கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 அக்டோபர், 2011

குயில்கள் இப்போது குரைக்கின்றன..



வியம் வரையும் தூரிகை கொண்டு 
ஓட்டடை அடிக்கின்றாய்...
காவியம் பாடும் கைகளை கொண்டு

கற்களை உடைக்கின்றாய்....



சாதனை படைக்கும் சக்தி இருந்தும்

சாக்கடை அள்ளுகின்றாய்...

சரித்திரம் படைக்க பிறந்தவன் நீயோ

சப்பாத்து துடைக்கின்றாய்....



சவுக்கால் உன்னை அடிப்போருக்கு

சாமரை வீசுகின்றாய்..

சருகாய் உன்னை ஆக்கியோருக்கு

சந்தனம் பூசுகின்றாய்...



பசியை உனக்கு தருவோருக்கு

சோறு சமைக்கின்றாய்....

நஞ்சை உனக்கு தந்தோரிடமும்

நலமா என்கின்றாய்..



கடலைப் உனக்குள் வைத்துக் கொண்டு

பிச்சை கேட்கின்றாய்...

ஆயிரம் சூரியன்  அருகில் இருந்தும்

இருட்டில் இருக்கின்றாய்....



நாட்டை சுமக்கும் தோள்கள் உனது

மூட்டை சுமக்கின்றாய்...

மூட்டை சுமந்தும்  பசியால் ஏனோ

முடங்கிப் போகின்றாய்... ?



உறவுகள் ஆயிரம் இருந்தும் ஈற்றில்

உணவுக்கலைகின்றாய்..

தேகம்தேய உழைத்துமென்ன

தெருவில் நிற்கின்றாய்...



தென்றல் கூட புயலாய் மாறும்

தெரிந்து கொள்ளப்பா...

துவண்டு கிடந்து அழிதல் விட்டு

துணிந்து நில்லப்பா



மரணம் என்ற நோயை கொல்ல

மருந்து இல்லப்பா..!

வாழும் வரைக்கும் உனக்காய் வாழ்வை

வாழ்ந்து பாரப்பா



தண்ணீர்கூட கோபம் வந்தால்

தட்டிக் கேட்கும்பா..

வெட்கம் கெட்ட உந்தன் நெஞ்சை

வெட்டிப் போடப்பா..



பாசம் நேசம் பந்தம் எல்லாம்

பழைய பொய்யப்பா

வேசம்போடும் மனிதர் கூட்டம்

விளங்கிக்கொள்ளப்பா



உந்தன் கையில் காசு இருந்தால்

ஊரும் மதிக்கும்பா...

சுவாசம் கூட  தேவையென்றால்

சும்மா கிடைக்கும்பா...



தண்ணீர் தோட்டம் வைத்துக்கொண்டு

தாகம் குடிக்காதே....

கண்ணீர் சிந்தி கலங்கி நின்றால்

கவிதை பிறக்காதே...



குயிலை உனக்குள் வைத்துக்கொண்டு

குரைத்துத் திரியாதே...

குட்டுப்பட்டு குட்டுபட்டே

குன்றிப்போகாதே..



காக்கைகூட நல்லவை சொன்னால்

காது கொடுத்து கேள்...

அகந்தை கொண்டு கேட்க மறுத்தால்

அதுவே உனக்கு வாள்..



நன்றி கெட்ட மனிதனை பார்க்கிலும்

நாய்கள் என்றும் மேல்...

என்பதை உணர்ந்து வாழ்வாயாயின்
வானம் உனக்கு கீழ்...!


நன்றி.
*தமிழ் ஆதர்ஸ்  09.10.11

*சாத்தான் குளம் அப்துல் ஜப்பார்( www.worldtamilnews.com)(12.10.10)
*ஞாயிறு வீரகேசரி (30.10.11)

*எங்கள் தேசம் (01.11.11) 

வியாழன், 15 செப்டம்பர், 2011

''தலையில்லா முண்டங்கள்''



‎மந்தையாய் வாழ்ந்த 
எந்தையர் வாழ்வில் 
விந்தைகள் புரிந்து 
சிந்தையை கவர்ந்த எங்கள்
சிந்தனை சிற்பி


கலாநிதி மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் நினைவு நாள் செப்டம்பர் 16அதனை முன்னிட்டு இக்கவிதை பிரசுரமாகின்றது. இக்கவிதை இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தால் தேசிய மட்டத்தில் கவிஞர்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் 3 இடம் பெற்றுள்ளது .இக்கவிதை அடங்கிய நூல் 'அடையாளம்' எனும் பெயரில் தென்கிழக்கு பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்துள்ளது.

லையெழுத்தை தலைகீழாய் எழுதிவிட்ட ஆண்டவனே

தந்துவிடு நல்வாழ்வை எமக்கு!-'தங்கத்
தலைவரினை' இழந்துவிட்டு தவிக்கின்ற 'எம்சமூகம்'
தலையிழந்து முண்டமெனக் கிடக்கு!

தலைவர்நாம் என்றவர்கள் தறுதலைகள் முன்னாலே
தலைகவிழ்ந்து நிற்கின்றார் எதற்கு-?அவர்
தலையாட்டி பொம்மைகள்போல் தனித்துவத்தை விட்டுவிடின்
தருவாரே சிலஎலும்பு அதற்கு!

தலையில்லாத் தலைகளினை தலைவரென நினைத்ததற்காய்
தலையிடிதான் எங்களுக்குப் பரிசு!-பதவிக்காய்
தலைசொறிந்து பல்லிளிக்கும் தலைவர்களால்
தடுமாறும் எம்வாழ்க்கை தரிசு!

தலைதடவி கண்களிலே கண்கெட்டோர் கைவைக்க
தலையணையில் எம்தலைகள் இருக்கு!-தங்கள்
தலைதப்பி னால்போதும் என்கின்ற கோழையரை
தேர்ந்தெடுத்த நாங்கள்தான் கிறுக்கு!

தலைப்பிறையை மேகத்தால் தகர்த்தெறிய முடியாது
தலைவர்களே கொண்டிடுவீர் ஒப்பு!-உங்கள்
தலைகளினை காப்பாற்ற கண்ணிருந்தும் குருடர்களாய்
தவறுகளை பார்த்திருத்தல் தப்பு!

தலையில்லா முண்டங்களாய் மாறிவிட்ட எம்மவர்க்கு
தலையாக ஒருதலைவன் எழுவான்!-அவன்
தலைவரவர் சுவடுகளில் தயங்காமல் நிதம்நடக்க
தளையொடிந்து சிரிக்குமெங்கள் எழுவான்!!



திங்கள், 12 செப்டம்பர், 2011

போராளிகளே புறப்படுங்கள்..!

 இலங்கை முஸ்லிம் சமூக அரசியல் விடுதலையின் அடிநாதம் மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப்



அரசியல் களத்தில் உயிரை துச்சமென மதித்து தனித்துவக் கட்சியின் மூலம் முஸ்லிம் சமூகத்தின் குரலை நாடாளுமன்றத்தில் ஒலிக்கச் செய்து தனித்தவ முத்திரை பதித்த மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் மறைந்த நாள் செப்டெம்பர் 16.இலங்கை முஸ்லிம் சமூகத்தின் இருப்பு, கெளரவம், தனித்துவம், உரிமை பற்றிச் சிந்தித்து ஆயுதக் கவர்ச்சியின்பால் செல்லவிருந்த இளைஞர்களை அஹிம்சை வழிதிருப்பி வரலாறு கண்ட பெருமை இவரையே சாரும்.

எடுப்பார் கைப்பிள்ளைகளாக ஊமைகளாக பேசாமடந்தைகளாக விளங்கிய முஸ்லிம்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலம் அரசியல் மயப்படுத்தினார். மர்ஹூம் அஷ்ரப் ஏனைய சமூகம் அனுபவிக்கும் உரிமைகளை முஸ்லிம் சமூகமும் பெற்று தன்மானத்துடன் வாழ வழி வகுத்தார்.வேதனை, கண்ணீர், இரத்தம், உயிர் ஆகியவற்றை விலையாக அதற்கு வழங்கினார். தனது பயணப் பாதையை வகுத்ததோடு அதற்கான வழியையும் அமைத்தார். புரையோடிப்போன யுத்தத்தின் கொடுமை கண்டு மனம் வெதும்பினார்.

இனவாதம் பேசி இரத்த ஆற்றில் குளித்தோரை தன் பேச்சுப் புலமையினால் விவாதத்திற்கழைத்து வெற்றியும் கண்டார். இதன் மகுடமாக தேசிய ஐக்கிய முன்னணியைத் தோற்றுவித்தார். தார்மீக கோட்பாட்டையும் மானுட நேயங்களையும் மதிக்கும் அடையாளமாக இதனை மாற்றியமைத்தார். மூன்றரை மணி நேரம் பேசி பாராளுமன்றில் சாதனையும் படைத்தார்.14 வயதில் தாய் எனும் கவிதையுடன் ஆரம்பித்த இலக்கியப் பயணம் 'நான் எனும் நீ' எனும் தொகுப்போடு முடிவடைந்தது. அதில் தனது மரணம் அமையப்போகும் விதத்தை ஆருடமாகக் கூறினார் .மகாகவி அல்லாமா இக்பாலின் கவிதைகளுடன் காதல் கொண்டு சங்கமித்ததுடன் "போராளிகளே புறப்படுங்கள்" என கவித்துவம் மிளிரப் பாடினார்.

பன் மொழிப் புலமையும், பேச்சாற்றலும், தூரதிருஷ்டிச் சிந்தனையும், அரசியல் சாணக்கியமும் அன்னாரது அணி கலன்களாக விளங்கியது.
முஸ்லிம் சமூகத்தின் விடுதலை கல்வியிலே தங்கியுள்ளதெனக் கனாக் கண்ட மர்ஹூம் அஷ்ரப் தென் கிழக்குப் பல்கலைக்கழகம், கல்விக் கல்லூரிகளின் அமைவினூடே அதனை நனவாக்கிக் காட்டினார். சர்வதேசமும் முஸ்லிம் களுக்கும் பிரச்சினை உண்டென இனங்காண வைத்த சிறப்பு மர்ஹூம் அஷ்ரபுக்கு மட்டுமே உரித்தானதாகும்.
அரசியல், கல்வி, கலை, கலாசாரம், ஊடகம் என பல்துறையில் செயல் வீரனாக விளங்கிய வித்தகனின் உயிர் செப்டெம்பர் 16 இல் அரநாயக்க மலைத் தொடரில் அணைந்தது. முழு இலங்கை முஸ்லிம்களையும் ஆறாத் துயரில் ஆழ்த்திய நாள் ஒவ்வொரு செப்டெம்பர் 16 இலும் இறை மீட்கப்படுகிறது.



மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் மரணிக்க முன்பு எழுதப்பட்ட இந்த கவிதை ''நான் எனும் நீ'' என்ற கவிதை நூலில் இடம்பெற்றுள்ளது.
''நானும் எனும் நீ''  கவிதை நூலே இலங்கையில் மிகப்பெரிய தொகுப்பாக வெளிவந்த தனி நபரின் கவிதை நூலாகும். அன்னாரின் ஆத்மா சாந்திக்காக அனைவரும் பிரார்திப்போம்


போராளிகளே புறப்படுங்கள்
ஒரு துப்பாக்கியின் ரவைகளினால்
எனது இறைச்சல் அடங்கி விட்டதுக்காய்
நமது எதிரி
வென்றுவிட்டான் என்று நீ
குழம்பிவிடக் கூடாது

அன்றுதான்
போராட்டம் எனும் நமது
இருண்ட குகைக்குள்
வெற்றிச் சூரியனின்
வெண்கதிர்கள் நுழைகின்றன
என்பதை நீ மறந்து விடவும் கூடாது

உனது தலைவனுக்கு
ஒன்றுமே நடக்கவில்லை என்பதனை
நீ எப்போதும் மறந்திடாதே!
தலைவர்கள் ஒரு போதும்
மரணிப்பதில்லை என்பதனை
நான்
சொல்லித்தரவில்லையா?
என்னை அதற்காய் நீ
மன்னித்து விடுவாயாக.

நாம் அல்லாஹ்வின் பாதையில்
நடந்து வந்தவர்கள்
நீங்களெல்லாம் தொடர்ந்து அப்பாதையில்
நடக்க இருப்பவர்கள்

இந்தப் போராட்டத்தில்
சூடுண்டாலும், வெட்டுண்டாலும்
சுகமெல்லாம் ஒன்றேதான்
நமது போராளிகள்
யாரும் மரணிக்கப்போவதில்லை!

போராளிகளே புறப்படுங்கள்
ஓரத்தில் நின்று கொண்டு
ஓய்வேடுக்க நேரமில்லை
இந்த மையத்தைக் குளிப்பாட்டுவதில்
உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்

தண்ணீரும் தேவையில்லை
பன்னீரும் தேவையில்லை
உங்கள் தலைவனின் உடலில்
இரத்தத்தால் சந்தனம் பூசப்பட்டுள்ளதா?


அது அவனின் மண்ணறையில்
சதா மணம் வீச வேண்டுமெனில்
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்

இந்த மையித்தைக் குளிப்பாட்டுவதால்
கடைசி நேரத்தில் தலைமைத்துவக்
கட்டுப்பாட்டை மீறாதீர்கள்
கண்ணீர் அஞ்சலிகள் போதும்
கவலைகளை கொஞ்சம் மறந்து தூக்குங்கள்

இரத்தத்தால் தோய்ந்திருக்கும்
எனது ஆடைகளை எடுத்து வீசாதீர்கள்
வேண்டுமெனில் எனது “இஹ்ராம்''
துண்டுகளை
அவற்றுக்கு மேலே எடுத்துப் போடுங்கள்

எனது உடலில் இருந்து பொசிந்து வரும்
இரத்தச் சொட்டுக்கள், அவற்றை தழுவும்
பசியுடன் இருப்பதைப் பாருங்கள்

எனது மூக்குக்குள்ளும்
எனது காதுகளுக்குள்ளும்
பஞ்சுத் துண்டங்களை வைத்தென் முகத்
தோற்றத்தை
பழுதாக்கி விடாதீர்கள்

சில வேலைகளில் உங்களை நான்
சுவாசிக்காமலும்
சில வேலைகளில் உங்களை நான்
கேட்காமலும்
சில வேலைகளில் உங்களை நான்
பேசாமலும் இருந்திருக்கின்றேன்

குருடர்களாகவும்
செவிடர்களாகவும்
ஊமையர்களாகவும் இல்லாதவர்களால்
இப்போராட்டத்தில் நின்று பிடிக்க முடியாது

கபுறுக் குழிக்குள்ளாவது
என்னை சுவாசிக்க அனுமதியுங்கள்
ஹுர்லீன்களின் மெல்லிசைகளை
கேட்டு ரசிக்கும் பாக்கியத்தைத் தாருங்கள்

தூக்குங்கள் இந்த மையித்தை இன்னும்
சுனக்கவும் தேவையில்லை.
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்
ஓரத்தில் நின்றுகொண்டு
ஓயாமல் தர்க்கம் செய்யும்

வீரத்திற்கு வையுங்கள் முற்றுப் புள்ளி
 
கருத்து வேறுபாடென்னும்
கறையான்கள் வந்துங்கள்
புரிந்துணர்வை சீரழிக்கும்! மிகவும்
புத்தியுடன் நடந்துகொள்ளுங்கள்


வேகத்தைக் குறைக்காமல்
வெற்றியுடன் முன்னே செல்லுங்கள்


ஆலமரமாய்
ஆயிரம் விழுதுகளுடன் நமது மரம்
வாழவேண்டும் - அதை
வாழ்விற்கப் புறப்படுங்கள்


எனது பனி இனிது மடிந்தது
உங்கள் பணிகளைச் செய்வதற்காய்ப்
புறப்படுங்கள்


அவனின் நாட்டத்தை
இவனின் துப்பாக்கி ரவைகள்
பணிந்து தலைசாய்நது
நிறைவேற்றியுள்ளன.


விக்கி அழுது
வீணாக நேரத்தை ஓட்ட வேண்டாம்
தூக்கி விரைவில் எடுத்துச் சென்று
தொழுது விட்டு அடக்குங்கள்


மர்ஹூம் எம். எச். எம். அஷ்ரப் 

சனி, 10 செப்டம்பர், 2011

''விருதுகள் பெறும் எருதுகள்''


ருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…

நடப்பன ஊர்வன
நடிப்பன பறப்பன
விலங்குகள் சிலவும்
விழாவுக்கு வந்தன…


காணிகளை
களவாக மேய்வதில்
‘கலாநிதி' முடித்த
கிழட்டுக் கிடாக்கள்தான்
கிரீடத்தை சூட்டுகின்றன…


இலவம் பழத்துக்காய்
இலவுகாத்த
மூளையே இல்லாத
முட்டாள் கிளிகள்

கீச்சுக் குரலில்
மூச்சு விடாமல்
சிறுநீரை பற்றி
சிலாகித்து பேசின…

ஒலிவாங்கியை
எலி வாங்கி
எருமைகள் பற்றியே
எடுத்துவிட்டன…


பாவம் பசுக்கள்…!
பாலைப் பலருக்கும்
பருகக் கொடுத்துவிட்டு
குட்டிகளோடு
குமுறிக் கொண்டிருந்தன
குளக்கரையில்.


பசுக்களை
கொசுக்கள் கூட
கணக்கில் எடுக்கவில்லை….


பாம்புகள்
பாலுக்காய்
படப்பிடிப்பிலிருந்தன…

வெட்கமில்லாத
வெண்பசுக்கள்
முலைகளை
மூடிமறைக்காததால்
முள்ளம் பன்றிகள் பார்த்து
மூச்சிரைத்தன…
பார்க்கு மிடமெங்கும்
பாலே ஓடியது…


பூனைகள் எலிகளோடு
புன்னகைத்தவாறு
முயல்களை
முழங்குவது போல் பார்ப்பதில்
மும்முரமாய் இருந்தன…


எருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…


வாழ்த்துப் பாடின
வால் பிடித்தே
வயிறு வளர்க்கும்
வாலான் தவளைகள்….

கால் பிடித்தே
காரியம் முடிக்கும்
காகங்களும்
கழிசரைக் கழுதைகளும்
காளைகளுக்கு மாறி மாறி
கவரிவீசின…

மாக்கள் கூடிய
மாநாடு அல்லவா…?
பூக்களுக் கங்கே
புகழாரமில்லை

அழுக்குத்தான் அன்று
அரியணையில் இருந்ததால்
சாணமே அங்கு
சந்தனமாயிருந்தது…

தயிர்ச் சட்டிளாலும்
நெய் முட்டிகளாலும்
இவ்வருடத்திற்கான விருதுகள்
இழைக்கப்பட்டிருப்பதாகவும்
பருந்துகளுக்கு
விருந்து வழங்கினால்தான்
அடுத்த வருடத்திற்கான
‘ஆளுநர்' தெரிவாவரென்றும்
அதிலும்
முதுகு சொரிவதில்
‘முதுமாணி’ முடித்தவர்களுக்கே
முன்னுரிமை இருப்பதாகவும்
முதலைகள்
முணுமுணுத்தன…

எருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…

நாக்கிலுப்புழு ஒன்றே
நடுவராக இருந்ததால்
மான்களுக்கும்
மயில்களுக்கும்
மரியாதை அங்கில்லை.
வான் கோழிகளுக்குத்தான்
வரபேற்பிருந்தது.
பரிகளும் வரவில்லை
நரிகளும்
நாய்களுமே
நாற்காலியை நிறைத்திருந்தது.

மாநாட்டின் ஈற்றில்
எருமைகள் பற்றி
பெருமையாய்
சாக்கடை ஈக்கள்
சங்கீத மிசைத்தன….


மரம்விட்டு
மரம்தாவும்
மந்தி
மந்திரிகள்
கையடித்தன
கைலாகு கொடுத்தன…
எதுவுமே தெரியாத
எருமைகளுக்கு
பன்னாடைகளால
பொன்னாடை போர்த்தி
பொற்கிழி வழங்கின…

மாடுகளின் மாநாட்டில்
விருதுகள் பெற்ற
எருதுகளின்
வீர பிரதாபங்களும்
பல்லிளிப்புடன் கூடிய
படங்களும்
விளம்பரமாய்
நாளை வரலாம்
நாய்களின் பத்திரிகையில்...

கவிதையை பிரசுரித்த
*சுடர் ஒளி, 
*செங்கதிர், 
*தினகரன் வாரமஞ்சரி, 
*பதிவுகள், 
*வார்ப்பு

ஆகிய ஊடகங்களுக்கு நன்றி.

சனி, 5 மார்ச், 2011

அன்புள்ள துரோகிக்கு...!

ன்புள்ள துரோகிக்கு
ஆசையுடன் எழுதுகிறேன்
பண்புள்ள பழையவனின்
பாச வணக்கங்கள்...

எப்படிநீ இருக்கின்றாய்
எனை உனக்கு ஞாபகமா..?
அப்படியே உன்நினைவு
அடிநெஞ்சில் இருக்குதம்மா...!

ஏதோ ஒருமூலையில்நான்
எப்படியோ இருந்தாலும்...
என்னுடைய மூளையெங்கும்
உன்குரலே கேட்குதம்மா...!

என்புள்ள வளர்ந்திட்டான்..
ஏதேதோ கேட்கின்றான்...
விண்ணுயர்ந்த கவிமரத்தின்
விலாசத்தை வினவுகின்றான்....

உன்பெயரை உரைத்திடவா?
உண்மைகளை மறைத்திடவா...?

கண்ணாடி உடைந்தகதை
கற்பனைகள் இடிந்தகதை
என்நாடி நரம்பெங்கும்
எரிஅமிலம் வடிந்தகதை....
என்செய்வேன் என்கதையை
எப்படிநான் செப்பிடுவேன்.

வண்ணக் கவிபேசும்
வடிவான விழிகளினால்
சின்னக் குறுஞ்சிரிப்பால்
சிணுங்கிவிழும் தேன்பேச்சால்
தென்னங்-கள் வழிகின்ற
கன்னங்கள் வழியாக
எண்ணங்கள் மீதேறி
என்நெஞ்சில் இடம்பிடித்தாய்.
என்னவளே பின்னெதற்காய்
எனைக்கொல்ல அடம்பிடித்தாய்..?
என்னநான் செய்தேனோ
ஏனென்னை நீமறந்தாய்..?
கண்ணே உனக்கு
காதல் கிளித்தட்டா..?

அன்றொருநாள் பாதையில்நான்
என்பாட்டில் போகையிலே
நின்றாய் விழிகளினால்
நீயேதான் தூதுவிட்டாய்...

தின்னும் உணவுக்கே
திண்டாடும் எனைத்தெரிந்தும்
இன்னும் தொழிலின்றி
இடர்காணும்  எனைப்புரிந்தும்
என்னை நேசித்தாய்
என்மனதை யாசித்தாய்
உன்னை சுவாசித்தேன்
உயிருதட்டால் வாசித்தேன்
காலம் 'ஜெட்டாக'
கடுகதியில் ஓடையிலே
நாளம் அறுத்தெறிந்தாய்.
நட்டாற்றில் விட்டெறிந்தாய்.
காலம் காலமாக
கட்டிக்காத்த என்தன்பின்
ஆழம் புரியாமல்
அடியேநீ ஒடித்துவிட்டாய்.

காலப் பெருவெளியில்
காசுபுகழ் நீதேடி
காதலித்த ஏழையிவன்
காலதனை வாரிட்டாய்.
பெண்ணேநீ என்னை
பேயனாய் எண்ணிவிட்டாய்
கண்ணே உனக்கொருநாள்
காலம்பதில் சொல்லும்.
என்றன்று உன்பிரிவால்
எரிநெருப்பால் எழுதியதை

என்னவென்று சொல்லிடுவேன்....
எப்படிநான் பேசிடுவேன்...?


நன்றி 
*சுடர் ஒளி-2008

வியாழன், 10 பிப்ரவரி, 2011

'ஆமா'போடப்பா... அத்தனையும் கிடைக்குமப்பா...



கேள்வி கேட்பவர்க்கு
கேழ்வரகும் இல்லையப்பா...
'ஆமா'போடப்பா...
அத்தனையும் கிடைக்குமப்பா...

வாள்பிடிக்க எண்ணாதே...?
வாய்காட்டி நிற்காதே.....
வாலாட்ட கற்றுக்கொள்
வாழ்க்கை இருக்குதப்பா......

காகம் அழகென்று
கருத்துரைத்தால் அதிகாரி.....
புறாப்போன்று இருக்குதென்று
புன்னகைக்க பழகிக்கொள்......

பதவிபெற வேண்டுமென்றால்
பாய்விரிக்கக் கற்றுக்கொள்
முன்னணியில் திகழ்வதற்கு
முதலிரவுக் கொத்துக்கொள்....

'இன்டர்வியுவில்' சித்திபெற
'இங்கிலிசும்' உனக்கெதற்கு...?
காசுபணம் இருக்கிறதா...?....
கழுதைக்கும் இடமிருக்கு......

எதிர்த்துப் பேசாதே...
எதிர்காலம் மடிந்துவிடும்
எடுபிடியாய் மாறிக்கொள்
'எம்பி'யாய் மாறிடலாம்......

உண்மையாய் உழைக்காதே...
உன்தலைக்கு வேட்டுவரும்..
பொறுப்பாக நடிதம்பி
பொன்பரிசு வீடுவரும்.......

சமூகம் என்றோடாதே..
சாவுமணி அடிப்பார்கள்...
சுயநலத்தை கையில்கொள்
சுகத்தோடு வாழ்ந்திடுவாய்....


ஞாயிறு, 6 பிப்ரவரி, 2011

உம்மாநான் சவூதிக்கு போறேன்...!


இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களில் குறிப்பாக தென்கிழக்கு முஸ்லிம்களின்  பேச்சுவழக்கில்  இக்கவிதை அமைந்துள்ளது.


உம்மாநான் சவூதிக்கு போறேன்-எங்கட
கவலைகள் கஷ்டங்கள் கலஞ்சோடிப்போக...!
உம்மென்று இருக்காதே நீயும்-என்ட
கண்ணப்போல் உனையென்றும் புள்ளநான் காப்பேன்!

வாப்பாநீங்க ஒழச்சது போதும்-ஒங்கட
பெரச்சின லாத்தையும் நானினி பாப்பேன்...!
சாப்பாட்டுக் கினியென்ன பஞ்சம...?-ஒங்கள
மௌத்தாகும் வரைக்கும்நான் மனசாற பாப்பேன்..!

கலியாண வயசுள்ள என்ன-நீங்க
கரசேக்க படுகிற பாட்ட நான் அறிவேன்...!
என்னகா செய்றநான் உம்மா
பொம்புளயா  பொறந்தது யாரோட குத்தம்..?

அப்பம் வித்து காக்கா படிச்சார்
கடசியில் நமக்கெல்லாம் என்னத்த கிழிச்சார்...?
கொமர நெற வேத்த முந்தி-காக்கா
கொறுக்காட பேத்திய  கலியாணம் முடிச்சார்...

புழிஞ்ச தேங்காப் பூவப்போல
புளிச்சித்தான் போனோம் அவருக்கும் நாங்க
கிழிஞ்ச 'சல்வார' மாத்த-உம்மா
ஒங்கிட்ட காசில்ல யார்ட்ட வாங்க...?

படிச்சாக்கள் இப்பெல்லாம் கூட-இஞ்ச
படிப்புத்தான் உசிரென்றோர் சோத்துக்கு வாட-நான்
பட்டங்கள் படிச்சதும் வீந்தான்-இப்ப
தொழிலின்றி இருந்திட்டா கெடைக்குமோ தீன்தான்...?

அரசாங்க தொழிலையும் காணோம்-நாங்க
அலையால மழையால அழிஞ்சிதான் போனோம்
'எம்பி'மார் பொய்கள கேட்டா-உம்மா
இதவிட மோசமா அழிஞ்சுதான் போவோம்...!

அதுவரும் இதுவரும் என்பார்-உம்மா
ஆனைய குடுத்தாலும் சோத்தோட திம்பார்
ஊட்டுக்கு தேடிநாம் போனா-'சேர';
எடுபிடி அனுப்பி 'பிஸி' எனச்சொல்வார்...

வக்கின்றி வாக்குகள் கேட்டு-ஊட்ட
வருவோர்க்கு உம்மாநீ வாருகள் காட்டு
எருமைங்க கதையல கேட்டு
ஏமாந்து இனிமேலும் போடாதே ஓட்டு....

ஒழைக்காட்டி ஒசந்தவர் யாரு? -நாங்க
ஒழைக்காம தின்டிட்டா மதிக்குமா ஊரு?
ஒழச்சத்தான் கக்கிஷம் போகும்-இத
ஒணராட்டி எப்புடி சோகங்கள் சாகும்..,?

நெனச்சமாரி நாங்க உடுக்க-இழிவா
நெனச்ச மச்சானுக்கு சீதனம் குடுக்க
சவூதிக்கு உம்மாநான் போறேன்-எல்லாம்
சரியாக வந்திடும் சிலநாளில் பாரேன்.

சொளையாக அனுப்புறன் காசி- ஊட்டில்
சொகமாநீ வாழலாம் பூட்டும்மா 'ஏசி'
தொணையாக இருக்கிறேன் உம்மா-நீயும்
கொளராத கக்கிஷம் போய்விடும் சும்மா...

சொர்க்கத்த வாங்கிட்டு வருவேன்-அந்த
மக்கத்து சொகமெல்லாம் ஒனக்குத்தான் தருவேன்
சொத்துக்கள் உம்மாநீ வாங்கு-எங்கட
சொர்க்கத்தில் இனியாச்சும் சொகமாக தூங்கு...!

மனம்வெச்சி என்னநீ அனுப்பு-சவூதி
நானிப்ப போனாத்தான் எரியும்நம் அடுப்பு..!
போஎன்டு செல்லித்தான் பாரு..-சொட்டு
நாளைக்குள் ஓடும்மா தங்கத்தில் ஆறு.....

ஒயித்தாட புள்ளநான் என்று
ஒதுக்கித்தான் பாக்காங்க ஊராக்கள் இன்று
அவியலின் முன்னால நாங்க
ஆரேண்டு காட்டித்தான் வாழனும் ஓங்க...

உம்மாநான் சவூதிக்கு போறேன்-எங்கட
கக்கிஷம் எல்லாமே காத்துல போகும்-என்ன
சும்மா நெனைக்காதே நீயும்-நாங்க
சொகுசாக வாழலாம் சொமையெல்லாம் தீயும்...!!

நன்றி
*விடிவெள்ளி(24.02.11)
*விடியலின் ராகங்கள்-2001



கவிதையில் இடம்பெற்றுள்ள கிராமிய வழக்குச் சொற்கள்.

பெரச்சின- பிரச்சினை       
லாத்தையும்- எல்லாவற்றையும்
கரசேக்க- கரை சேர்க்க     
காக்கா- மூத்த சகோதரன்
உம்மா-தாய்            
வாப்பா-தந்தை
பொம்புளயா-பெண்ணாக
என்னகா-என்ன?
என்னத்த?-எதை?
கொமர-கன்னிப்பெண்
நெறவேத்த- நிறைவேற்ற
தீன்-உணவு
ஆனை-யானை
கொறுக்காட-கறுப்பானவர்களை குறிக்கும் பட்டப்பெயர்
வக்கில்லா- தகுதியின்றி
ஊட்ட-வீட்ட
கக்கிஷம்-கஷ்ட்டம்
வாருகள்-வீட்டின் முற்றத்தில் இருக்கும் குப்பைகளை அகற்ற உதவும் பொருள்
சொளையாக-சுளையாக
தொணையாக-துணையாக
கொளராத-அழாதே
எண்டு-என்று
சொட்டு-சிறிது
ஒயித்த- இஸ்லாமியர்களுக்கு விருத்தசேதனம் செய்பவர்
அவியல்- அவர்கள்
ஆரேண்டு-யார் என்று

வியாழன், 3 பிப்ரவரி, 2011

தலையில்லா முண்டங்கள்..!





லையெழுத்தை தலைகீழாய் எழுதிவைத்த ஆண்டவனே
தந்துவிடு நல்வாழ்வை எமக்கு!-'தங்கத்
தலைவரினை' இழந்துவிட்டு தவிக்கின்ற 'எம்சமூகம்'
தலையிழந்து முண்டமெனக் கிடக்கு!

தலைவர்நாம் என்றவர்கள் தறுதலைகள் முன்னாலே
தலைகவிழ்ந்து நிற்கின்றார் எதற்கு-?அவர்
தலையாட்டி பொம்மைகள்போல் தனித்துவத்தை விட்டுவிடின்
தருவாரே சிலஎலும்பு அதற்கு!

தலையில்லாத் தலைகளினை தலைவரென நினைத்ததற்காய்
தலையிடிதான் எங்களுக்குப் பரிசு!-பதவிக்காய்
தலைசொறிந்து பல்லிளிக்கும் தலைவர்களால்
தடுமாறும் எம்வாழ்க்கை தரிசு!

தலைதடவி கண்களிலே கண்கெட்டோர் கைவைக்க
தலையணையில் எம்தலைகள் இருக்கு!-தங்கள்
தலைதப்பி னால்போதும் என்கின்ற கோழையரை
தேர்ந்தெடுத்த நாங்கள்தான் கிறுக்கு!

தலைப்பிறையை மேகத்தால் தகர்த்தெறிய முடியாது
தலைவர்களே கொண்டிடுவீர் ஒப்பு!-உங்கள்
தலைகளினை காப்பாற்ற கண்ணிருந்தும் குருடர்களாய்
தவறுகளை பார்த்திருத்தல் தப்பு!

தலையில்லா முண்டங்களாய் மாறிவிட்ட எம்மவர்க்கு
தலையாக ஒருதலைவன் எழுவான்!-அவன்
தலைவரவர் சுவடுகளில் தயங்காமல் நிதம்நடக்க
தளையொடிந்து சிரிக்குமெங்கள் எழுவான்!!




                         நன்றி.
*சுடர் ஒளி
*அடையாளம்(கவிதை நூல்)
*வார்ப்பு
*இருக்கிறம்-பெப்ரவரி-2011
*விடிவெள்ளி (10.03.2011)

புதன், 2 பிப்ரவரி, 2011

கும்பிட்ட கைகளால் குண்டுவைப்போம்..!

 கூட இருந்தே
குழிபறிப்போம்
கும்பிட்ட கைகளால்
'குண்டுவைப்போம்'

கதைத்து பேசியே
'கழுத்தறுப்போம்'
அடுத்தவனின் வளர்ச்சிக்கு
'ஆப்படிப்போம்'

மற்றவர் சிரித்தால்
மனமுடைவோம்
நண்பணின் அழுகையில்
நாம் மகிழ்வோம்

கட்டிப்பிடித்து
கலங்கிடுவோம்
எட்டி நடக்கையில்
ஏசிடுவோம்

தட்டிப்பறித்தே
தளைத்திடுவொம்
மட்டி மடையரை
'மஹான்' என்போம்

எமக்கென்று சொன்னால்
எதுவும் செய்வோம்
'எருமையின் மூத்திரம்
தீர்த்தமென்போம்'

வடிவான அன்னத்தை
'வாத்து' என்போம்
பூக்களை அழகிய
புற்களென்போம்

கானக்குயிலினை
காகமென்போம்
பேசும் மனிதனை
ஊமையென்போம்

'எம்மவர் அமுதினை
எச்சிலென்போம்...
அடுத்தவர் எச்சிலை
அமுதமென்போம்'

'நாய்களை கூப்பிட்டு
பாடு என்போம்
நாட்டுக் குயில்களை
ஓடு என்போம்'

உணவல்ல இதுநல்ல
ஊத்தையென்போம்
உணவிருக்கும் ஆனோலோ
ஊத்தை உண்போம்...

காசுக்காய்  குதிரையை
கழுதையென்போம்
கடவுளை கூட
கூவி விற்போம்...

காகித கத்தியால்
போர் தொடுப்போம்-பின்னர்
கவட்டுக்கள் கைவைத்து
தூங்கிடுவோம்.

இருக்கின்ற போதும்
இல்லையென்போம்
நறுக்கி நறுக்கியே
நாம் உயர்வோம்

கொஞ்சிப்பேசியே
கொள்ளிவைப்போம்..
கொஞ்சும் தமிழையும்
கொன்றுவைப்போம்

தூண்டிவிட்டு நாங்கள்
தூர நிற்போம்.
துவேஷம் வளர்ந்திட
தோள்கொடுப்போம்.

வகை வகையாக
வலை பின்னுவோம்
வயிற்றினில் அடித்தே
வளர்ந்திடுவோம்

எடுத்தெதற்கெல்லாம்
பிழைபிடிப்போம்
எங்கள் பிழைகளை
மறைத்திடுவோம்

குறைகள் சொல்லியே
குழப்பம் செய்வோம்
குழப்பங்கள் செய்தே
குதூகலிப்போம்

'மரங்களின் கரங்களை
முறித்திடுவோம்
பின்னர் மழையிடம் நாங்களே
பிச்சை கேட்போம்'

சிந்திக்க சொன்னால்
'சீ' என்னுவோம்
சீர்கெட்டு போவதே
சிறப்பு என்னுவோம்

'பாவங்கள் செய்தே
பழகிவிட்டோம்
மரணம் இருப்பதை
மறந்திட்டோம்'

வாழ்வில் எதுக்கும்நாம்
வருந்தமாட்டோம்
''சுனாமி'' வந்தாலும்
திருந்தமாட்டோம்..

கூட இருந்தே
குழிபறிப்போம்
கும்பிட்ட கைகளால்
'குண்டுவைப்போம்..!'

நன்றி
 *பதிவுகள்.
*காற்றுவெளி -செப்டம்பர் -2010*வீரகேசரி உயிர் எழுத்து (06.02.2011)

தெருக்குரல்-01

 தெருக்குரல்-01



01.கொஞ்சும் தமிழ்மொழியை கொல்ல நினைப்பவர்க்கு
   நஞ்சுவைப் போம் நாம்.


02.கோழையாய் இருக்காது கொடுமைகளை பார்த்தபடி
   மூலையில் கிடக்காதென் மூளை.


03.திருக்குறளின் வடிவத்தில் நறுக்குகளாய் இருக்கின்ற 
   தெருக்குறள்கள் தருவேன் நான்.


04.பூவோடு சேர்ந்திருந்தால் பூமியெங்கும் இருக்கின்ற 
   புல்கூட வாசம் தரும்.


05.பேஸ்புக் தெரியாதார் பேயர்கள் நவயுகத்தில்
   வேஸ்டான வெங்காயங்கள்.


06.பருப்புக்கே விலையேற்றும் பாவிகளை வரவேற்க
   செருப்பிலே மாலை செய்.


07.பத்திருகை சேர்ந்து முடியாத செயல்தன்னை
   பத்திரிகை செய்யும் பார்.


08.கூழைக்குடித்தாலும் கூனாத கூட்டம்நாம்;வாழ்வதற்குன்
   காலைப்பிடிப்போமோ சொல்.


 09.கூடிக் குழிபறிப்போர் அதிகமுள குவலயத்தில்
    தேடி நட்பைத் தேர்.


10.காட்டிக் கொடுத்து வாழ்கின்ற வாழ்வை விட
   கூட்டிக் கொடுத்தல் மேல்.


11.அன்பான மனது அசையாத நட்பி ரண்டும்
   உலகாம் மனித உயிர்க்


12.தமிழே தெரியாது தப்பாக புனைவோரை
   உமிழும் ஓர்நாள் உலகு.


13.பல்லிழித்து விருதுபெறும் பண்டிதரை கண்டாக்காள்
   கல்லெறிந்து கொல்லல் கடன்


14.நாடிருந்தென்ன? நகரிருந்தென்ன? குடியிருக்க
   வீடின்றேல் வாழ்க்கை வீண்.


15.அறிவிப்பு செய்வோரின் தமிழ்க்கொலைகள் கண்டாலே
   அரிவாளே வெட்கப் படும்.


16.என்னைமறந்துநீ எப்படித்தான் இருக்கின்றாய்...?
   உன்னை மறப்பேனா நான்


     

நாக்கறுத்து கொடுத்துவிட்டு... நாய்வாலை ஆட்டி ..ஆட்டி...


நானிலம் செழிப்பதற்கு
               நல்வினைகள் புரிபவரை
               நாடிநிதம் தேடுவதா பட்டம்?
பாநிலத்தில் கவிதை நட்டு
               பாருலகை வென்று நிற்கும்
              பாவுழவர் சூடுவதா பட்டம்?

தேனமுதாய் கல்விதனை
              தேர்ந்து நிதம் கற்பவரை
              தேடிபுகழ் கூட்டுவதா பட்டம்?
வானமதில் இளசு எலாம்
              வண்ண வண்ண மாகவிட்டு
              வாழ்வின் நிலை காட்டுவதா பட்டம்?

தகுதியற்ற முண்டமெலாம்
              தலைவராகி ஊர்புகழ
              தன்பெயர்முன் போடுவதா பட்டம்?
பகுதி விகுதி தெரியாத
              படைப்புலக குப்பையெலாம்
              பல்லிளித்து வாங்குவதா பட்டம்?

காக்கை பிடிப்பவர்க்கு
             கற்பிக்கத் தகுதி பெற்றோர்
             கால்பிடித்து வாங்குவதா பட்டம்?
நாக்கறுத்து கொடுத்துவிட்டு
             நாய்வாலை ஆட்டியாட்டி
            நக்கரைத்து வாங்குவதா பட்டம்?

'உனக்கு நாளை சூட்டுகிறேன்
            எனக்கு இன்று சூட்டு' என்று
           திட்டமிட்டு திருடுவதா பட்டம்?
கணக்கற்ற பட்டம் வேண்ட
           கலங்காதே தோழா நீயும்
           காசிருந்தால் வாங்கிடலாம் பட்டம்..!!


                          நன்றி.
தினகரன் வாரம *ஞ்சரி
*சுடர் ஒளி
*இலங்கை வானாலி முஸ்லிம் சேவை
*பதிவுகள்

எதிர்வீட்டு நாய்!.


ருறங்கும் நேரத்தில்
தொலைபேசினாய்-அன்று
யாருமற்ற என்மனதை
விலைபேசினாய்
காதலெனும் மீன்பிடிக்க
வலைவீசினாய்-என்னை
காதலித்து காதலித்து
கவிபூசினாய்-பின்னர்
எச்சிலையே போவென்று
எனைவீசினாய்
எச்சமிட்டு எச்சரித்து
எனக்கேசினாய் -உனக்கு
அப்பொழுது நான்தெரிந்தேன்
உலகழகனாய்
இப்பொழுது நானுனக்கு....
எதிர்வீட்டு நாய்!.

                                நன்றி.
*தித்திக்குதே-வசந்தம் தொலைக்காட்சி

ஒன்ன நெனைக்காம ஒருபொழுதும் போனதில...!








ங்கோ மலர்ந்திருந்து
எனக்குள்ளே மணப்பவளே...
நெலவே ஒன்னால
நெலமறந்து நிக்கேன்டி...

கலபேசும் கண்ணால
வலவீசிப் போனவளே...
நாளுமொன நெனச்சி
வாழுதடி ஏ..உசுரு..

பாகக்கா இனிக்குதடி...
பால்புக்க கசக்குதடி...
ஒன்ன நெனச்சாக்கா
ஒலகமெலாம் வெறுக்குதடி

முருங்கப்பூ பல்லழகே
முட்டநிற தோலழகே
கஸ்தூரி பாக்குநிற
கரும்புதட்டுக் காரிகையே...

சோளகன் மீசநிற
சோக்கான ஓமுடியில்
ஏமனச முடிஞ்சதுநீ
ஏமாத்தி போய்விடவா...

ஆசவடிஞ்சிடுச்சா
அன்புத்தீ நூந்திடிச்சா
காசக் கண்ட மனம்
காதலன மாத்திடிச்சா...

அண்டுநீ சொன்னதெல்லாம்
அடிநெஞ்சில் கேக்குதடி...
இண்டு அதநெனச்சி
இதயஅற கொளருதடி...

பகலிரவாய கதச்சதெல்லாம்
பழயகத ஆயிடுமா..?
நாம்கதச்சி கொண்டதெல்லாம்
நா மறந்து போயிடுமா...?

பிரியத்த வெதச்சிபுட்டு
பிஞ்சியில பிச்சபுள்ள
நெஞ்சபத்த வெச்சி
நெனப்பெல்லாம் நீயானாய்...

'சினேகா' சிரிப்பினிலே
சிறகடிச்சு நான்பறந்து
'சல்வார்' கனவுகளில்
சாஞ்சகத நெனப்பிருக்கு

காசித் திமிரொழுக
கட்டழகி நீபோக
எட்டா பழமெண்டு
எண்ணியது நெனப்பிருக்கு...


ஏங்கவித நீபடிச்சி
ஏக்கமுடன் தூதனுப்ப
'ஆம்ஸ்ரோங்காய்' நானன்று
ஆனதெல்லாம் நெனப்பிருக்கு....

பாடப் புத்தகத்த
படிக்கிறத்த நான்விடுத்து
பலதடவ ஓமடலில்
படிச்சதெல்லாம் நெனப்பிருக்கு...

'டியுசனுக்கே' நாமொருநாள்
'டிமிக்கி' குடுத்துபுட்டு
காதலில புதுப்பாடம்
கற்றதெல்லாம் நெனப்பிருக்கு...

நான்தின்ன நீதின்ன
நம்மிதழ தேன்தின்ன
சின்னவிழி சொக்கி
சிணுங்கியது நெனப்பிருக்கு...

விழிகளில மீன்புடிச்சி
விரல்களில சுளுக்கெடுத்து
ராத்திரியில் நாம்செய்த
ரகசியங்கள் நெனப்பிருக்கு...

வீட்டார் இதஅறிஞ்சி
வீணாக ஒனக்கடிக்க
புழவா நாந்துடிச்சி
புழுங்கியது நெனப்பிருக்கு...

அலரிவெத அரச்சி
ஆத்திரமாய் நீதின்ன
அலறி நாந்துடிச்சி
ஒளறியது நெனப்பிருக்கு....

ஒன்னப்பாத்துவர
ஓரிரவில் மனசுவெர..
நாய்வெரசி நானுழுந்து
நடுங்கியது நெனப்பிருக்கு...

கொழந்த மனசறிஞ்சும்
கொரல்வலய முறிச்சவளே..
எல்லாம் நெனப்பிருக்கு
என்னெப்பு ஒனக்கிருக்கா...

ஒன்ன நெனைக்காம
ஒருபொழுதும் போனதில
ஏய்புள்ள... நீசொல்லு..
என்னொனக்கு நெனப்பிருக்கா...?

நன்றி.


*இலங்கை ஊவா சமூக வானொலி
*சுடர் ஒளி வாரவெளியீடு
*இருக்கிறம்

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

கண்ணோடு கலந்திட்ட காதல் பூ!


ண்ணோடு கலந்திட்ட காதல் பூவே-என்னை
          கனிவோடு நீபார்த்து கவிதைபேசு!
என்னோடு நீவந்தால் என்றன் நெஞ்சே-என்றும்
         உன்னோடு வாழ்வேன்நான் காசுதூசு..!

படிப்போடு தானுள்ளேன் பவளத்தேரே-உயிர்
         துடிப்போடு தானுள்ளேன் துவண்டு போகேன்-உள
வெடிப்போடு இன்றுன்னால் வெந்து போனேன்-நீ
          வெறுப்போடு பார்க்கின்றாய் நொந்துபோனேன்..!

வளமோடு வாழ்கின்ற வண்ணப்பூவே-வண்டு
        வடிவோடு வந்தாலா இதயம் தேடும்..?
நலமோடு வாழ்கின்ற நங்கையுன்னை-வெள்ளை
        நரையோடு வாழ்ந்தாலும் இதயம்பாடும்

ஓடாத நதியென்னை ஓடவைத்தாய்-எவரும்
         பாடாத பாடல்கள் பாடவைத்தாய்-பெண்ணை
நாடாத என்நெஞ்சை நாடவைத்தாய்-இந்த
         நரகத்தில் பின்னேயேன் வாடவைத்தாய்

கூடாத கூட்டத்தில் கூடினேனா-எவரும்
           பாடாத பாடல்கள் பாடினேனா
தேடாத வழியில்யான் தேடினேனா-ஏன்
          வாடாத என்னைநீ வாட்டுகின்றாய்.?

விதியோடு விளையாடி பட்டுப்போனேன்-உன்
        விழியோடு விளையாடி கெட்டுப்போனேன்
சதியோடு விளையாடி சரிந்துபோனேன்-அடி
         'சல்வாரே' உன்னாலோ எரிந்துபோனேன்.!!




                                  நன்றி.
*தினகரன் வாரமஞ்சரி -2011.01.30
*கவிதைப்பூங்கா(கவிஞர் ரஷீத் எம். ரியாழ்)

உயிர்வண்டு..!


யிர்வண்டு உனைக்கண்டு ரீங்காரம் பாடும்!
உணர்வெங்கும் கவிபொங்கி தேனாக ஓடும்!
பயிர்காடு நிலம்யாவும் பனிதின்னும் நேரம்!
பசியாடும் வேளையிலும் கவியென்னுள் ஊறும்!

வளமான தேன்கவியே வாசமுடன் வாழும்!
வாழ்வெடுத்து பேசாத பாட்டொருநாள் வீழும்
உளமார நான்பாடல் பாடுகிறேன் நாளும்!
உணர்வுகளை உசுப்புமவை உயிர்த்தமிழை ஆளும்!

நன்றி*சுடர்ஒளி
*தித்திக்குதே







அடிநெஞ்சில் நின்றிருந்தாய் மானாய் ...!


 டிநெஞ்சில் நின்றிருந்தாய் மானாய் -அடியே
அத்தனையும் நீமறந்து போனாய்...
வெடிநெஞ்சில் பட்டவன் போலானேன் -கொடும்
வெந்தழலில் நீறாகி போனேன்.........

சில்லென்ற தென்றல்வரும் காலை -நீ
சிரிப்புதிர்த்து பள்ளிசெல்லும் வேளை...
வள்ளென்று நாய்குரைக்கும் நேரம் -நான்
வாழ்ந்திருப்பேன் உன்னினைவின் ஓரம்...

வேலிக்கு மேலாலெட்டிப் பார்ப்பாய் -என்
வேதனையை புன்னகையால் தீர்ப்பாய்..
கேலிபலர் எனைச் செய்தபோதும்-அடி
கேள்கிளியே உன்நினைவே மோதும்.....

காண்பவரை மயங்கவைக்கும் அழகி...
காதல்கொண்டு என்னுடன்நீ பழகி
நீயின்றி நான்வாழேன் என்றாய்-பின்
தீயின்மேல் எனைவீசிக் கொன்றாய்......

கடற்கரையில் கைகோர்த்து நடந்தோம்
கால்நூற்றான்டை கால்நடையில் கடந்தோம் -எம்
உடல்கறையை காணாததும் உண்மை-அதை
உணர்த்தியதா கணவனுக்குன் பெண்மை..?

         நன்றி
*சுடர்ஒளி
*தினகரன் கவிதைப்பூங்கா (20.3.11)

தோல்வி..!


தோ
ல்விகளை
தோற்கடிக்கப் பழகு-
இன்றேல்
உன்தோள்மீது ஏறிநிற்கும் உலகு
ஆணுக்கு அழுவதுவா அழகு ?-
இன்றே
அனலாகு வணங்கி நிற்கும் உலகு....

                                       நன்றி
*தித்திக்குதே-(வசந்தம் தொலைக்காட்சி)

மாய்கின்ற மாநிலத்தின் மாடு...



குண்டுமழை பொழிகிறது
            கண்டு மனம் கிழிகிறது
துண்டுதுண்டாய் போனதெங்கள் தேசம்-யுத்தத்
              தூக்கினிலே தொங்குதெங்கள் நேசம்

துப்பாக்கி அழுகிறது
             'தோட்டாக்கள்' சிரிக்கிறது
தப்பாட்டமாடுகிறீர் ஏனோ..?-உங்கள்
              தலையெங்கும் களிமண்ணே தானோ..?

வேதனைதான் அளித்தீர்கள்
            வேறென்ன கிழித்தீர்கள்..?
சாதனைகள் செய்கின்றீர் நாளும்-பேய்கள்
            சரித்திரத்தில் உம்பெயரும் வாழும்!

ஆயுதத்தை தூக்குபவர்
            அடித்துஉயிர் போக்குபவர்
மாய்கின்ற மாநிலத்தின் மாடு-அவரை
            மானிடராய் மாற்றிவிடப் பாடு!!

நன்றி.
*சுடர்ஒளி

நாளைய உலகம் நமக்காக விடியட்டும்....


 புதிய சிறகுகள்-2011' தேசிய கலைஞர்கள் ஒன்றுகூடல் நிகழ்வை முன்னிட்டு 'லங்கா' பத்திரிகை நிறுவனத்தினரால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட கவிதைப்போட்டியில்  சிறப்பிடம்பெற்ற கவிதை.இக்கவிதை பட்சிகளின் உரையாடல் கவிதை நூலில் இடம்பெற்றுள்ளது.
 பூலோக சொர்க்கம் என்று
புகழப்பட்ட பூமி
ரத்தினத்துவீபம் என்று
ரசிக்கப்பட்ட
தேசமானது
நாசமானது
மனங்களுக்கு
பித்தம் பிடித்தபோது
மனிதர்களுக்குள்
யுத்தம் வெடித்தபோது....

மனம் முரண்பாடு கண்டபோது
இனமுரண்பாட்டை கண்டோம்
இனமுரண்பாட்டினால்
இருண்ட யுகத்துக்குள் நின்றோம்.
எங்களை நாங்களே
கொன்றோம்....
ஆனால்
மனிதர்கள் நாங்கள் என்றோம்.

மூன்று தசாப்த காலமாக
முகவரியை தொலைத்தோம்
முகாரிராகம் இசைத்தோம்.
மூக்குடைபட்டு
மூர்ச்சையாகி கிடந்தோம்
மூவின மக்களாகிய நாங்கள்...

யுத்தத்தீ எழுந்தபோது
ஷெல்லடிகள் விழுந்தபோது
துப்பாக்கி அழுதபோது
தோட்டாக்கள் உழுதபோது

பூக்கள் பூத்து
பூரித்துகிடந்த பூமியில்
புழுக்கள் நெழிந்தன...
எங்கள் குருதியால்
வங்கக் கடலே
பொங்கி வழிந்தன...
ஒரு அழகிய தேசம்
அழுகிய தேசமாய் காட்சிகொடுத்தது....
நாங்கள் வாழ்வது
ஈழத்திருநாட்டிலா
ஆபிரிக்கா காட்டிலா
என்று அங்கலாய்த்தோமே தவிர
மூவின மக்களும்
முகிழ்த்துக்கிடந்த
சிக்கலை நீக்கி
முக்கலைப்போக்கி
புரிந்துணர்வு எனும் கடலுக்குள்
மூழ்கி
புன்னகை முத்துக்களை
குளிக்கவில்லை
குருதியில்தான்
தினம் தினம்
குளித்துக் கொண்டிருந்தோம்...

நாம் எல்லோரும்
சேர்ந்துதான்
பிரியத்தை
கல்லறையாக்கினோம்
பிணங்களை சில்லறையாக்கினோம்
நேசத்தை சிறையறைக்கினோம்
பாசத்தை வரையறையாக்கினோம்

நாங்கள் ஒற்றுமை எனும் கயிற்றை
ஒருமித்து பிடித்திருந்தால்
வேற்றுமை எனும் வேதாளம்
போர் எனும் முருங்கைமரத்தில்
ஏறியிருக்காது...
எம்தேசம் நாறியிருக்காது....

பட்டது போதும்
எம்மைநாமே
சுட்டது போதும்...
வசந்தத்தை தேடும்
வானம்பாடிகளே
ஒன்று படுவோம் வாருங்கள்..

இனமதங்கள் நாம் கடந்து
தாய் நாட்டை நேசிப்போம்
இருக்கும் வரை
இறக்கும் வரை
தமிழ்மொழியை சுவாசிப்போம்....
நாளைய உலகம்
நமக்காக விடியட்டும்....

                       நன்றி *'புதிய சிறகுகள்-2011'  ..
*பட்சிகளின் உரையாடல் (கவிதை நூல்)

தலைப்பில்லா கவிதைகள்..!


 இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தால் தேசிய மட்டத்தில் கவிஞர்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் இக்கவிதை முதலாம் இடம் பெற்றுள்ளது . இக்கவிதை அடங்கிய நூல் 'அடையாளம்' எனும் பெயரில் தென்கிழக்கு பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்துள்ளது.

வாவியை கடப்ப தென்றால்
             வள்ளமொன் றிருந்தால் போதும்..
ஓவியம் வரைவ தற்கு
             ஓரிரு வரைகள் போதும்
ஆவியை ஆட்சி செய்யும்
             அரசரை; மக்கள் நெஞ்சை
கூவியே விழிக்கச் செய்த
            குயிலினை; குறிஞ்சிப்பூவை...


காவியம் பாடு தற்கு
          கவிவரி போதா தெனவே
நோவினை தந்து; தலைவர்
          நோக்கினை சாம்பர் செய்த
தாவிடும் குரங்கு மாரை
         தலையில்லா தலைவர் மாரை...
சாவியை தொலைத்துவிட்டு
          சாமரை வீசு வோரை...

கேவிநாம் அலறும் போது
           'கேக்குண்டு' வாழு மந்த
பாவிகள் பற்றித்தான் யான்
             பாவினை ஏந்தி வந்தேன்..
காவிகள் வென்றால் கூட
            கவலைநான் கொள்ளேன் 'எந்தன்
பூவிலே உள்ள தேனை
           புரிந்திட காலம் செல்லும்....'.


(வேறு)

தென்கிழக்கின் பொன்விளக்கு என்றவர்க்கு
               தேனோடும் வார்த்தைகளால் கோலம் போட்டு
நின்றிருக்கும் காலமல்ல; நிமிரச் செய்த
                நிமலனவர் இருந்தாலும் ஏற்கமாட்டார்....
புண்களுக்கு மருந்திடுவோம்; பூசல்விட்டு
                புன்னகைப்போம்; புரிந்துணர்வை முளைக்கச் செய்வோம்...!
கண்களுக்குள் இருக்கின்ற கவிதை அஸ்ரப்
              கனவுகளை நனவாக்க முயற்சி செய்வோம்...!

அன்று,மஹான் காந்தியைப்போல் அஸ்ரப் வாழ்ந்து
            அனைத்துஇன மக்களையும் அணைத்துச் சென்றார்..!
தின்றுவிட்டு தூங்காதீர்; சமூகமொங்க
            திருந்திடுவீர்; திக்கெங்கும் மரங்கள் செய்வீர்....
ஒன்றுபட்டு வென்றிடுவீர்;பிரிந்திடாமல்
            ஒற்றுமை யெனும் கயிற்றை பற்றிக்கொள்வீர்...!
என்றாரே; நடந்தோமா..? நாறினோமா..? அற்ப
            எச்சிலைக்காய் கட்சிபல ஆக்கினோமே....


இன்றெங்கள் இழிநிலையால் நடந்ததென்ன....?
         இடிவிழுந்த மரங்களைப்போல் இருக்குறோமே....
பொன்னையர்கள் என்றெம்மை கீழோரெண்ணி
          பொறிவைத்து போகின்றார்; ஆனால் நீங்கள்
கண்ணயர்ந்து இருக்கின்றீர் எங்கள் மண்ணை
          களவாடும் கழுதைகளை உதைத்து தள்வீர்
கொன்றிடுவீர் சுயநலத்தை அஸ்ரப் போன்று
          கொதித்தெழுவீர் எம்வலியை எடுத்துச் சொல்வீர்

                                               (வேறு)

தலையெழுத்தை தலைகீழாய் எழுதிவிட்ட ஆண்டவனே
           தந்துவிடு நல்வாழ்வை எமக்கு!-'தங்கத்
தலைவரினை' இழந்துவிட்டு தவிக்கின்ற 'எம்சமூகம்'
           தலையிழந்து முண்டமெனக் கிடக்கு!

தலைவர்நாம் என்றவர்கள் தறுதலைகள் முன்னாலே
           தலைகவிழ்ந்து நிற்கின்றார் எதற்கு-?அவர்
தலையாட்டி பொம்மைகள்போல் தனித்துவத்தை விட்டுவிடின்
            தருவாரே சிலஎலும்பு அதற்கு!

தலையில்லாத் தலைகளினை தலைவரென நினைத்ததற்காய்
            தலையிடிதான் எங்களுக்குப் பரிசு!-பதவிக்காய்
தலைசொறிந்து பல்லிளிக்கும் தலைவர்களால்
            தடுமாறும் எம்வாழ்க்கை தரிசு!

தலைதடவி கண்களிலே கண்கெட்டோர் கைவைக்க
            தலையணையில் எம்தலைகள் இருக்கு!-தங்கள்
தலைதப்பி னால்போதும் என்கின்ற கோழையரை
            தேர்ந்தெடுத்த நாங்கள்தான் கிறுக்கு!

தலைப்பிறையை மேகத்தால் தகர்த்தெறிய முடியாது
            தலைவர்களே கொண்டிடுவீர் ஒப்பு!-உங்கள்
தலைகளினை காப்பாற்ற கண்ணிருந்தும் குருடர்களாய்
            தவறுகளை பார்த்திருத்தல் தப்பு!

தலையில்லா முண்டங்களாய் மாறிவிட்ட எம்மவர்க்கு
            தலையாக ஒருதலைவன் எழுவான்!-அவன்
தலைவரவர் சுவடுகளில் தயங்காமல் நிதம்நடக்க
            தளையொடிந்து சிரிக்குமெங்கள் எழுவான்!!

                                                              நன்றி
*அடையாளம்(இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கவிதை நூல்)