கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 14 நவம்பர், 2012

இதயப் பாயை விரிப்பாளோ...!




இலங்கை வசந்தம் தொலைக்காட்சியில் ''தூவானம்'' கலை, இலக்கிய சஞ்சிகை நிகழ்ச்சியில் இடம் பெற்றுள்ள கவிஞர் அஸ்மினின் கவிதை கவிஞரின் குரலில்....


கண்கள் இரண்டும் அரிவாளோ-அவள்
காதல் வலியை அறிவாளோ...?
புன்னகை அவளின் உறைவாளோ-என்
பூவிழி வாசலில் உறைவாளோ

இடைகள் கொல்லும் இடைவாளோ-அவள்
இதழால் என்னை அடைவாளோ
இமைகள் எங்கும் கொலைவாளோ-என்
இதயம் கொன்று தொலைவாளோ...

நாணம் அவளின் பெருவாளோ-ஒரு
நாளில் காதல் பெறுவாளோ...?
பூவை ஏந்தி வருவாளோ-இல்லை
பூமி அதிர்ச்சி தருவாளோ

கதையாய் எனக்குள் எழுவாளோ-என்
கனவை வந்து உழுவாளோ
விதையாய் எனக்குள் விழுவாளோ-நான்
விழுந்தால் கூட அழுவாளோ...

வாழ்வில் வந்து நிறைவாளோ-இல்லை
வாட்டம் தந்து மறைவாளோ
கண்ணால் ஹைகூ வரைவாளோ-இல்லை
கன்னம் சிவக்க அறைவாளோ

அலைபோல் வந்து அடிப்பாளோ-இல்லை
அன்பால் என்னை படிப்பாளோ
கவியாய் வந்து துடிப்பாளோ-இல்லை
கைக் குண்டாக வெடிப்பாளோ

அழகுத் தமிழில் கதைப்பாளோ-இல்லை
ஆங்கி லத்தால் உதைப்பாளோ
கவிதை சொல்ல அழைப்பாளோ-இல்லை
கருவைப் போலே கலைப்பாளோ..

பார்க்க பார்க்க முறைப்பாளோ-இல்லை
பார்வை கொண்டு குரைப்பாளோ..!
காதல் மொழிகள் உரைப்பாளோ-இல்லை
கள்ளி மனசை மறைப்பாளோ..!

கவிதை கண்டு சிரிப்பாளோ-இல்லை
கழுத்தை வந்து நெரிப்பாளோ..!!
இதயப் பாயை விரிப்பாளோ -இல்லை
இறக்கும் நாளை குறிப்பாளோ..!!

புதன், 23 மார்ச், 2011

உலகக்கோப்பையை வென்ற 'சுனாமி'...!

 ஆடும்மனிதன் ஆட்டம்காண அலைகளொன்றாய் கூடின!
ஆசைதீர பூமிப்பந்தை அடித்துவிளை யாடின!
ஆடுமாடு கோழிபூனை அழுதுகண்ணை மூடின!
ஆறுகுளங்கள் நதிகள்சேர்ந்து ஊழிப்பாடல் பாடின!

மேடுபள்ளம் பாய்ந்தவெள்ளம் மேலெழுந்து சென்றன!
மேகக்கூட்டம் வானைப்பார்த்து பாவம்பூமி என்றன!
பாடுபட்டு சேர்த்தவற்றை பகிர்ந்து அலைகள் தின்றன!
படையைகண்ட தமிழர்போல பயந்துயாவும் நின்றன!

வீடுகாணி 'கார்'கள்கூட கால்முளைத்து நடந்தன!
வியக்குமளவு கப்பல்
கள்கூட வீட்டின்மேலே கிடந்தன!
வாடும்மனிதன் வாட்டம்கண்டு வானம்பூமி அழுதன!
வாழவேண்டும் உயிர்களென்று வையம்யாவும் தொழுதன!

சூடுபட்டபாலை மீண்டும் சுனாமிப்பூனை
கள் நக்கின!
'சூச்சூ..'என்று விரட்டிப்பார்த்தும் கழிவையெங்கும் கக்கின!
கேடுகெட்ட மனிதவாழ்க்கை கிடந்து அதற்குள் சிக்கின!
கேள்விகேட்ட அறிவும்கூட தோல்வியுற்று முக்கின!

உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு உயிர்கள்யாவும்  கெஞ்சின!
'உலகக்கோப்பை வென்றார்போலே அலைகள்கூடிக் கொஞ்சின!
அகிலமின்றே அழியுமென்று இருக்கும்நிலங்கள் அஞ்சின!
அலைகள்தின்று போட்ட மிச்சம் இமயமலையை விஞ்சின.

காடுகழனி யெங்கும்வெள்ளம் கரைபுரண்டு ஓடின!
கடவுளில்லை என்றவாயும் கடவுள்நாமம் கூறின!
காடுகரை யெங்கும்பிணங்கள் அழுகிப்புழுத்து நாறின.
நாடுஎட்டாம் நரகம்போன்று இமைக்கும்பொழுதில் மாறின!




நன்றி.
*தமிழ் ஆதர்ஸ்    

*விடிவெள்ளி (ஆறாவது விரல்) 24.3.11
*இருக்கிறம் (04.04.11)
 *சிகரம் (துபாய் ) 15.04.2011