சனி, 29 அக்டோபர், 2011

கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது


தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் 'வியர்வையின் ஓவியம்' உழைக்கும் மக்கள் கலைவிழா அண்மையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் இவ்வருடத்தின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான கவிஞர் பொத்துவில் அஸ்மின் பெற்றுக்கொண்டார்.

இயக்குனர் கேசவராஜ் இயக்கும் 'பனைமரக்காடு' திரைப்படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ள இவர்.
ஏலவே ஜனாதிபதி விருது-(2001),அகஸ்தியர் விருது(2011) சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010) உட்பட 10க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.இவரது 'ரத்தம் இல்லாத யுத்தம்' கவிதை நூல் மிக விரைவில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி.


*ITN-சுயதீன தொலைக்காட்சி சேவை (28.10.11)
*வசந்தம் TV  (28.10.11)
* தமிழ் மிரர் (29.10.11)
*தமிழ் ஸ்டார் இணையத்தளம் (29.10.11)
*இலங்கை நெட் (29.10.11)
*வசந்தம் FM (30.10.11)
*நேசம் நெட்(30.10.11) 
*தேடிப்பார்(30.10.11)
*தினமலர் (30.10.11.இந்தியா) 
*தமிழ்ஆதர்ஸ்(31.10.11)
*திண்ணை(31.10.11)
*விடிகுரல்(31.10.11) 

*வணக்கம் நெட்(31.10.11) 
*தேடிப்பார்(30.10.11) 
*LankaMuslim.org (30.10.11)
*மெட்ரோ மிரர்(30.10.11)
*நவமணி(04.11.11)
*எங்கள் தேசம்(01.11.2011) 

*பொத்துவில் நெட்
*மூன்றாம் கோணம்
*fasmi media world


சனி, 22 அக்டோபர், 2011

படைப்பாளி அறிமுகம் - 20 எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்

 எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்
நாடறிந்த எழுத்தாளரான  தெளிவத்தை ஜோசப் அவர்கள்    கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக இலக்கிய வாழ்வு வாழ்ந்து மலையக இலக்கியத்தின் அடையாளத்திற்கும் தனித்துவத்திற்கும் தனது எழுத்துக்கள் மூலம் பெரும் பங்காற்றி மலையக இலக்கியத்தின் தலைமைப் படைப்பாளியாகத் திகழ்பவர் .

சந்தனசாமி ஜோசப் என்ற இயற்பெயர் கொண்ட  தெளிவத்தை ஜோசப் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். சாதாரணத் தோட்டத் தொழிலில் அல்லாடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளைப் போன்ற உதிரி மனிதர்களைப் பாத்திரங்களாகக் கொண்டவை இவரது படைப்புலகம்.

இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைளிலும் தமிழக சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளன.தனது தமிழாற்றலால் தான் பிறந்த மலையகத்திற்கும்,தெளிவத்தை ஊருக்கும் மாபெரும் புகழைச் சேர்த்தாலும் அவர் உலகத் தமிழ் இலக்கியத்தின் சொத்து, இதுவரை பல நூல்களை எழுதியுள்ள அவர் எண்ணிலடங்கா ஆய்வு மற்றும் பயணக் கட்டுரைகளை தேசியப் பத்திரிகைகளிலும் எழுதியுள்ளதுடன் அதற்கான உரிய கெளரவங்களை, தேசிய சர்வதேச மட்டத்திலும் பெற்றுள்ளார்.


ஆரம்பத்தில் சிறுகதைகள் எழுதுவதோடு தனது இலக்கியப் பயணத்தை ஆரம்பித்த இவர், காலப் போக்கில் குறுநாவல், நாவல், விமர்சனம், ஆய்வு,திரைக்கதை, வானொலி நாடகம் எனப் பல தளங்களில் தனது உழைப்பை விஸ்தரித்து மலையக இலக்கியத்தை, அதனூடாக ஈழத்து இலக்கியத்தை வளப்படுத்தியதோடு உலகத்தமிழ் இலக்கியத்திற்கும் உரம் சேர்ந்தவர்.
'காலங்கள் சாவதில்லை' என்பது இவருடைய முக்கியமான நாவல் ஆகும். நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார்.2000 ஆம் ஆண்டில் வெளிவந்த இவரது 'மலையகச் சிறுகதை வரலாறு' இவரை ஓர் சிறந்த ஆய்வாளராக இனங்காட்டியது. அவ்வாண்டிற்கான தேசிய சாகித்திய விருதினையும் யாழ். இலக்கிய வட்டத்தின் சம்பந்தன் விருதினையும் இந்நூல் பெற்றுக்கொண்டது.


துரைவி பதிப்பகத்தினூடாக இவர் வெளிக்கொணர்ந்த மலையகச் சிறுகதைகள் உழைக்கப் பிறந்தவர்கள் ஆகிய இரு தொகுப்புகள் மலையக இலக்கியத்துக்கு இவர் அளித்த அரிய செல்வங்களாகும். எழுபதுவருட காலத்துக்குரிய கதைகளைத் தேடித் தொகுத்து இரண்டு வருட கால எல்லையுள் இப்பணியினைச் செய்து சாதனை படைத்தவர் ஜோசப்.
இவரது குறுநாவல்களான 'பாலாயி' 'ஞாயிறு வந்தது' 'மனம் வெளுக்க' ஆகிய மூன்றும் ஒரே தொகுப்பாக 1997ல் வெளிவந்தது. தமிழ் நாட்டின் சுபமங்களா சஞ்சிகையும் தேசிய கலை இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்திய குறுநாவல் போட்டியில் இவரது குடைநிழல்' இரண்டாவது பரிசினைப் பெற்றது.

 1979ம் ஆண்டு 'நாமிருக்கும் நாடே'' சிறுகதைக் நூலுக்காக மலையக இலக்கிய நூலுக்கான முதல் சாஹித்திய விருதினை பெற்ற மலையக படைப்பாளிக்கான முதல் கலாபூஷணம் விருதினையும் பெற்றவர்.தமிழியல் விருது, தேசிய ஒற்றுமைக்கான சாஹித்திய விருது, பேராதனை பல்கலைக்கழகத்தின் இலக்கிய சாதனையாளர் விருது, மேல் மாகாண சபை மத்திய மாகாண சபை வாழ்நாள் சாதனையாளர் விருது உட்பட பல சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளார்.

படைப்பாளி அறிமுகம் - 19 கவிஞர் உ.நிஸார்

இலங்கை கவிஞர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் உ.நிஸார் அவர்கள் கண்டி மாவட்டம் உடுநுவரை முருதகஹமுல என்ற இடத்தை பிறப்பிடமாக கொண்டவர்.உடுநுவரை நிசார், உ. நிசார் ஆகிய புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர்,சிறுவர் இலக்கியம் படைப்பதில் அதிக  ஆர்வம் காட்டிவரும் எழுத்தாளராவார்.

உடுநுவரை டி. பி. விஜயதுங்க தேசிய பாடசாலை, கம்பளை சாஹிரா தேசிய பாடசாலைஆகிவற்றின் பழைய மாணவரான இவர் மாவனல்லை சாஹிரா பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.இவர் சிங்கள மொழியில் கல்வி பயின்றாலும் தமிழ் மொழியை தன் முயற்சியால் கற்றுத்தேர்ந்து  மரபுக்கவிதை கவிதை படைக்கும் ஆற்றல்  பெற்றவராக திகழ்கிறார்.இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள் சஞ்சிகைளில் களம் கண்டுள்ளன.


 இதுவரை  கனவுப்பூக்கள் என்ற கவிதை நூலை வெளியிட்டுள்ள இவர்
•    ஓயாத அலைகள்
•    நட்சத்திரப் பூக்கள்
•    வெந்நிலா
•    மலரும் மொட்டுக்கள்
•    சிறகு விரி
•    பாவிருந்து
•    இளைய நிலா
•    முத்துக் கணையாழி 
 உட்பட பல சிறுவர் இலக்கிய நூல்களையும்   இதுவரை  எழுதி வெளியிட்டுள்ளார்.தேசிய மட்டத்தில் நடாத்தப்பட் ட பல கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் இவர்
2008ம் ஆண்டு அரச இலக்கிய விருதான 'கலாபூசணம் விருது' வழங்கப்பட்டு  கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்.

படைப்பாளி அறிமுகம் - 18 கவிஞர் அமல்ராஜ்

இலங்கையின்  கலை,இலக்கிய பரப்பில் தனது சுவடுகளை ஆழப்ப பதிக்க முனைந்துவரும் இளம் எழுத்தாளரான  அமல்ராஜ் மன்னார் வஞ்சியன் குளத்தை பிறப்பிடமாக கொண்டவர்.தற்போது கொழும்பில் வாழ்ந்து வருகின்றார்.
கவிதை,கட்டுரை,நாடகம் ,பேச்சு ஆகியவற்றில் ஈடுபாடு காட்டிவரும்  அமல்ராஜ் மட்டக்களப்பு மிக்கேல் கல்லூரி, மன்னார் சவேரியர் ஆண்கள் தேசிய பாடசாலை என்பனவற்றின்  பழைய மாணவர.சிறுவயது முதலே தனக்குள் இருந்து வந்த இடையறதா வாசிப்பு, இலக்கிய தேடலின் காரணமாக இன்று ஒரு எழுத்தாளராக பரிணமித்துள்ளார்.


இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகை சஞ்சிகைகளிலும் இணைய சஞ்சிகைகளிலும் புலம்பெயர் சஞ்சிகைகளிலும் களம் கண்டுள்ளன.அத்தோடு 'புலம்பல்' என்ற தனது வலைப்பூவிலும் இவர் தொடர்ந்து எழுதிவருகின்றார்.

திருமறை கலா மன்றத்தின் நாடக பயிற்சி பட்டறைகளின் வளவாளரா பணியாற்றியிருக்கும் இவர் பல நாடகங்களை எழுதி நெறியாள்கை செய்துள்ளார.இவரது நெறியாள்கையில்  மேடையேற்றப்பட்ட 'உயிர்க்க துடிக்கும் உதிரங்கள்' என்ற ஊமை நாடகம் பலரதும் பாராட்டினை பெற்றுள்ளது.

மன்னார் திருமறை கலா மன்றத்தின் கலை இலக்கிய வெளியீடான  'தாளம்' சஞ்சிகையின் ஸ்தாபக ஆசிரியரான அமல்ராஜ் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தில் பணிபுரிந்து வருகின்றார்.கிறுக்கல் சித்திரமாகின்றன' கவிதை நூலையும் 'வேர்களும் பூக்கட்டும்' என்ற  உளவியல் நூலையும் இவர் இதுவரை வெளியீட்டுள்ளார்.

இவரது இலக்கிய பணி சிறக்க நாமும் வாழ்த்துவோம்.

படைப்பாளி அறிமுகம் - 17 எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா


லங்கை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான  எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா திருகோணமலையை  பிறப்பிடமாக கொண்டவர்.

திருகோணமலை சென் ஜோசப் கல்லூரியின் பழைய மாணவரான இவர் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வருவதோடு தனியார் நிறுவனமொன்றில் முகாமையாளராகவும் கடமையாற்றி வருகின்றார். இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகை,சஞ்சிகைகளிலும் வானொலிகளிலும் இணைய இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன.

கவிதை,சிறுகதை, நாவல்,அரசியல், கட்டுரை, நாடகம், என்று இலக்கியத்தில் பல துறைகளிலும் தனது சுவடுகளை  பதித்துள்ள இவர்.
எழுத்தாளர் வ.அ.இராசரத்தினத்தை தனது மானசீக குருவாக நினைந்து அவர் வழியில் படைப்புக்களை படைத்து வருகின்றார்.


1979ம் ஆண்டிலிருந்து எழுத்துக்களோடு கைகுலுக்க ஆரம்பித்த இவரது பேனாவின் முதல் பிரசவம் 'சேகுவரா' என்ற குறுநாவல் ஆகும்.
அது இவர் மேலான விமர்சகர்களின் பார்வையை அகலப்படுத்தியது எனலாம். அதன் பிறகு
 1.    மரண பூமி
2.    அப்பா
3.    நாக்கியா
4.    ஜனாதிபதியே ஜனநாயகம்
5.    மலையக மக்களுக்கு அடையாள அட்டை
6.    கிழக்கின் உதயம் தேசத்தின் இதயம்
7.    அஸ்ரப்  பெருக்கெடுத்த கதைகள்
8.    அஸ்ரபின் அந்த ஏழு நாட்கள்   என்று 9 நூல்களை வெளியிட்டிருக்கின்றார்.



'கிழக்கின் உதயம் தேசத்தின் இதயம்'  என்ற இவரது  நூல் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரபின் வாழ்க்கை சரிதத்தை பின்னணியாக கொண்டதாக வெளிவந்த முதலாவது நூலாகும்.இந்த நூல் இவருக்கு பரவலான அறிமுகத்தை அனைத்து சமூகத்தின் மத்தியிலும் ஏற்படுத்திக் கொடுத்தது எனலாம்.

இவர் மிகவிரைவில்

1.    போரும் மனிதனும்
2.    மக்களும் மற்றவர்களும்
3.    ஒரு மாமன்னரின் பொற்காலம்
4.    சின்ன சின்ன எண்ணங்கள்
5.    மரணம் ஒரு முடிவல்ல
6.    இந்தியாவை நேசிக்கும் வரை
7.    எனது தேசம் எனது மக்கள்

தனது 7 நூல்களை வெளியீடு செய்வதற்குரிய பணியில் ஈடுபட்டு வருகின்றார். இவரது எழுத்துலக பணி மேலும் சிறக்க நாமும் வாழ்த்துவோம்.

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

மின்னலிலே காணிவெட்டி....(பாடல்)




 •    பல்லவி

மின்னலிலே காணி வெட்டி வெண்ணிலவால் வீடு கட்டி
விண்வெளியில் வாழ்ந்தாலும் இறப்பாய்..!
இன்னல்படும் மக்களுக்கு உண்ணவழி செய்துவிட்டால்
வெண்ணிலவாய் உலகுக்கே  நீ இருப்பாய்...!

•    அனு பல்லவி

உண்ண வழியின்றி மண்ணை சமைக்கின்றார்
நீ  'பீஸா' உண்ணு கின்றாய்...
சின்னஞ் சிறுசுகள் கையை நீட்டினால்
தினம் அடித்து விரட்டு கின்றாய்...

இந்த உலகத்தில் மிக  உயர்ந்தவன்
என்றும் நீதான் என்று சொன்னாய்...
சொந்த உறவுகள் கந்த லணிகிறார்
அதைப் பார்த்து ரசித்து நின்றாய்...

பாழும் நெஞ்சை  இன்றே மாற்று...
பாலை மண்ணில்  தண்ணீர் ஊற்று...!
கோழை நெஞ்சை வெட்டிப் போட்டு
ஏழை வாழ்வில்  தீபங்கள் ஏற்று.....!

•    சரணம் - 01

பலகோடி மாந்தர்கள்
பசியாலே இறக்கின்றார்
கண்ணுள்ள மனிதர்கள்
குருடாய் இருக்கின்றார்..

காசுள்ளோர் நினைத்தாலே
காசினியே பூபூக்கும்
இல்லாத மக்களது
இல்லாமை பொடியாகும்

திருந்தாத எண்ணத்தை
தீயில் போட்டு...
வருந்தாத நெஞ்சுக்கு
தீயை மூட்டு...
வறுமைக்கு பிறந்தோர்க்கு
வாழ்வைக் காட்டு

வசந்தத்தை நீ கொண்டு வா....

சனி, 8 அக்டோபர், 2011

குயில்கள் இப்போது குரைக்கின்றன..



வியம் வரையும் தூரிகை கொண்டு 
ஓட்டடை அடிக்கின்றாய்...
காவியம் பாடும் கைகளை கொண்டு

கற்களை உடைக்கின்றாய்....



சாதனை படைக்கும் சக்தி இருந்தும்

சாக்கடை அள்ளுகின்றாய்...

சரித்திரம் படைக்க பிறந்தவன் நீயோ

சப்பாத்து துடைக்கின்றாய்....



சவுக்கால் உன்னை அடிப்போருக்கு

சாமரை வீசுகின்றாய்..

சருகாய் உன்னை ஆக்கியோருக்கு

சந்தனம் பூசுகின்றாய்...



பசியை உனக்கு தருவோருக்கு

சோறு சமைக்கின்றாய்....

நஞ்சை உனக்கு தந்தோரிடமும்

நலமா என்கின்றாய்..



கடலைப் உனக்குள் வைத்துக் கொண்டு

பிச்சை கேட்கின்றாய்...

ஆயிரம் சூரியன்  அருகில் இருந்தும்

இருட்டில் இருக்கின்றாய்....



நாட்டை சுமக்கும் தோள்கள் உனது

மூட்டை சுமக்கின்றாய்...

மூட்டை சுமந்தும்  பசியால் ஏனோ

முடங்கிப் போகின்றாய்... ?



உறவுகள் ஆயிரம் இருந்தும் ஈற்றில்

உணவுக்கலைகின்றாய்..

தேகம்தேய உழைத்துமென்ன

தெருவில் நிற்கின்றாய்...



தென்றல் கூட புயலாய் மாறும்

தெரிந்து கொள்ளப்பா...

துவண்டு கிடந்து அழிதல் விட்டு

துணிந்து நில்லப்பா



மரணம் என்ற நோயை கொல்ல

மருந்து இல்லப்பா..!

வாழும் வரைக்கும் உனக்காய் வாழ்வை

வாழ்ந்து பாரப்பா



தண்ணீர்கூட கோபம் வந்தால்

தட்டிக் கேட்கும்பா..

வெட்கம் கெட்ட உந்தன் நெஞ்சை

வெட்டிப் போடப்பா..



பாசம் நேசம் பந்தம் எல்லாம்

பழைய பொய்யப்பா

வேசம்போடும் மனிதர் கூட்டம்

விளங்கிக்கொள்ளப்பா



உந்தன் கையில் காசு இருந்தால்

ஊரும் மதிக்கும்பா...

சுவாசம் கூட  தேவையென்றால்

சும்மா கிடைக்கும்பா...



தண்ணீர் தோட்டம் வைத்துக்கொண்டு

தாகம் குடிக்காதே....

கண்ணீர் சிந்தி கலங்கி நின்றால்

கவிதை பிறக்காதே...



குயிலை உனக்குள் வைத்துக்கொண்டு

குரைத்துத் திரியாதே...

குட்டுப்பட்டு குட்டுபட்டே

குன்றிப்போகாதே..



காக்கைகூட நல்லவை சொன்னால்

காது கொடுத்து கேள்...

அகந்தை கொண்டு கேட்க மறுத்தால்

அதுவே உனக்கு வாள்..



நன்றி கெட்ட மனிதனை பார்க்கிலும்

நாய்கள் என்றும் மேல்...

என்பதை உணர்ந்து வாழ்வாயாயின்
வானம் உனக்கு கீழ்...!


நன்றி.
*தமிழ் ஆதர்ஸ்  09.10.11

*சாத்தான் குளம் அப்துல் ஜப்பார்( www.worldtamilnews.com)(12.10.10)
*ஞாயிறு வீரகேசரி (30.10.11)

*எங்கள் தேசம் (01.11.11) 

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

படைப்பாளி அறிமுகம் - 16 - எழுத்தாளர் சுதாராஜ்

லங்கை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான எழுத்தாளர் சுதாராஜ் யாழ்ப்பாணம் நல்லூரை பிறப்பிடமா கொண்டவர்.
யாழ் இந்துக் கல்லூரியின் பழைய மாணவரான இவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரி.
1972 இல் 'ஒளி' என்ற சஞ்சிகையில் 'இனிவருமோ உறக்கம்' என்ற சிறுகதை மூலம் இலங்கை தமிழ் இலக்கிய உலகில் அறிமுகமான இவர் நாவல், சிறுகதை, சிறுவர் இலக்கியம்,  என இலக்கிய வானில் தன் சிறகுகளை அகல விரித்திருந்தாலும் சிறுகதை துறையிலே தனது சுவடுகளை ஆழமாகவே பதித்திருக்கின்றார் என்று சொல்ல முடியும்.



ஒரு பொறியியலாளராக ஈராக் , குவைத் , பாகிஸ்தான் , இத்தாலி, கிறீஸ் , யமன் , அல்ஜீரியா, இந்தோனீஸியா என பல நாடுகளிலும் பணிபுரிந்து இருக்கும் இவர் அங்கு தனக்கு கிடைத்த அனுபவங்களை சிறுகதைகள் மூலம் வெளிக்கொணர்ந்திருக்கின்றார்.

இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள் , சஞ்சிகைள் , இந்திய சஞ்சிகைகள் , புலம்பெயர் சஞ்சிகைகள் , பலவற்றிலும் களம் கண்டுள்ளன.


சுதாராஜின் முதற்சிறுகதை தொகுதியான 'பலாத்காரம்' 1977ம் ஆண்டில் வெளிவந்தது. இது பின்னர் இலங்கை அரசின் சாஹித்திய மண்டல பரிசினையும் பெற்றது.
2002 தன்னை இலக்கிய துறையில் தன்னை ஆற்றுப்படுத்திய சிரித்திரனை கௌரவிப்பதற்காக 'சிரித்திரன் சுந்தர்' விருதினை இலங்கை படைப்பாளிகளால் வெளியிடப்படும் நூல்களுக்கு சிறுகதை, கவிதை, சிறுவர் இலக்கியம் ஆகிய மூன்று துறைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த நூல்களுக்கு வழங்கி வருகின்றார்.

இவர் இதுவரை 'பலாத்காரம்' , 'கொடுத்தல்'  'ஒரு நாளில் மறைந்த இரு மாலைப்பொழுகள்' , 'தெரியாத பக்கங்கள்' , 'சுதாராஜின் சிறுகதைகள்'  'காற்றோடு போதல்' , 'மனித தரிசனங்கள்' , 'மனைவி மஹாத்மியம்' , 'உயிர்கசிவு' என்ற ஒன்பது சிறுகதை நூல்களை வெளியிட்டிருக்கின்றார்


1981ம் ஆண்டு வீரகேசரியில் வெளிவந்த 'இளமைக்கோலம்' என்ற இவரது நாவல் 2006 இல் மணிமேகலை பிரசுரமாக வெளிவந்துள்ளது. அத்தோடு இவர் பல சிறுவர் இலக்கிய நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கின்றார்.இவரது பல சிறுகதைகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் மொழிபெயர்க்கபட்டுள்ளன.

'கொடுத்தல்' சிறுகதை தொகுதிக்காக தேசிய சாஹித்திய மண்டல விருதினை பெற்றிருக்கும் இவர்; அதே நூலுக்காக இந்து சமய கலாச்சார அமைச்சின் 'இலக்கிய வித்தகர்' பட்டத்தினையும் பெற்றிருக்கின்றார்.
அத்தோடு 'தெரியாத பக்கங்கள்' எனும்  சிறுகதை தொகுதிக்காக விபவி கலாசார மையத்தின் சிறந்த சிறுகதை தொகுதிக்கான விருதினையும் பெற்றிருக்கின்றார். யாழ் இலக்கிய வட்டத்தின் விருது, தகவம் விருது, தமிழியல் விருது போன்றன இவரது சிறுகதை நூல்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

ஆனந்த விகடனின் வைரவிழா இலக்கிய போட்டியில் சிறந்த சிறுகதைக்கான விருதினை பெற்ற 'அடைக்கலம்' என்ற இவரது சிறுகதையை தழுவியே இயக்குனர் மணிரத்தினத்தின் 'கன்னத்தில் முத்தமிட்டால்' திரைப்படம் வெளிவந்தது என்ற சர்ச்சையும் இருக்கின்றது.

இவர் 2010ம் ஆண்டுக்கான இலங்கை அரசின் தேசிய சாஹித்திய மண்டல விருதினையும் 'புதிய சிறகுகள்' விருதினையும் 'மனைவி மகாத்மியம்' என்ற சிறுகதை நூலுக்காக பெற்றிருக்கின்றார் என்பதும் குறிப்படத்தக்கது.