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். இலங்கையில் எந்தவொரு வானொலியும்இந்த பாடலை கண்டுகொள்ளதா நிலையில் இந்தப்பாடல் youtube இணையத்தளத்தில் வலையேற்றப்பட்டு 5 நாட்களுக்குள் சுமார் 50,000 ஆயிரம் ரசிகர்கள் இப்பாடலை பார்வையிட்டுள்ளனர்.
தமிழர்கள் பரந்து வாழும் புலம்பெயர் நாடுகளில் இந்த பாடல் பற்றியும் பலரும் பேசிவருகின்றனர்.இலங்கையில் வெளிவந்த தமிழ் பாடல்களில் முதன்முறையாக அதிகமான ரசிகர்கள் குறைந்த காலத்தில் கவர்ந்தள்ளமை இலங்கையின் தமிழ் இசையத்துறையை பொறுத்தவரையில் ஒரு சாதனையாகும்
பாடலின் வெற்றி குறித்து
இசையமைப்பாளர் ஜெயந்தனின் கருத்துக்கள்.
இந்த பாடலை எழுதியுள்ள கவிஞர் பொத்துவில் அஸ்மின் 2008ம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியின் 'இசை இளவரசர்கள்' நிகழ்ச்சியின்வாயிலாக பாடலாசிரியராக அறிமுகமானவர். சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை 2 முறை பெற்றவர்.' ஜனாதிபதி' விருது' ,'அகஸ்தியர் விருது' என பலவிருதுகளை பெற்ற இலங்கையின் முன்னணி பாடலாசிரியர். இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தயாரிப்பாளராக பணியாற்றி வருகின்றார்.பனைமரக்காடு திரைப்படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராகவும் அறிமுகமாகியுள்ளார்.
பாடலை இசையமைத்து பாடி இருக்கும் 'இசை இளவரசன்' கந்தப்பு ஜெயந்தன் சக்தி தொலைக்காட்சியின் இசை இளவரசர்கள் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்கள் மத்தியில் 'இசை இளவரசனாக' முடிசூடிக்கொண்டவர்.பலகுறும்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.இவரது 'இதயத்தின் ஓசை' என்ற இசைப்பாடல் அடங்கிய இறுவட்டு வெளிவந்தள்ளது. 'யாழ்தேவி' என்ற இசை இறுவட்டு விரைவில் வெளிவர இருப்பதாக தெரிவித்தார்.
இந்தப்பாடல் இந்த இருகலைஞர்களின் கலைவாழ்விலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தள்ளது.தென்னிந்திய திரைப்படத்தில் பாடல் எழுவதற்கு இசையமைப்பதற்குரிய வாய்ப்பு இதன் மூலம் இவர்களுக்கு கிடைத்துள்ளது.தென்னிந்திய திரைத்துரை சார்ந்த பல கலைஞர்கள், இயக்குனர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக 'பகவதி' 'வல்லக்கோட்டை', 'மகாபிரபு' போன்ற படங்களை இயக்கி 'அங்காடித்தெரு' திரைப்படத்தின் மூலம் அதிரவைக்கும் வில்லனாக அறிமுகமான இயக்குனர் ஏ.வெங்கடேஷ் முகநூலில் வாழ்த்துரைத்துள்ளதோடு தமது படத்தில் வாய்ப்புகொடுப்பதாக அறிவித்துள்ளார்.
இப்படி எத்தனையோ திறமையான இளைஞர்கள் எம்மண்ணிலே இலைமறைகாய்களாக சரியான களம் கிடைக்காது இன்னும் மறைந்த கிடக்கின்றனர் அவர்களை கண்டெடுத்து உலகத்துக்கு அறிமுகப்படுத்துவது ஊடகங்களின் தார்மீக கடமையாகும் இதை சரியாக செயற்படுத்தினால் எங்கள் மண்ணிலும் வைரமுத்துக்கள் கிடைக்கலாம்.
எமது பாடலின் வெற்றியில் பல இணையத்தளங்களும் வானொலி சேவைகளும் பின்னணியாய் நின்றுள்ளன .அவைகள் வருமாறு...
(இதில் இணைக்கவேண்டிய தளங்கள் இருப்பின் தொடர்பு கொள்ளவும்)
நன்றி.
*YOUTUBE
*மனிதன்
*லங்கா ஸ்ரீ
*வீரகேசரி
*அத தெரண
*யாழ் மண்
*தமிழ் ஸ்டார்
*இருக்கிறம்
*வணக்கம் நெட்
*பொத்துவில் புதல்வன்
*செய்தி
*பதிவுகள்
*இலங்கை நெட்
*நேசம் நெட்
*மன்னார் இணையம்
*உயிர் தமிழ்
*பிறை FM
*வெற்றிFM
*ஜே ஜே FM
*தக்காளி.கொம்
*அஸ்கரின் பகிர்வுகள்
*கலசம்
*IBC
*LANKAFAST
*NEW JAFFNA
*உயர்வு
*சங்கமம்
*நிலா முற்றம்
*என்ன கத
*எழு தமிழா
*யாழ் மின்னல்
*யாழ்தேவி
*தமிழ் பூங்கா
இலங்கையின் முன்னணி செய்தித் தளமான 'தமிழ்மிரர்' இணையத்தளத்தில் இடம்பெற்றுள்ள கவிஞர் அஸ்மினின் நேர்காணல்.(18/11/2011)
கேள்வி: இன்னும் அதிகமானவர்களின் மனதிள் நீங்கள் இடம்பிடிப்பதற்கு 'எங்கோ பிறந்தவளே' பாடல் ஓர் அச்சாணியாய் அமைந்துப்போனது. இப்பாடலுக்கு கிடைத்த வரவேற்புக் குறித்து கூறுங்கள்?
"எங்கோ பிறந்தவளே''
பதில்:
எனக்கு நல்லதொரு அடையாளத்தை தந்துக்கொண்டிருக்கும் பாடலென்றால் அது 'எங்கோ பிறந்தவளே' பாடல்தான். அப்பாடல் உருவான விதமே மிகவும் சுவாரஸ்யம் நிறைந்தது. இப்பாடல் எழுதும்போது இத்தகைய வரவேற்பை அது எனக்குப் பெற்றுத்தருமென்று நினைக்கவில்லை. இந்தப்பாடல் சர்வதேசம் வரை எனக்கு நல்லதொரு அடையாளத்தை பெற்றுத்தந்துள்ளது.
கடந்த 2008 ஆம் ஆண்டு சக்தி தொலைக்காட்சியினால் நடத்தப்பட்ட 'இசை இளவரசர்கள்' நிகழ்ச்சியில் தேர்வாகி இந்தியாவிற்குச் செல்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிட்டியது. 16 ராகங்களுக்கு ஏற்ப 16 குழுக்களாக பிரிக்கப்பட்டிருந்தோம்.எமது குழுவின் பெயர் 'ஹம்ஸத்வனி' எமது குழுவில் இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர், பாடகி, என் நான்குபேர் அடங்கி இருந்தோம்.எமக்கு தென்னிந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர்களை, இசைதுறை சார்ந்த கலைஞர்களை நேரிலே சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது.
அந்தவகையில் எமது குழுவுக்கு இயக்குனர் ஏ.வேங்கடேஷ் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவர் எமக்கு பாடல் எழுதவேண்டிய கதைச்சூழலை மிகவும் அழகாக விபரித்தார்.அவர் சொன்ன கதையை உள்வாங்கிய இரண்டு மணிநேரத்துக்குள் பாடல் முழுவதையும் நான் எழுதிவிட்டேன். எமது 16 பாடலாசிரியர்களுக்குள்ளும் நானே முதலில் பாடலை எழுதியதை எண்ணி மகிழ்வுற்றேன்.கவிஞர் பா.விஜய் அவர்களை நாங்கள் அவரது இல்லத்தில் சந்தித்தோம். அவரிடம் நான் எழுதிய 'எங்கோ பிறந்தவளே' பாடலை பாடியே காட்டினேன். பாடல் வரிகளை வெகுவாக பாராட்டிய அவர் என்னுடைய சக பாடலாசிரியர் ஒருவரின் 'ஒரு பாடல் எவ்வாறு அமையவேண்டும்?' என்ற கேள்விக்கு எங்கோ பிறந்தவளே பாடலை உதாரணமாக கூறினார்.இருப்பினும் அப்பாடல் வரிகளில் இடம்பெற்ற'டாவின்ஸி பார்வையாலே' என்ற வரியை மட்டும் மாற்றிவிட கூறினார். வளர்ந்து வரும் பாடலாசிரியர் என்ற வகையில் ஆங்கில சொல்லை கலக்காமல் தமிழிலே அந்த பாடல் வரியையும் எழுதக் கூறினார்.
பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளருக்கும் கணவன் மனைவிக்கிடையிலான உறவே இருக்கவேண்டும். 'செம்புலப்பெயல்நீர் போல' என்று சங்கப்பாடல் சொல்வதற்கு இணங்க அது அமைதல் வேண்டும் .ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து தாழ்வு மனப்பான்மையை தூக்கியெறிந்து ஒரு புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும். ஆனால் எனது குழுவிற்கு கிடைத்த இசையமைப்பாளர் அவ்வாறு இருப்பதற்கு தவறிவிட்டார்.எமது குழுவின் இசையமைப்பாளர் பாடல்வரிகள் நன்றாக அயைவில்லையென்று என்னோடு வாதிட்டார்.நான் எவ்வளவு எடுத்துக்கூறியும் தனது இசையில் பாடலை எழுதவேண்டும் என்றே அடம்பிடித்தார் என்னுடைய பாடல்களை அன்று அவர் இதயத்தால் படம்பிடித்திருந்தால் இன்று முகவரியில்லாது போயிருக்க மாட்டார். அதன்பின் இந்தப்பாடலை விட்டு வேறு ஒரு பாடலை எழுதவேண்டியேற்பட்டது.
ஆனால் அந்த பாடல் சிறப்பாக வரவில்லை. இதற்காக நான் மிகவும் மனம் வருத்தப்பட்டேன். 16 பாடலாசிரியர்கள் மத்தியில் தனித்துவமாக ரசிகர்களாலும் இனங்காணப்பட்ட நான் சிறப்பாக பாடல் எழுதுவேன் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டேன். ஆனால் அது பொய்த்துப்போனது.
பொய்த்துப்போன எனது முதல் பாடல்
கேள்வி:- இந்தப் பாடலினூடாக நீங்கள் பெற்றுக்கொண்ட வரவேற்பு குறித்துக் கூற முடியுமா?
முகப்புத்தகத்திலும் 'யூடியூப்' இணையத்தளத்திலும் எனது பாடலை முதலில் பதிவேற்றினேன் .புலம்பெயர்ந்தவர்கள் பலர் எனது தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக் கொண்டு இந்தப்பாடல் மிகவும் அருமையாக இருப்பதாக பாராட்டினார்கள்.அவர்களது வாழ்த்துக்களை கேட்டு நான் மெய்சிலிர்த்துப்போனேன். இன்னும்கூட இப்பாடலை புதிதாக கேட்கும் நண்பர்கள் பலர் தொலைப்பேசி மற்றும் மின்னஞ்சலினூடகவும் என்னை தொடர்புக்கொண்ட வண்ணம் இருக்கின்றனர்.இதைவிட இப்பாடலானது பல அறிய வாய்ப்புக்களை எனக்கு ஏற்படுத்தி தந்துள்ளது. இயக்குநர் சு.ப. தமிழ் வாணன் தனது 'கருப்புச்சாமி உத்தரவு' படத்தில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பை எனக்கு தந்துள்ளார். இதைவிட'பனைமரக்காடு' படத்தில் ஒரு பாடலை நான் எழுதியுள்ளேன்.
'இசை இளவரசர்கள்' நிகழ்ச்சியில் இசை இளவரசனாக முடிசூடிக்கொண்ட இசையமைப்பாளர் வவுனியாவை சேர்ந்த கந்தப்பு ஜெயந்தன் அவர்கள் இறந்த கிடந்த என்னுடைய பாடல்வரிகளுக்கு இசையமைத்து தன்னுடைய குரல்மூலம் மீண்டும் உயிர்த்தெழ செய்திருந்தார் .அவரை இந்த இடத்தில் நினைவு கூர்ந்தேயாகவேண்டும்.
என்னைப் பொருத்தவரை எனது அனைத்து வாய்ப்புகளுக்குமான அறிமுக அட்டை இப்பாடல் என்றே கூறவேண்டும்.
கேள்வி:- இந்த பாடலுக்கு ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறு இருந்தது?
ஊடகங்களின் உள்ளங்கையில்தான் இன்றைய உலகபந்து உருண்டு கொண்டிருக்கிறது.பத்து இருகைகளால் செய்ய முடியாததை பத்திரிகையால் செய்ய முடியும். வானொலி,தொலைக்காட்சி,பத்திரிகை,இணையம் போன்ற ஊடகங்கள் எமது கலைஞர்களின் படைப்பாளிகளின் திறமைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கின்ற வள்ளங்கள்.இங்கு வள்ளங்கள் நிறையவே இருக்கின்றன நல்ல உள்ளங்கள் அரிதாகவே கிடைக்கின்றன.கடையில் இருக்குக்கும் கடதாசி பூக்களுக்கு காசு கொடுக்கும் எம்மூடகங்கள் முற்றத்தில் இருக்கும் மல்லிகைப்பூக்களுக்கு முகம் கூட கொடுப்பதில்லை.உள் நாட்டின் அசல்களை காட்டிலும் வெளிநாட்டின் நகல்களுக்குத்தான் அதிகம் கிராக்கி இங்கு.
ஊடகங்கள் உண்மையாக, நேர்மையாக, நீதியாக, நடக்குமானால் இலங்கையின் இசைத்துறை எப்போதோ உச்சத்தை எட்டியிருக்கும்.எமது கலைஞர்கள் பலருக்கும் வாய்ப்புக்கள் பல கிட்டியிருக்கும். நமது சகோதர மொழி கலைஞர்கள் இசைத்துறையிலும் சினிமா துறையிலும் வளர்ச்சிப்பாதையை காண்பதற்கு அவர்களது ஊடகங்கள்தான் காரணம். அவர்கள் அவர்களுக்கேயுரிய தனித்துவ பாதையில் செல்கின்றனர். சகோதர மொழி பாடகர் ஒருவர் இசை இறுவட்டுக்களை வெளியிட்டால் அது அனைத்து சகோதர ஊடகங்களிலும் வெளியிடப்படுகின்றன .ஆனால் நமது தமிழ் மொழி ஊடகங்கள் அவ்வாறு இல்லை. நமது ஊடகங்கள் நமக்கேயுரிய தனித்துவத்தை காட்ட முனைவதில்லை. ஆனால் எமது துரதிஷ்டம் ஒரு ஊடகத்தின் மூலம் முதலில் வெளியாகும் பாடலை இன்னொரு ஊடகம் வெளியிட தயக்கம் காட்டுகின்றன. தென்னிந்திய படைப்புக்களுக்கு கொடுக்கும் அதே முக்கியத்துவத்தை எமது படைப்புக்களுக்கும் கொடுக்க முனைவதில்லை. தென்னிந்தியாவில் ஒரு திரைப்படம் வெளியாக போகின்றதென்றால் உடனடியாக அந்தப் படத்தில் இடம்பிடித்த பாடல்களை எங்கிருந்தாவது பதிவிறக்கம் செய்து முந்திக்கொண்டு கொடுக்க முன் வருகின்றார்கள்.ஆனால் இலங்கையில் உருவாக்கப்படும் எந்தப் படைப்பையும் இவ்வாறு முந்திக்கொண்டு கொடுக்க முன்வருகின்றார்களா? நாம் நமக்கான தனித்துவத்தை காட்ட முனையும்போதே நமது திறமைசாலிகளை வெளிக்கொணர படுவார்கள். எமது இசைத்துறை வளர்ச்சியடையும். எமக்குள் ஒரு இளையராஜாவையும் ஏ.ஆர்.றஹ்மானையும் எதிர்பார்ப்பவர்கள் அதற்கான சரியான களத்தை வழங்க முன்வரவேண்டும்.
ஊடகமொன்று எங்கோ பிறந்தவள் பாடலை பாடிய கந்தப்பூ ஜெயந்தனை நேர்காணல் செய்திருந்தது. அந்நிகழ்ச்சியின்போது இந்தப்பாடலை முன்னோட்டமாக ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். இந்தப் பாடலை நிகழ்ச்சியின்போது ஒலிபரப்புவார்கள் என நான் நினைத்து எனது நண்பர்களுக்கும் கூறினேன். அந்நிகழ்ச்சியில் சுமார் 10 பாடல்களுக்கு மேல் ஒலிபரப்பியிருந்தார்கள். இடைக்கிடையில் இரண்டு தென்னிந்திய திரைப்பட பாடல்களையும் ஒலிபரப்பியிருந்தார்கள். ஆனால் எங்கோ பிறந்தவள் பாடலை ஒலிபரப்பேவேயில்லை.இது என் மனதை மிகவும் புண்படுத்தியது. நான் நிகழ்ச்சி முடிவில் அவர்களை தொடர்புக் கொண்டு கேட்டேன் அவர்கள் பாடலை ஒலிபரப்ப மறந்துவிட்டோமென இலகுவாக கூறி முடித்துவிட்டார்கள்.
இதைவிட இன்னுமொரு ஊடகத்திடம் இந்தப்பாடலை வழங்கியப்போது அந்தப்பாடல் மிகவும் சோகமாக இருப்பதாகவும், குத்துப்பாடல்களை தரும்படியும் கேட்டார்கள். இந்த வேளையில் எனது பாடலுக்கு களம்கொடுத்த வசந்தம்FM,பிறைFM,வெற்றி FM,தென்றல்,லண்டன் ஐ.பிஸி,இணைய வானொலிகள் அனைத்தையும் நினைவுகூற விரும்புகின்றேன்.
எமது நாட்டின் பாடல்களுக்கு தனியான நிகழ்ச்சியை ஒழுங்குப்படுத்த தேவையில்லை. வழமையான நிகழ்ச்சிகளில் ஒலிபரப்பும் பாடல்களுடன் பாடலாக இதனையும் ஒலிபரப்பலாம்.அப்போது அது ரசிகர்கள் மத்தியில் சென்றடையும்.
ஊடகங்கள் இப்போது தமக்கென பிரத்தியகமான இசைக் குழுக்களை கொண்டுள்ளன. எந்த நிகழ்வுக்கும் அந்தக் குழுக்களே பங்குப்பற்றுகின்றனர். இதனால் மற்றக் கலைஞர்களுக்கான வாய்ப்புகள் கை நழுவி போய்கின்றன. இதனால்தான் இலங்கையின் தமிழ்இசைத்துறை ஓடும் இடத்திலயே ஓடும் இடத்திலயே ஓடிக் கொண்டிருக்கிறது.எனவே,இந்த வரட்டு நிலையிருந்து வளர்ச்சி நிலைக்கு செல்ல எமது ஊடகங்கள் முன்வரவேண்டும்.எமது நிலத்தில் நாம் விதைகளை தூவாமல் அடுத்தவர் பழத்தில் பல்லைப்பதிப்பதை நாங்கள் நிறுத்தவேண்டும் எம்மை நாம் திருத்தவேண்டும். வெளிச்சத்துக்கு மட்டும்விளக்கு பிடிக்க முனையும் ஊடகங்கள் காய்த்தல், உவத்தல், குத்தல்,வெட்டல் இன்றி 'இருட்டின்'மீது தமது வெளிச்சத்தை பாய்ச்ச முயன்றால்தான் வளர்ந்துவரும் இளைய தலைமுறை கலைஞர்களுக்கு விமோசனம் கிட்டும்.அவர்கள் குரல்களும் எட்டுத்திக்கும் எட்டும். இல்லாவிட்டால் எமது நிலத்தில் வெங்காயம் நட்டால் வெடிகுண்டுதான் முளைக்கும்.
கேள்வி: மரபுக் கவிஞராக அறியப்பட்ட நீங்கள் நவீன கவிதைகளையும் முயன்று பார்க்க வேண்டுமென்று எப்போதேனும் எண்ணிய சந்தர்ப்பம் உண்டா?
பதில்: என்னைப் பொறுத்தவரை மரபுக்கவிதையென்பது அழகிய பொட்டு வைத்து பூச் செருகி சேலையுடுத்திய கலாசாரப் பெண். புதுக்கவிதை என்பது சுடிதார் அணிந்தப் பெண். நவீனம் நவீனத்துவம் என்பது ஆடைகளின்றிய அம்மண உலகம்.மறைக்கும் பொருளுக்கே மதிப்பதிகம் என்பார்கள் எனவே அம்மணமாய் இருப்பதற்கு சம்மதமில்லை
கேள்வி: இப்படி கூறுவதற்கு காரணமென்ன?
எனக்கு ஒன்றோடு ஒன்பதாகிப்போவதில் உடன்பாடில்லை. அதனால்தான் புதுமையென்னும் கவசத்தை அணிந்துகொண்டு மரபென்னும் போர்வாளை கையிலெடுத்தேன். நான் மரபோடு கைகுலுக்கிக்கொள்வதால்தான் இன்று இருக்கின்ற இளையதலைமுறைக் கவிஞர்களில் இருந்து என்னால் வேறுபட்டு நிற்கமுடிகின்றது.
அரசியல்வாதிகளில் இலக்கியவாதிகள் இருந்திருக்கின்றார்கள் இருக்கின்றார்கள் ஆனால் இப்போது இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகளாக மாறிவிட்டார்கள்.
இலக்கிய ரீதியில் பல குழுக்கள் உருவாகியுள்ளன. அக்குழுக்களுக்கு அவர்களது பாணி முக்கியப்படுகின்றது. புதிதுபுதிதாக கவிதைகளை கண்டுபிடிக்கின்றார்கள்.தாங்கள் பிதாமகன் என தம்பட்டமடிக்கின்றார்கள் இத்தகைய இலக்கிய விஞ்ஞானிகளை கண்டால் வாசகர்கள் ஓடி ஒளிக்கின்றார்கள்.இலட்சணம் என்ற சொல்லிலிருந்து இலக்கணம் என்ற சொல்லும் இலட்சியம் என்ற சொல்லிலிருந்து இலக்கியம் என்ற சொல்லும் தோன்றியது.என்வே இலட்சியம் இல்லா எந்தவொரு படைப்பும் நீடித்து நிற்கப்போவதில்லை.
கவிதையென்பது காலத்தின் கண்ணாடி. அதில் வாசகன் தனது முகத்தை பார்க்கிறான்.அதுசமூகத்திற்கு போய் சேரவேண்டும். அதனால் படிப்பவர்கள் பயன்பெறவேண்டும்.இன்று நவீனம் நவீனத்துவம் என்ற பெயரில் கலாசாரத்தை சீரழிக்கும் கவிதைகள் எழுதப்படுகின்றன குறித்து உங்களிடம் கூறுவதையே அவமானமாக கருதுகிறேன்.
உதாரணத்திற்கு ஓரு பெண்கவிஞரின் 'முலைகள்' என்ற கவிதை தொகுதியை எடுத்துக் கொள்ளலாம். அதிகமான பெண்ணிய கவிஞர்கள் தமது கவிதைககளில் பாலியல் சொற்களை பயன்படுத்தப்படுகின்றனர். இவ்வாறான பாலியல் சொற்களை கவிதைகளில் கூறுவதனூடாக அவர்கள் பிரச்சினையை கூற முனையவில்லை. பிரபல்யம் அடையவே முனைகின்றனர். சமூகத்தில் சர்ச்சைக்குரிய விடயங்களை பேசும் ஒருவர் அதனூடாக இலகுவாக புகழடைந்துவிடுவார். பெண்ணியம் குறித்து பேசும் போது ஆபாசக்கருத்துக்களை கூற வேண்டியதில்லை.
என்னைப்பொருத்தவரை கவிதை என்று வரும் போது அதற்குள் அருவறுப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபாச வார்த்தைகளை உட்புகுத்த கூடாது. ஆனால் இலங்கையில் ஒருசிலர் அதனை செவ்வனே செய்துக்கொண்டு செல்கின்றனர். இதனூடாக அவர்கள் பிரபல்யம் அடைய எண்ணுகின்றார்களே தவிர அதனூடாக அவர்கள் கொடுக்கும் செய்தி எதுவும் இல்லை. பின்நவீனத்தும் என்ற பெயரில் வெளிவரும் இத்தகைய ஆபாச கவிதை புத்தகங்களைளையும் கவிதைகளையும் முதலில் தடை செய்ய வேண்டும்.
என்னைப்பொறுத்தவரை நான் எல்லாவற்றையும் வாசிப்பேன்.எல்லா கவிஞர்களையும் வாசிப்பேன்.அதேபோல் திட்டமிட்டு கவிதைகளையும் எழுதியதில்லை. எனக்குள் எழும் எனக்குள் கவிதை முளைத்து என்னை எழுது என்று அழைக்கும். அந்த கவிதை வாசகனை சென்றடையும்போது அந்த கவிதை மரபுக் கவிதையா? நவீன கவிதையா?என வாசகர்களே அதற்கு அடையாளமிடுகின்றார்கள். என்னைப் பொருத்தவரை மரபுக் கவிதை, நவீன கவிதை,பின்நவீனத்துவ கவிதை தேடிப்போகாமல் கவிதைகளில் கவிதையை தேடவேண்டும்.
கேள்வி:மரபு மறுவி வரும் இக்காலத்தில் இன்னும் மரபுக் கவிதையே எழுத வேண்டுமென்று எண்ணுகின்றீர்கள். ஆனாலும் அந்த மரபுக்கவிதை தற்கால சந்ததியினரை முழுமையாக போய்ச் சேரும் என்று நினைக்கின்றீர்களா?
பதில்:- முதலில் மரபு மறுவி வருகின்றது என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். மரபு என்பது அடித்தளம். இலக்கியத்தின் எத்தளத்திற்கு செல்வதாயினும் இத்தளத்தில் இருந்தே ஆரம்பிக்கவேண்டும்.
அகரம் அறியாதவன் உகரத்தை உச்சரிக்கவே கூடாது.
எட்டயபுரத்து கவிஞன் தொடக்கம் எங்கள் தேசத்தின் மூத்தகவிஞர்கள் வரை மரபு தெரியாமல் புதுமைக்குள் புகுந்தவர்கள் அல்லர். அவர்கள் தம்முன்னோர்களைக் கற்று முத்துக்குளித்தவர்கள்.அதனால்தான் அவர்களால் முத்தமிழிழும் பிரவாகிக்க முடிந்தது.இற்றைவரை முழுநிலவாக பிரகாசிக்க முடிந்தது. வைரமுத்து எழுதிய 'காதலித்துப்பார்' புதுக்கவிதையை தெரியாத இளைஞர்கள் இல்லையென்றே சொல்லலாம்.அதற்காக அவர் புதுக்கவிஞராக சிலர் நினைக்கலாம் ஆனால் அவர் யாப்பிலக்கணத்தை துறைபோக கற்ற மரபுக்கவிஞர் அதிலும் பல புதுமைகளை புகுத்தியவர் என்று எத்தனை இளைஞர்களுக்கு தெரியும்?. வளர்ந்து வரும் எழுத்தாளர்கள் பலந்தமிழ் இலக்கியங்களை தேடி படிக்க வேண்டும். அவற்றின் தன்மைகளை அறிந்து கொள்ள வேண்டும். வார்த்தைகள் நடந்தால் வசனம்; நடனமாடினால் கவிதை. எனவே புதுக்கவிதையில் சொல்கின்ற படிமம்,குறியீடு, என்பவற்றை ஓசை நயத்தோடு நான் எனது மரபுக் கவிதையில் கொடுக்கின்றேன்.
கேள்வி: நவீனம், பின்நவீனத்துவம் என்ற பாணியிலிருந்து இலக்கியம் படைப்பவர்கள் காலச்சுனாமியில் மூழ்கிப்போய்விடுவதாக கூறியிருக்கின்றீர்கள்? இவ்வாறான கருத்துக்கள் உங்கள் மனதில் எழுவதற்கு எது காரணம்?
பதில்:நவீனம், பின்நவீனம் இன்று நேற்று உருவானதல்ல அது நாகரீகமனிதன் தொட்டு உருவாகிவிட்டது. துறுப்பிடித்ததை தூசுதட்டியெடுத்து அதை தாம் முதலில் கண்டுபிடித்தாக பலரும் உரிமை கோருகின்றனர். வேட்டையாடி திரிந்த மனிதன் என்று வெட்கப்பட ஆரம்பித்தானோ என்று ஆடை உடுத்து அழகு பார்த்தானோ அன்று அவன் நவீனமாகிவிட்டான்.
சங்கக் காலத்தில் தோன்றிய கவிதை அக்காலத்தில் நவீன கவிதையாக பேசப்பட்டது. அது தற்போதைய யுகத்தில் செய்யுளாக,மரபுக்கவிதையாக பேசப்படுகின்றது. தற்காலத்தில் நவீன கவிதையாக பேசப்படும் கவிதை இன்னும் ஒரு யுகம்போக அது மரபுக் கவிதையாக அக்கால சந்ததியினரால் பேசப்படும். இன்றைய நவீனம் நாளைய மரபாக தெரியலாம். எனவே,படைப்பு நிலைப்பதென்பது படைப்பாளனின் கையில் இருக்கிறது. படைப்பாளி படைப்புக்கான வார்த்தையை வாழ்க்கையிலிருந்து பெறவேண்டும்.ஒரு படைப்பை வாசிக்கும் வாசகன் அந்த படைப்பு தன் வாழ்க்கையுடன் ஒத்துப்போவதாக உணரும்போதே ஒரு படைப்பு வெற்றிப்பெருகின்றது. ஒன்றுக்கும் உதவாத வெறும் வெற்று கற்பனைகள் அழகியலாக இருக்கும். காலப்போக்கில் அது அழுகியங்கு கிடக்கும்.
கேள்வி: உங்களது மலேசிய பயணம் குறித்து கூறமுடியுமா?
பதில்: 6 ஆவது உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு அண்மையில் மலேசியாவில் கோலாலம்பூரில் அமைந்துள்ள மலாயபல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. அதில் இலங்கையிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கலந்துக்கொண்டிருந்தார்கள்.5 நாட்கள் நடைபெற்ற மாநாட்டில் நிறைவுநாள் நிகழ்வாக மாபெறும் கவியரங்கு கவிக்கோ அப்துல்ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது. மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தியா என பல நாட்டிலிருந்து வருகை தந்த 10 கவிஞர்கள் அக்கவியரங்கில் கவிதை பாடினார்கள். அவர்கள் அனைவருமே 40 வயதிற்கும் மேற்பட்டவர்கள். அவர்களில் மிகவும் இளையவன் நான் மட்டுமே. எல்லோரும் கவிதை பாடி முடிய இறுதியாக நான் கவிதை பாடினேன்.தூங்கிக்கொண்டிருந்த சிலரையும் எழுப்பிவிட்டேன். கவிதை பாடி முடியும் போது கரகோச வெள்ளம் கரைபுரண்டெழுந்தது.அப்துல்ரஹ்மான் என் தோள்களை தட்டிக்கொடுத்து அருமையாக இருந்ததாக கூறினார். இன்னும் பல கவிஞர்கள்,பேராசிரியர்கள் வந்து கை கொடுத்து சிறப்பாக இருந்த கூறி என்னை பாராட்டினார்கள். இந்தியாவிலிருந்த வந்த ஒரு பத்திரிகை ஆசிரியர் அந்த மேடையிலே அந்த கவிதையை வாங்கிவிட்டு இதை தனது நாட்டின் சஞ்சிகையொன்றில் பிரசுரிப்பாதாக வாங்கிச்சென்றார். மலேசியாவின் தேசிய தமிழ் பத்திரிகை உட்பட இன்னும்பல பத்திரிகைகள் எனது கவிபாடலை பற்றி சிலாகித்து எழுதியிருந்தார்கள்.அதைவிட நீதியமைச்சர் றவூப் ஹக்கீம் இலங்கைக்கு பெறுமை தேடி தந்துவிட்டதாக என்னை கைகுலுக்கி பாராட்டினார்.அல்ஹம்துலில்லாஹ்!
கேள்வி: மலேசியப் பயணத்திலும் கூட அதிகமான திறமைமிக்கவர்கள் தட்டப்பட்டு அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள் உள்வாங்கப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது. இதுக் குறித்து நீங்கள் கூறவிரும்புவது?
பதில்: எந்தவொரு நல்ல நிகழ்வுகள் நடந்தாலும் அதற்கு இவ்வாறான விமர்சனங்கள் எழுப்பப்டுவது பொதுவான ஒன்று. இந்த மலேசிய மாநாட்டு நிகழ்வில் இடம்பெற்ற கவியரங்கில் இலங்கையில் சேர்ந்த இரு கவிஞர்களுக்கு வாய்ப்புகிடைத்தது. இந்த கவியரங்கில் பங்குக்கொள்வதற்காக நாங்கள் போட்டியின் அடிப்படையிலே தெரிவுசெய்யப்பட்டோம்.
இக்கவியரங்கிற்கான தலைப்புகளாக பொறுமை, எளிமை என்ற இரு தலைப்புகள் வழங்கப்பட்டன.நான் நபிகளாரின் பொறுமை பற்றியே எழுதியிருந்தேன். இந்தப் போட்டி குறித்த விளம்பரத்தை கூட பல பத்திரிகைகளில் பிரசுரித்திருந்தார்கள்.அதன்மூலமாகவே நான் இதில் போட்டியிட்டேன். விண்ணப்பதாரர்களின் பெயர்களைக்கூட டிபெக்ஸ் செய்துவிட்டே நடுவர்கள் குழுவிற்கு அனுப்பியிருந்தார்கள் என்பது பின்னர் எனக்கு தெரியவந்தது அப்போட்டியில் போட்டியிட்டவர்களில் நானும், கவிஞர் நஜுமுல் ஹுசைனும் தெரிவு செய்யப்பட்டோம். அதன்பின் என்னை அழைத்து நான் எழுதிய கவிதையை பாடிக்காட்ட சொன்னார்கள். நான் எழுதிய கவிதை சிறப்பாக இருப்பதாகவும் பாடும் விதமும் அழகாக இருப்பதாகவும் கூறி என்னை தெரிவு செய்தார்கள்.
நான் திறமையின் அடிப்படையில் தெரிவு செய்யப்படாமல் பின்கதவால் சென்றிருந்தால் நான் பாடிய கவிதைக்காக இத்தனை பாராட்டுதல்களை பெற்றிருக்க மாட்டேன்.கவிக்கோ அப்துல்ரஹ்மான் என் தோள்களை தட்டிக்கொடுத்திருக்க மாட்டார். மலேசிய ஆசிரியர்கள் எனது கவிதையை புகழ்ந்து தமது பத்திரிகைகளில் எழுதியிருக்க மாட்டார்கள். என்னை பொருத்தவரை கவியரங்கத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்கள் திறமையின் அடிப்படையிலே தெரிவு செய்யப்பட்டார்கள்.
கேள்வி:- விருதுகள் வழங்கப்படும் நிகழ்வுகளில் கூட அரசியல் கலந்துபோயுள்ளதே. இதனால் திறமையானவர்கள் தட்டப்பட்டுப் போகின்றார்கள் இதுக் குறித்து நீங்கள் என்னக் கூற விரும்புகின்றீர்கள்?
பதில்:-இதற்கான எனது பதிலை நான் எனது 'விருதுகள் பெரும் விருதுகள்' என்ற கவிதையில் 2007ம் ஆண்டே கூறிவிட்டேன். அதனை வாசித்தால் இதற்கு நான் கூறபோகும் பதில்கள் குறித்து விளங்கிக்கொள்ள முடியும்.
இதைவிட ஒன்றை குறிப்பிடவேண்டும். அரசாங்கத்தினால் வழங்கப்படும் விருதுகளில் பக்கச்சார்பும் முதுகுசொரிதலுமே காணப்படுகின்றது. சரியான ஆற்றல்களுக்கு களம் இங்கு வழங்கப்படுவதில்லை. அதனால் புறந்தள்ளப்படுவது சிறந்த படைப்பாளிகளே. விருதுகளால் எதையும் சாதித்துவிட முடியாது. போட்டி நிகழ்வொன்றில் 3ம் இடம்பெற்ற மகாகவி பாரதியின் 'செந்தமிழ் நாடடெனும் போதினிலே' கவிதை காலத்தை வெல்லவில்லையா? அப்போட்டியில் முதலாமிடம் பெற்றவர் எங்கே..? அவர்தம் கவிதைதான் எங்கே?படைப்பாளியின் படைப்பு எத்தனை நெஞ்சங்களின் மனதில் நிலைக்கின்றதோ அதுதான் அவனுக்கான சரியான அங்கீகாரம்.ஒரு வாசகனின் வாழ்த்துக்கு முன்னால் நோபல் பரிசும் தலைகுனிந்து நிற்கும்.
கேள்வி:- கவிஞர், பாடலாசிரியரென படிப்படியாக உங்களது வளர்ச்சி சென்று கொண்டிருக்கின்றது. உங்களது அடுத்த இலக்கு எது?
பதில்:-
இலங்கையில் மட்டுமல்ல தமிழ்பேசும் உலகமெங்கும் போற்றப்படும் தலைச்சிறந்த கவிஞராக,பாடலாசிரியராக மிளிரிவேண்டுமென்பதே எனது அடுத்த இலக்கு. நான் என்னை என்னுடைய வயதையொத்த சக படைப்பாளிகளோடு ஒப்பிட்டுப்பார்த்து கவிதைகளை எழுதுவதில்லை.காலத்தை வென்று நிற்கும் ,பேசப்படுகின்ற தலைச்சிறந்த கவிஞர்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தே கவிதைகளை எழுதுவேன். அப்போதே எனது திறமையையும் சரியாக வடிவமைத்துக்கொள்ள முடியும். முதலில் நானே எனது கவிதைக்கு நல்ல வாசகனாகவும் விமர்சகனாகவும் இருக்கின்றேன். அப்படி இருக்கும் போதே அந்தக் கவிதை நீண்டு நிலைத்திருக்கும்.
நன்றி.
*தமிழ் மிரர் *பிரதம ஆசிரியர் ஏ.பி மதன் *கோகிலவாணி (செய்தி ஆசிரியர்)
தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் 'வியர்வையின் ஓவியம்' உழைக்கும் மக்கள் கலைவிழா அண்மையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இவ்வருடத்தின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான கவிஞர் பொத்துவில் அஸ்மின் பெற்றுக்கொண்டார்.
இயக்குனர் கேசவராஜ் இயக்கும் 'பனைமரக்காடு' திரைப்படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ள இவர்.
ஏலவே ஜனாதிபதி விருது-(2001),அகஸ்தியர் விருது(2011) சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010) உட்பட 10க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.இவரது 'ரத்தம் இல்லாத யுத்தம்' கவிதை நூல் மிக விரைவில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி.
*ITN-சுயதீன தொலைக்காட்சி சேவை (28.10.11) *வசந்தம் TV (28.10.11)
* தமிழ் மிரர் (29.10.11) *தமிழ் ஸ்டார் இணையத்தளம் (29.10.11) *இலங்கை நெட் (29.10.11) *வசந்தம் FM(30.10.11) *நேசம் நெட்(30.10.11) *தேடிப்பார்(30.10.11) *தினமலர் (30.10.11.இந்தியா) *தமிழ்ஆதர்ஸ்(31.10.11)
*திண்ணை(31.10.11)
*விடிகுரல்(31.10.11) *வணக்கம் நெட்(31.10.11) *தேடிப்பார்(30.10.11) *LankaMuslim.org (30.10.11) *மெட்ரோ மிரர்(30.10.11) *நவமணி(04.11.11)
*எங்கள் தேசம்(01.11.2011) *பொத்துவில் நெட்
*மூன்றாம் கோணம்
*fasmi media world
நாடறிந்த எழுத்தாளரான தெளிவத்தை ஜோசப் அவர்கள் கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக இலக்கிய வாழ்வு வாழ்ந்து மலையக இலக்கியத்தின் அடையாளத்திற்கும் தனித்துவத்திற்கும் தனது எழுத்துக்கள் மூலம் பெரும் பங்காற்றி மலையக இலக்கியத்தின் தலைமைப் படைப்பாளியாகத் திகழ்பவர் .
சந்தனசாமி ஜோசப் என்ற இயற்பெயர் கொண்ட தெளிவத்தை ஜோசப் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். சாதாரணத் தோட்டத் தொழிலில் அல்லாடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளைப் போன்ற உதிரி மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டவை இவரது படைப்புலகம்.
இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைளிலும் தமிழக சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளன.தனது தமிழாற்றலால் தான் பிறந்த மலையகத்திற்கும்,தெளிவத்தை ஊருக்கும் மாபெரும் புகழைச் சேர்த்தாலும் அவர் உலகத் தமிழ் இலக்கியத்தின் சொத்து, இதுவரை பல நூல்களை எழுதியுள்ள அவர் எண்ணிலடங்கா ஆய்வு மற்றும் பயணக் கட்டுரைகளை தேசியப் பத்திரிகைகளிலும் எழுதியுள்ளதுடன் அதற்கான உரிய கெளரவங்களை, தேசிய சர்வதேச மட்டத்திலும் பெற்றுள்ளார்.
ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதுவதோடு தனது இலக்கியப் பயணத்தை ஆரம்பித்த இவர், காலப் போக்கில் குறுநாவல், நாவல், விமர்சனம், ஆய்வு,திரைக்கதை, வானொலி நாடகம் எனப் பல தளங்களில் தனது உழைப்பை விஸ்தரித்து மலையக இலக்கியத்தை, அதனூடாக ஈழத்து இலக்கியத்தை வளப்படுத்தியதோடு உலகத்தமிழ் இலக்கியத்திற்கும் உரம் சேர்ந்தவர்.
'காலங்கள் சாவதில்லை' என்பது இவருடைய முக்கியமான நாவல் ஆகும். நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார்.2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது 'மலையகச் சிறுகதை வரலாறு' இவரை ஓர் சிறந்த ஆய்வாளராக இனங்காட்டியது. அவ்வாண்டிற்கான தேசிய சாகித்திய விருதினையும் யாழ். இலக்கிய வட்டத்தின் சம்பந்தன் விருதினையும் இந்நூல் பெற்றுக்கொண்டது.
துரைவி பதிப்பகத்தினூடாக இவர் வெளிக்கொணர்ந்த மலையகச் சிறுகதைகள் உழைக்கப் பிறந்தவர்கள் ஆகிய இரு தொகுப்புகள் மலையக இலக்கியத்துக்கு இவர் அளித்த அரிய செல்வங்களாகும். எழுபதுவருட காலத்துக்குரிய கதைகளைத் தேடித் தொகுத்து இரண்டு வருட கால எல்லையுள் இப்பணியினைச் செய்து சாதனை படைத்தவர் ஜோசப்.
இவரது குறுநாவல்களான 'பாலாயி' 'ஞாயிறு வந்தது' 'மனம் வெளுக்க' ஆகிய மூன்றும் ஒரே தொகுப்பாக 1997ல் வெளிவந்தது. தமிழ் நாட்டின் சுபமங்களா சஞ்சிகையும் தேசிய கலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் இவரது குடைநிழல்' இரண்டாவது பரிசினைப் பெற்றது.
1979ம் ஆண்டு 'நாமிருக்கும் நாடே'' சிறுகதைக் நூலுக்காக மலையக இலக்கிய நூலுக்கான முதல் சாஹித்திய விருதினை பெற்ற மலையக படைப்பாளிக்கான முதல் கலாபூஷணம் விருதினையும் பெற்றவர்.தமிழியல் விருது, தேசிய ஒற்றுமைக்கான சாஹித்திய விருது, பேராதனை பல்கலைக்கழகத்தின் இலக்கிய சாதனையாளர் விருது, மேல் மாகாண சபை மத்திய மாகாண சபை வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.
இலங்கை கவிஞர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் உ.நிஸார் அவர்கள் கண்டி மாவட்டம் உடுநுவரை முருதகஹமுல என்ற இடத்தை பிறப்பிடமாக கொண்டவர்.உடுநுவரை நிசார், உ. நிசார் ஆகிய புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர்,சிறுவர் இலக்கியம் படைப்பதில் அதிக ஆர்வம் காட்டிவரும் எழுத்தாளராவார்.
உடுநுவரை டி. பி. விஜயதுங்க தேசிய பாடசாலை, கம்பளை சாஹிரா தேசிய பாடசாலைஆகிவற்றின் பழைய மாணவரான இவர் மாவனல்லை சாஹிரா பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.இவர் சிங்கள மொழியில் கல்வி பயின்றாலும் தமிழ் மொழியை தன் முயற்சியால் கற்றுத்தேர்ந்து மரபுக்கவிதை கவிதை படைக்கும் ஆற்றல் பெற்றவராக திகழ்கிறார்.இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள் சஞ்சிகைளில் களம் கண்டுள்ளன.
இதுவரை கனவுப்பூக்கள் என்ற கவிதை நூலை வெளியிட்டுள்ள இவர்
• ஓயாத அலைகள்
• நட்சத்திரப் பூக்கள்
• வெந்நிலா
• மலரும் மொட்டுக்கள்
• சிறகு விரி
• பாவிருந்து
• இளைய நிலா
• முத்துக் கணையாழி
உட்பட பல சிறுவர் இலக்கிய நூல்களையும் இதுவரை எழுதி வெளியிட்டுள்ளார்.தேசிய மட்டத்தில் நடாத்தப்பட் ட பல கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் இவர்
2008ம் ஆண்டு அரச இலக்கிய விருதான 'கலாபூசணம் விருது' வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்.