தேசிய விருது கிடைத்த கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேசிய விருது கிடைத்த கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

நாளைய உலகம் நமக்காக விடியட்டும்....


 புதிய சிறகுகள்-2011' தேசிய கலைஞர்கள் ஒன்றுகூடல் நிகழ்வை முன்னிட்டு 'லங்கா' பத்திரிகை நிறுவனத்தினரால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட கவிதைப்போட்டியில்  சிறப்பிடம்பெற்ற கவிதை.இக்கவிதை பட்சிகளின் உரையாடல் கவிதை நூலில் இடம்பெற்றுள்ளது.
 பூலோக சொர்க்கம் என்று
புகழப்பட்ட பூமி
ரத்தினத்துவீபம் என்று
ரசிக்கப்பட்ட
தேசமானது
நாசமானது
மனங்களுக்கு
பித்தம் பிடித்தபோது
மனிதர்களுக்குள்
யுத்தம் வெடித்தபோது....

மனம் முரண்பாடு கண்டபோது
இனமுரண்பாட்டை கண்டோம்
இனமுரண்பாட்டினால்
இருண்ட யுகத்துக்குள் நின்றோம்.
எங்களை நாங்களே
கொன்றோம்....
ஆனால்
மனிதர்கள் நாங்கள் என்றோம்.

மூன்று தசாப்த காலமாக
முகவரியை தொலைத்தோம்
முகாரிராகம் இசைத்தோம்.
மூக்குடைபட்டு
மூர்ச்சையாகி கிடந்தோம்
மூவின மக்களாகிய நாங்கள்...

யுத்தத்தீ எழுந்தபோது
ஷெல்லடிகள் விழுந்தபோது
துப்பாக்கி அழுதபோது
தோட்டாக்கள் உழுதபோது

பூக்கள் பூத்து
பூரித்துகிடந்த பூமியில்
புழுக்கள் நெழிந்தன...
எங்கள் குருதியால்
வங்கக் கடலே
பொங்கி வழிந்தன...
ஒரு அழகிய தேசம்
அழுகிய தேசமாய் காட்சிகொடுத்தது....
நாங்கள் வாழ்வது
ஈழத்திருநாட்டிலா
ஆபிரிக்கா காட்டிலா
என்று அங்கலாய்த்தோமே தவிர
மூவின மக்களும்
முகிழ்த்துக்கிடந்த
சிக்கலை நீக்கி
முக்கலைப்போக்கி
புரிந்துணர்வு எனும் கடலுக்குள்
மூழ்கி
புன்னகை முத்துக்களை
குளிக்கவில்லை
குருதியில்தான்
தினம் தினம்
குளித்துக் கொண்டிருந்தோம்...

நாம் எல்லோரும்
சேர்ந்துதான்
பிரியத்தை
கல்லறையாக்கினோம்
பிணங்களை சில்லறையாக்கினோம்
நேசத்தை சிறையறைக்கினோம்
பாசத்தை வரையறையாக்கினோம்

நாங்கள் ஒற்றுமை எனும் கயிற்றை
ஒருமித்து பிடித்திருந்தால்
வேற்றுமை எனும் வேதாளம்
போர் எனும் முருங்கைமரத்தில்
ஏறியிருக்காது...
எம்தேசம் நாறியிருக்காது....

பட்டது போதும்
எம்மைநாமே
சுட்டது போதும்...
வசந்தத்தை தேடும்
வானம்பாடிகளே
ஒன்று படுவோம் வாருங்கள்..

இனமதங்கள் நாம் கடந்து
தாய் நாட்டை நேசிப்போம்
இருக்கும் வரை
இறக்கும் வரை
தமிழ்மொழியை சுவாசிப்போம்....
நாளைய உலகம்
நமக்காக விடியட்டும்....

                       நன்றி *'புதிய சிறகுகள்-2011'  ..
*பட்சிகளின் உரையாடல் (கவிதை நூல்)

தலைப்பில்லா கவிதைகள்..!


 இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தால் தேசிய மட்டத்தில் கவிஞர்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் இக்கவிதை முதலாம் இடம் பெற்றுள்ளது . இக்கவிதை அடங்கிய நூல் 'அடையாளம்' எனும் பெயரில் தென்கிழக்கு பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்துள்ளது.

வாவியை கடப்ப தென்றால்
             வள்ளமொன் றிருந்தால் போதும்..
ஓவியம் வரைவ தற்கு
             ஓரிரு வரைகள் போதும்
ஆவியை ஆட்சி செய்யும்
             அரசரை; மக்கள் நெஞ்சை
கூவியே விழிக்கச் செய்த
            குயிலினை; குறிஞ்சிப்பூவை...


காவியம் பாடு தற்கு
          கவிவரி போதா தெனவே
நோவினை தந்து; தலைவர்
          நோக்கினை சாம்பர் செய்த
தாவிடும் குரங்கு மாரை
         தலையில்லா தலைவர் மாரை...
சாவியை தொலைத்துவிட்டு
          சாமரை வீசு வோரை...

கேவிநாம் அலறும் போது
           'கேக்குண்டு' வாழு மந்த
பாவிகள் பற்றித்தான் யான்
             பாவினை ஏந்தி வந்தேன்..
காவிகள் வென்றால் கூட
            கவலைநான் கொள்ளேன் 'எந்தன்
பூவிலே உள்ள தேனை
           புரிந்திட காலம் செல்லும்....'.


(வேறு)

தென்கிழக்கின் பொன்விளக்கு என்றவர்க்கு
               தேனோடும் வார்த்தைகளால் கோலம் போட்டு
நின்றிருக்கும் காலமல்ல; நிமிரச் செய்த
                நிமலனவர் இருந்தாலும் ஏற்கமாட்டார்....
புண்களுக்கு மருந்திடுவோம்; பூசல்விட்டு
                புன்னகைப்போம்; புரிந்துணர்வை முளைக்கச் செய்வோம்...!
கண்களுக்குள் இருக்கின்ற கவிதை அஸ்ரப்
              கனவுகளை நனவாக்க முயற்சி செய்வோம்...!

அன்று,மஹான் காந்தியைப்போல் அஸ்ரப் வாழ்ந்து
            அனைத்துஇன மக்களையும் அணைத்துச் சென்றார்..!
தின்றுவிட்டு தூங்காதீர்; சமூகமொங்க
            திருந்திடுவீர்; திக்கெங்கும் மரங்கள் செய்வீர்....
ஒன்றுபட்டு வென்றிடுவீர்;பிரிந்திடாமல்
            ஒற்றுமை யெனும் கயிற்றை பற்றிக்கொள்வீர்...!
என்றாரே; நடந்தோமா..? நாறினோமா..? அற்ப
            எச்சிலைக்காய் கட்சிபல ஆக்கினோமே....


இன்றெங்கள் இழிநிலையால் நடந்ததென்ன....?
         இடிவிழுந்த மரங்களைப்போல் இருக்குறோமே....
பொன்னையர்கள் என்றெம்மை கீழோரெண்ணி
          பொறிவைத்து போகின்றார்; ஆனால் நீங்கள்
கண்ணயர்ந்து இருக்கின்றீர் எங்கள் மண்ணை
          களவாடும் கழுதைகளை உதைத்து தள்வீர்
கொன்றிடுவீர் சுயநலத்தை அஸ்ரப் போன்று
          கொதித்தெழுவீர் எம்வலியை எடுத்துச் சொல்வீர்

                                               (வேறு)

தலையெழுத்தை தலைகீழாய் எழுதிவிட்ட ஆண்டவனே
           தந்துவிடு நல்வாழ்வை எமக்கு!-'தங்கத்
தலைவரினை' இழந்துவிட்டு தவிக்கின்ற 'எம்சமூகம்'
           தலையிழந்து முண்டமெனக் கிடக்கு!

தலைவர்நாம் என்றவர்கள் தறுதலைகள் முன்னாலே
           தலைகவிழ்ந்து நிற்கின்றார் எதற்கு-?அவர்
தலையாட்டி பொம்மைகள்போல் தனித்துவத்தை விட்டுவிடின்
            தருவாரே சிலஎலும்பு அதற்கு!

தலையில்லாத் தலைகளினை தலைவரென நினைத்ததற்காய்
            தலையிடிதான் எங்களுக்குப் பரிசு!-பதவிக்காய்
தலைசொறிந்து பல்லிளிக்கும் தலைவர்களால்
            தடுமாறும் எம்வாழ்க்கை தரிசு!

தலைதடவி கண்களிலே கண்கெட்டோர் கைவைக்க
            தலையணையில் எம்தலைகள் இருக்கு!-தங்கள்
தலைதப்பி னால்போதும் என்கின்ற கோழையரை
            தேர்ந்தெடுத்த நாங்கள்தான் கிறுக்கு!

தலைப்பிறையை மேகத்தால் தகர்த்தெறிய முடியாது
            தலைவர்களே கொண்டிடுவீர் ஒப்பு!-உங்கள்
தலைகளினை காப்பாற்ற கண்ணிருந்தும் குருடர்களாய்
            தவறுகளை பார்த்திருத்தல் தப்பு!

தலையில்லா முண்டங்களாய் மாறிவிட்ட எம்மவர்க்கு
            தலையாக ஒருதலைவன் எழுவான்!-அவன்
தலைவரவர் சுவடுகளில் தயங்காமல் நிதம்நடக்க
            தளையொடிந்து சிரிக்குமெங்கள் எழுவான்!!

                                                              நன்றி
*அடையாளம்(இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கவிதை நூல்)



சனி, 29 ஜனவரி, 2011

தூசு!

 பேராதனைப்பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் பவளவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட 
தேசிய மட்ட கவிதைப்போட்டியில் முதலாமிடம் பெற்று
'தங்கப்பதக்கம்' பெற்ற கவிதை-2003.

மார்கழியில் மாற்றிடவா மாலை!-நீ
மனமுவந்தால் பூக்குமடி சோலை!-நான்
கார்வளவு கேட்டிடதா காளை!-எனை
காதலிக்க வந்திடுநல் வேளை!

மோருண்ட சுகம்தந்த பெண்ணே!-நிதம்
மோதுதடி என்மனசில் மின்னே!
நீர்காற்று வானமழை முன்னே-உயிர்
நீதானே வேணுமடி கண்ணே!

பேரழகி என்மனசு வெள்ள!-நீ
பேசிடாது போவதேன்டி முல்ல!
பாருலகில் உன்னழகை வெல்ல -எந்த
பேரழகும் ஊருலகில் இல்ல...!

பாடலிலே உன்னழகை சொல்ல!-தினம்
பாடுபட்டு பாணனிவன் துள்ள!-நீ
ஊடலிலே பார்வைகளால் கொல்ல!-பயந்து
உதிருதடி வார்த்தைகளும் மெல்ல!

பனிமலரே பரிவுடனே பாரு!-நீ
பாசமுடன் நேசமொழி கூறு..!
கனிமொழியே காதலுடன் சேரு!-நிதம்
கனிந்துடலால் பெற்றிடுவாய் பேறு!

மாரழகி மனம் திறந்து பேசு!-இளம்
மாருதமே தென்றலென வீசு!
சீர்வரிசை தேவலடி காசு!-அவையுன்
சிருங்கார மொழிமுன்னே தூசு!

                                                     நன்றி.
*இளங்கதிர் (பேராதனை பல்கலைக்கழக தமிழ் சங்க வெளியீடு-2003)
*கவிதைப்பூங்கா-தினகரன் வாரமஞ்சரி
*சுடர் ஒளி வாரவெளியீடு
*வார்ப்பு
*பதிவுகள்