தமிழ் ஆதர்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ் ஆதர்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 அக்டோபர், 2011

குயில்கள் இப்போது குரைக்கின்றன..



வியம் வரையும் தூரிகை கொண்டு 
ஓட்டடை அடிக்கின்றாய்...
காவியம் பாடும் கைகளை கொண்டு

கற்களை உடைக்கின்றாய்....



சாதனை படைக்கும் சக்தி இருந்தும்

சாக்கடை அள்ளுகின்றாய்...

சரித்திரம் படைக்க பிறந்தவன் நீயோ

சப்பாத்து துடைக்கின்றாய்....



சவுக்கால் உன்னை அடிப்போருக்கு

சாமரை வீசுகின்றாய்..

சருகாய் உன்னை ஆக்கியோருக்கு

சந்தனம் பூசுகின்றாய்...



பசியை உனக்கு தருவோருக்கு

சோறு சமைக்கின்றாய்....

நஞ்சை உனக்கு தந்தோரிடமும்

நலமா என்கின்றாய்..



கடலைப் உனக்குள் வைத்துக் கொண்டு

பிச்சை கேட்கின்றாய்...

ஆயிரம் சூரியன்  அருகில் இருந்தும்

இருட்டில் இருக்கின்றாய்....



நாட்டை சுமக்கும் தோள்கள் உனது

மூட்டை சுமக்கின்றாய்...

மூட்டை சுமந்தும்  பசியால் ஏனோ

முடங்கிப் போகின்றாய்... ?



உறவுகள் ஆயிரம் இருந்தும் ஈற்றில்

உணவுக்கலைகின்றாய்..

தேகம்தேய உழைத்துமென்ன

தெருவில் நிற்கின்றாய்...



தென்றல் கூட புயலாய் மாறும்

தெரிந்து கொள்ளப்பா...

துவண்டு கிடந்து அழிதல் விட்டு

துணிந்து நில்லப்பா



மரணம் என்ற நோயை கொல்ல

மருந்து இல்லப்பா..!

வாழும் வரைக்கும் உனக்காய் வாழ்வை

வாழ்ந்து பாரப்பா



தண்ணீர்கூட கோபம் வந்தால்

தட்டிக் கேட்கும்பா..

வெட்கம் கெட்ட உந்தன் நெஞ்சை

வெட்டிப் போடப்பா..



பாசம் நேசம் பந்தம் எல்லாம்

பழைய பொய்யப்பா

வேசம்போடும் மனிதர் கூட்டம்

விளங்கிக்கொள்ளப்பா



உந்தன் கையில் காசு இருந்தால்

ஊரும் மதிக்கும்பா...

சுவாசம் கூட  தேவையென்றால்

சும்மா கிடைக்கும்பா...



தண்ணீர் தோட்டம் வைத்துக்கொண்டு

தாகம் குடிக்காதே....

கண்ணீர் சிந்தி கலங்கி நின்றால்

கவிதை பிறக்காதே...



குயிலை உனக்குள் வைத்துக்கொண்டு

குரைத்துத் திரியாதே...

குட்டுப்பட்டு குட்டுபட்டே

குன்றிப்போகாதே..



காக்கைகூட நல்லவை சொன்னால்

காது கொடுத்து கேள்...

அகந்தை கொண்டு கேட்க மறுத்தால்

அதுவே உனக்கு வாள்..



நன்றி கெட்ட மனிதனை பார்க்கிலும்

நாய்கள் என்றும் மேல்...

என்பதை உணர்ந்து வாழ்வாயாயின்
வானம் உனக்கு கீழ்...!


நன்றி.
*தமிழ் ஆதர்ஸ்  09.10.11

*சாத்தான் குளம் அப்துல் ஜப்பார்( www.worldtamilnews.com)(12.10.10)
*ஞாயிறு வீரகேசரி (30.10.11)

*எங்கள் தேசம் (01.11.11) 

புதன், 23 மார்ச், 2011

உலகக்கோப்பையை வென்ற 'சுனாமி'...!

 ஆடும்மனிதன் ஆட்டம்காண அலைகளொன்றாய் கூடின!
ஆசைதீர பூமிப்பந்தை அடித்துவிளை யாடின!
ஆடுமாடு கோழிபூனை அழுதுகண்ணை மூடின!
ஆறுகுளங்கள் நதிகள்சேர்ந்து ஊழிப்பாடல் பாடின!

மேடுபள்ளம் பாய்ந்தவெள்ளம் மேலெழுந்து சென்றன!
மேகக்கூட்டம் வானைப்பார்த்து பாவம்பூமி என்றன!
பாடுபட்டு சேர்த்தவற்றை பகிர்ந்து அலைகள் தின்றன!
படையைகண்ட தமிழர்போல பயந்துயாவும் நின்றன!

வீடுகாணி 'கார்'கள்கூட கால்முளைத்து நடந்தன!
வியக்குமளவு கப்பல்
கள்கூட வீட்டின்மேலே கிடந்தன!
வாடும்மனிதன் வாட்டம்கண்டு வானம்பூமி அழுதன!
வாழவேண்டும் உயிர்களென்று வையம்யாவும் தொழுதன!

சூடுபட்டபாலை மீண்டும் சுனாமிப்பூனை
கள் நக்கின!
'சூச்சூ..'என்று விரட்டிப்பார்த்தும் கழிவையெங்கும் கக்கின!
கேடுகெட்ட மனிதவாழ்க்கை கிடந்து அதற்குள் சிக்கின!
கேள்விகேட்ட அறிவும்கூட தோல்வியுற்று முக்கின!

உயிரைக்கையில் பிடித்துக்கொண்டு உயிர்கள்யாவும்  கெஞ்சின!
'உலகக்கோப்பை வென்றார்போலே அலைகள்கூடிக் கொஞ்சின!
அகிலமின்றே அழியுமென்று இருக்கும்நிலங்கள் அஞ்சின!
அலைகள்தின்று போட்ட மிச்சம் இமயமலையை விஞ்சின.

காடுகழனி யெங்கும்வெள்ளம் கரைபுரண்டு ஓடின!
கடவுளில்லை என்றவாயும் கடவுள்நாமம் கூறின!
காடுகரை யெங்கும்பிணங்கள் அழுகிப்புழுத்து நாறின.
நாடுஎட்டாம் நரகம்போன்று இமைக்கும்பொழுதில் மாறின!




நன்றி.
*தமிழ் ஆதர்ஸ்    

*விடிவெள்ளி (ஆறாவது விரல்) 24.3.11
*இருக்கிறம் (04.04.11)
 *சிகரம் (துபாய் ) 15.04.2011




சனி, 29 ஜனவரி, 2011

அத்தனையும் உன்குற்றம்....

தழோரப் புன்னகையோ
இதயத்தைக் கைப்பற்றும்
உன்னோரப் பார்வைகளால்
உள்நெஞ்சில் தீப்பற்றும்

பார்வைகளால் பலபாடம்
பலதடவை நான்கற்றும்
உணர்வெல்லாம் உன்னோடு
உணர்விழந்து ஊர்சுற்றும்

நட்பிடத்தில் காதல்வந்து
நட்பென்று பூச்சுற்றும்
நட்பொருநாள் கர்ப்பமுற்ற
நடுக்கத்தில் தலைசுற்றும்....

காதலிக்கும் வேளையிலே
கனவினிலும் தேன்கொட்டும்
அத்தனையும் கனவானால்
அடிநெஞ்சில் தேள்கொட்டும்

மயங்கவைத்து மறைவதுவா
மல்லிகையே உன்திட்டம்
ஆசையெலாம் அரைநொடியில்
ஆயிடுமா தரைமட்டம்...?

உன்னுயிரை நீ வெறுத்தால்
உனக்கும்தான் பெறும்நஷ்டம்
ஆழ்மனதைச் சொல்லிவிட்டேன்
அதற்குப்பின் உன்னிஷ்டம்

கன்னியுனை தேடியது
கண்களது குற்றமன்று
கவிதைகளைப் பாடியது.
கவிஞனது குற்றமன்று

அழகை படைத்தளித்து
அதைரசிக்க விழிபடைத்து
ஆட்டிவைக்கும் ஆண்டவனே
அத்தனையும் உன்குற்றம்...


           நன்றி.
*தமிழ் ஆதர்ஸ்
*பதிவுகள்
*காற்றுவெளி -செப்டம்பர் -2010

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

இறந்து போவது மேலாகும்..!

சோரும் போது ''சொறிந்து'' கொடுத்தால்
சோகம் எமக்கு காலாகும்!
பாலைக் கறந்து படுத்துக் கிடந்தால்
பாலும் கூட பாழாகும்!

துணிவை உனக்குள் வளர்த்துப்பாரு
துயரம் யாவும் தூளாகும்!
''இரந்து வாழும் வாழ்வைக் காட்டிலும்
இறந்து போவது மேலாகும்''

உணர்ச்சியற்று கிடக்கும் நெஞ்சை
உசுப்பும் கவிதை வாளாகும்
வீரம்மறந்து வீழ்ந்து கிடந்தால்
விடியல் தோன்ற நாளாகும்

''பயந்து வாயை பொத்தியிருந்தால்
பழைய சோறும் கிடைக்காது!''
துணிந்து எதிர்த்து கேட்கும் நெஞ்சை
தோட்டாக் கூட துளைக்காது!

நாய்கள் போடும் கூச்சல் கேட்டால்
நாளை உனக்கு விடியாது!
உறுதிநெஞ்சில் இருந்தால் உந்தன்
உயர்வை தடுக்க முடியாது.!

நன்றி.
*பதிவுகள்
*இருக்கிறம்
*தமிழ் ஆதர்ஸ்
*காற்றுவெளி -செப்டம்பர் -2010

சனி, 31 ஜூலை, 2010

நேசமென்னும் தென்றல்வர நெஞ்சத்தை திறந்திடுவோம்...!!

லங்கையர்கள் நாங்களெல்லாம் சகோதரர்கள் என்றிடுவோம்!
இசையோடு நாதம்போல் இணைந்தேநாம் நின்றிடுவோம்!
கலங்குவதால் பயனில்லை கவலைகளை கொன்றிடுவோம்!
விலங்குகளாய் விளங்காமல் விலங்குகளை வென்றிடுவோம்..!

உலகத்தின் ஐக்கியத்தை ஒன்றாகி நெய்திடுவோம்..!
உலர்ந்துநிற்கும் மனங்களுக்குள் மழையாக பெய்திடுவோம்..!
கலகத்தை காதலிக்கும் உணர்வுகளை கொய்திடுவோம்..!
களைவளர்ந்த பூமியிலே கலைவளர செய்திடுவோம்..!

நேசமென்னும் தென்றல்வர நெஞ்சத்தை திறந்திடுவோம்!
நேர்வழியில் பூப்பறித்து பாரினிலே சிறந்திடுவோம்!
சிரமம்தான் என்செய்ய கடந்தவற்றை மறந்திடுவோம்!
சிக்கல்களை விட்டுவிட்டு சிறகடித்து பறந்திடுவோம்!

சாதிமதம் பார்க்கின்ற சறுகுகளை உதைத்திடுவோம்!
சாத்தானின் சரித்திரத்தை குழிதோண்டி புதைத்திடுவோம்!
சாந்தியினை ஊர்கூடி உலகெங்கும் விதைத்திடுவோம்!
சண்டையிட்டு சரிந்தவர்கள் உளம்திறந்து கதைத்திடுவோம்..!

அடிமைக்கும் மிடிமைக்கும் கொடுமைக்கும் கொள்ளிவைப்போம்!-எம்மை
அழவைக்கும் விழவைக்கும் தவறுகளை தள்ளிவைப்போம்!
புரிந்துணர்வு கோலமிட புன்னகையால் புள்ளிவைப்போம்-நாம்
புரிந்துகொண்ட சேதிகளை பூக்களுக்கும் சொல்லிவைப்போம்..!

எம்நாடு முன்னேற எம்மவர்கள் சேரவேண்டும்!
நம்நாடு இலங்கையென நம்மவர்கள் கூறவேண்டும்!
கண்ணோட வலிதந்த காயங்கள் ஆறவேண்டும்!
மண்ணோடு போய்விடமுன் மனதெல்லாம் மாறவேண்டும்!

எம்துயரம் இன்றோடு வீழவேண்டும்.
எமக்குள்ளே நல்லுறவு சூழவேண்டும்-நாம்
ஒருதோப்பு குயிலாக வாழவேண்டும்-எம்
ஒற்றுமையால் எம்தேசம் வாழவேண்டும்.

மண்ணாகும் வாழ்வினிலே மனமுவந்து விட்டுக்கொடு!
மாற்றானின் முயற்சிக்கும் துவேசமின்றி முட்டுக்கொடு!
இல்லாத மனிதருக்கு இருப்பதனை பெற்றுக்கொடு-நாம்
இலங்கையராய் வாழ்வதற்கு உன்குழந்தைக்கும் கற்றுக்கொடு..!

மடமைகளை துரத்திவிட்டு மனங்களினை வாசிப்போம்!
மறைந்திருக்கும் கலைஞர்களை மனமுவந்து ஆசிப்போம்!
இனமதங்கள் நாம்கடந்து தாய்நாட்டை நேசிப்போம்.!
இருக்குவரை இறக்கும்வரை தமிழ்மொழியை சுவாசிப்போம்...!!

                  நன்றி
  * வார்ப்பு
 *தமிழ் ஆதர்ஸ்
 *பதிவுகள்

 *பட்சிகளின் உரையாடல்(கவிதை நூல்)