காற்றுவெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காற்றுவெளி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 பிப்ரவரி, 2011

கும்பிட்ட கைகளால் குண்டுவைப்போம்..!

 கூட இருந்தே
குழிபறிப்போம்
கும்பிட்ட கைகளால்
'குண்டுவைப்போம்'

கதைத்து பேசியே
'கழுத்தறுப்போம்'
அடுத்தவனின் வளர்ச்சிக்கு
'ஆப்படிப்போம்'

மற்றவர் சிரித்தால்
மனமுடைவோம்
நண்பணின் அழுகையில்
நாம் மகிழ்வோம்

கட்டிப்பிடித்து
கலங்கிடுவோம்
எட்டி நடக்கையில்
ஏசிடுவோம்

தட்டிப்பறித்தே
தளைத்திடுவொம்
மட்டி மடையரை
'மஹான்' என்போம்

எமக்கென்று சொன்னால்
எதுவும் செய்வோம்
'எருமையின் மூத்திரம்
தீர்த்தமென்போம்'

வடிவான அன்னத்தை
'வாத்து' என்போம்
பூக்களை அழகிய
புற்களென்போம்

கானக்குயிலினை
காகமென்போம்
பேசும் மனிதனை
ஊமையென்போம்

'எம்மவர் அமுதினை
எச்சிலென்போம்...
அடுத்தவர் எச்சிலை
அமுதமென்போம்'

'நாய்களை கூப்பிட்டு
பாடு என்போம்
நாட்டுக் குயில்களை
ஓடு என்போம்'

உணவல்ல இதுநல்ல
ஊத்தையென்போம்
உணவிருக்கும் ஆனோலோ
ஊத்தை உண்போம்...

காசுக்காய்  குதிரையை
கழுதையென்போம்
கடவுளை கூட
கூவி விற்போம்...

காகித கத்தியால்
போர் தொடுப்போம்-பின்னர்
கவட்டுக்கள் கைவைத்து
தூங்கிடுவோம்.

இருக்கின்ற போதும்
இல்லையென்போம்
நறுக்கி நறுக்கியே
நாம் உயர்வோம்

கொஞ்சிப்பேசியே
கொள்ளிவைப்போம்..
கொஞ்சும் தமிழையும்
கொன்றுவைப்போம்

தூண்டிவிட்டு நாங்கள்
தூர நிற்போம்.
துவேஷம் வளர்ந்திட
தோள்கொடுப்போம்.

வகை வகையாக
வலை பின்னுவோம்
வயிற்றினில் அடித்தே
வளர்ந்திடுவோம்

எடுத்தெதற்கெல்லாம்
பிழைபிடிப்போம்
எங்கள் பிழைகளை
மறைத்திடுவோம்

குறைகள் சொல்லியே
குழப்பம் செய்வோம்
குழப்பங்கள் செய்தே
குதூகலிப்போம்

'மரங்களின் கரங்களை
முறித்திடுவோம்
பின்னர் மழையிடம் நாங்களே
பிச்சை கேட்போம்'

சிந்திக்க சொன்னால்
'சீ' என்னுவோம்
சீர்கெட்டு போவதே
சிறப்பு என்னுவோம்

'பாவங்கள் செய்தே
பழகிவிட்டோம்
மரணம் இருப்பதை
மறந்திட்டோம்'

வாழ்வில் எதுக்கும்நாம்
வருந்தமாட்டோம்
''சுனாமி'' வந்தாலும்
திருந்தமாட்டோம்..

கூட இருந்தே
குழிபறிப்போம்
கும்பிட்ட கைகளால்
'குண்டுவைப்போம்..!'

நன்றி
 *பதிவுகள்.
*காற்றுவெளி -செப்டம்பர் -2010*வீரகேசரி உயிர் எழுத்து (06.02.2011)

சனி, 29 ஜனவரி, 2011

அத்தனையும் உன்குற்றம்....

தழோரப் புன்னகையோ
இதயத்தைக் கைப்பற்றும்
உன்னோரப் பார்வைகளால்
உள்நெஞ்சில் தீப்பற்றும்

பார்வைகளால் பலபாடம்
பலதடவை நான்கற்றும்
உணர்வெல்லாம் உன்னோடு
உணர்விழந்து ஊர்சுற்றும்

நட்பிடத்தில் காதல்வந்து
நட்பென்று பூச்சுற்றும்
நட்பொருநாள் கர்ப்பமுற்ற
நடுக்கத்தில் தலைசுற்றும்....

காதலிக்கும் வேளையிலே
கனவினிலும் தேன்கொட்டும்
அத்தனையும் கனவானால்
அடிநெஞ்சில் தேள்கொட்டும்

மயங்கவைத்து மறைவதுவா
மல்லிகையே உன்திட்டம்
ஆசையெலாம் அரைநொடியில்
ஆயிடுமா தரைமட்டம்...?

உன்னுயிரை நீ வெறுத்தால்
உனக்கும்தான் பெறும்நஷ்டம்
ஆழ்மனதைச் சொல்லிவிட்டேன்
அதற்குப்பின் உன்னிஷ்டம்

கன்னியுனை தேடியது
கண்களது குற்றமன்று
கவிதைகளைப் பாடியது.
கவிஞனது குற்றமன்று

அழகை படைத்தளித்து
அதைரசிக்க விழிபடைத்து
ஆட்டிவைக்கும் ஆண்டவனே
அத்தனையும் உன்குற்றம்...


           நன்றி.
*தமிழ் ஆதர்ஸ்
*பதிவுகள்
*காற்றுவெளி -செப்டம்பர் -2010

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

இறந்து போவது மேலாகும்..!

சோரும் போது ''சொறிந்து'' கொடுத்தால்
சோகம் எமக்கு காலாகும்!
பாலைக் கறந்து படுத்துக் கிடந்தால்
பாலும் கூட பாழாகும்!

துணிவை உனக்குள் வளர்த்துப்பாரு
துயரம் யாவும் தூளாகும்!
''இரந்து வாழும் வாழ்வைக் காட்டிலும்
இறந்து போவது மேலாகும்''

உணர்ச்சியற்று கிடக்கும் நெஞ்சை
உசுப்பும் கவிதை வாளாகும்
வீரம்மறந்து வீழ்ந்து கிடந்தால்
விடியல் தோன்ற நாளாகும்

''பயந்து வாயை பொத்தியிருந்தால்
பழைய சோறும் கிடைக்காது!''
துணிந்து எதிர்த்து கேட்கும் நெஞ்சை
தோட்டாக் கூட துளைக்காது!

நாய்கள் போடும் கூச்சல் கேட்டால்
நாளை உனக்கு விடியாது!
உறுதிநெஞ்சில் இருந்தால் உந்தன்
உயர்வை தடுக்க முடியாது.!

நன்றி.
*பதிவுகள்
*இருக்கிறம்
*தமிழ் ஆதர்ஸ்
*காற்றுவெளி -செப்டம்பர் -2010

சனி, 31 ஜூலை, 2010

சருகல்ல இவனென்று சாற்று.

'தேமாங்காய்'' ''புளிமாங்காய்'' ஒரு மண்ணும் விளங்காமல்
தெம்மாங்காய் பாடுகிறேன் பாட்டு-ஆமையா!
நான்பாடும் பாட்டை நானறியேன் பெருங்கவியே
கூனுண்டோ ஆயந்துநீர் கூறும்.

கிறுக்கும் கவியெல்லாம் கீழென்று வளர்கவியை
நறுக்கி பின்னவரே நாறுகின்றார்-திருக்கவியே
நொறுக்கி என்நெஞ்சில் நோக்காடு தந்தோர்முன்
சருகல்ல இவனென்று சாற்று.

அழகுத்தமிழ் கவியின் ஆற்றலினை உணராதோர்'
மிளகாய் போல்மரபை நினைக்கின்றார்'-விலகாமல்
 பழகும் தமிழ்மொழியில் மரபுத்தாய் மாண்புகளை
உலகுக்கு சொல்வீர் உணர்ந்து.

நன்றி.
*பதிவுகள்

*காற்றுவெளி- செப்டம்பர் -2010
*சம்மாந்துறையில் நடைபெற்ற தென்கிழக்கு தமிழ்சங்கத்தின் 'அடையாளம்' கவிதை நூல் வெளியிட்டு விழாவில் பாடப்பட்டது.-2010.12.23