பதிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 பிப்ரவரி, 2011

கும்பிட்ட கைகளால் குண்டுவைப்போம்..!

 கூட இருந்தே
குழிபறிப்போம்
கும்பிட்ட கைகளால்
'குண்டுவைப்போம்'

கதைத்து பேசியே
'கழுத்தறுப்போம்'
அடுத்தவனின் வளர்ச்சிக்கு
'ஆப்படிப்போம்'

மற்றவர் சிரித்தால்
மனமுடைவோம்
நண்பணின் அழுகையில்
நாம் மகிழ்வோம்

கட்டிப்பிடித்து
கலங்கிடுவோம்
எட்டி நடக்கையில்
ஏசிடுவோம்

தட்டிப்பறித்தே
தளைத்திடுவொம்
மட்டி மடையரை
'மஹான்' என்போம்

எமக்கென்று சொன்னால்
எதுவும் செய்வோம்
'எருமையின் மூத்திரம்
தீர்த்தமென்போம்'

வடிவான அன்னத்தை
'வாத்து' என்போம்
பூக்களை அழகிய
புற்களென்போம்

கானக்குயிலினை
காகமென்போம்
பேசும் மனிதனை
ஊமையென்போம்

'எம்மவர் அமுதினை
எச்சிலென்போம்...
அடுத்தவர் எச்சிலை
அமுதமென்போம்'

'நாய்களை கூப்பிட்டு
பாடு என்போம்
நாட்டுக் குயில்களை
ஓடு என்போம்'

உணவல்ல இதுநல்ல
ஊத்தையென்போம்
உணவிருக்கும் ஆனோலோ
ஊத்தை உண்போம்...

காசுக்காய்  குதிரையை
கழுதையென்போம்
கடவுளை கூட
கூவி விற்போம்...

காகித கத்தியால்
போர் தொடுப்போம்-பின்னர்
கவட்டுக்கள் கைவைத்து
தூங்கிடுவோம்.

இருக்கின்ற போதும்
இல்லையென்போம்
நறுக்கி நறுக்கியே
நாம் உயர்வோம்

கொஞ்சிப்பேசியே
கொள்ளிவைப்போம்..
கொஞ்சும் தமிழையும்
கொன்றுவைப்போம்

தூண்டிவிட்டு நாங்கள்
தூர நிற்போம்.
துவேஷம் வளர்ந்திட
தோள்கொடுப்போம்.

வகை வகையாக
வலை பின்னுவோம்
வயிற்றினில் அடித்தே
வளர்ந்திடுவோம்

எடுத்தெதற்கெல்லாம்
பிழைபிடிப்போம்
எங்கள் பிழைகளை
மறைத்திடுவோம்

குறைகள் சொல்லியே
குழப்பம் செய்வோம்
குழப்பங்கள் செய்தே
குதூகலிப்போம்

'மரங்களின் கரங்களை
முறித்திடுவோம்
பின்னர் மழையிடம் நாங்களே
பிச்சை கேட்போம்'

சிந்திக்க சொன்னால்
'சீ' என்னுவோம்
சீர்கெட்டு போவதே
சிறப்பு என்னுவோம்

'பாவங்கள் செய்தே
பழகிவிட்டோம்
மரணம் இருப்பதை
மறந்திட்டோம்'

வாழ்வில் எதுக்கும்நாம்
வருந்தமாட்டோம்
''சுனாமி'' வந்தாலும்
திருந்தமாட்டோம்..

கூட இருந்தே
குழிபறிப்போம்
கும்பிட்ட கைகளால்
'குண்டுவைப்போம்..!'

நன்றி
 *பதிவுகள்.
*காற்றுவெளி -செப்டம்பர் -2010*வீரகேசரி உயிர் எழுத்து (06.02.2011)

செவ்வாய், 1 பிப்ரவரி, 2011

மாடுகள் கூட்டிய மாநாடு...!


ருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…

நடப்பன ஊர்வன
நடிப்பன பறப்பன
விலங்குகள் சிலவும்
விழாவுக்கு வந்தன…


காணிகளை
களவாக மேய்வதில்
‘கலாநிதி' முடித்த
கிழட்டுக் கிடாக்கள்தான்
கிரீடத்தை சூட்டுகின்றன…


இலவம் பழத்துக்காய்
இலவுகாத்த
மூளையே இல்லாத
முட்டாள் கிளிகள்

கீச்சுக் குரலில்
மூச்சு விடாமல்
சிறுநீரை பற்றி
சிலாகித்து பேசின…

ஒலிவாங்கியை
எலி வாங்கி
எருமைகள் பற்றியே
எடுத்துவிட்டன…


பாவம் பசுக்கள்…!
பாலைப் பலருக்கும்
பருகக் கொடுத்துவிட்டு
குட்டிகளோடு
குமுறிக் கொண்டிருந்தன
குளக்கரையில்.


பசுக்களை
கொசுக்கள் கூட
கணக்கில் எடுக்கவில்லை….


பாம்புகள்
பாலுக்காய்
படப்பிடிப்பிலிருந்தன…

வெட்கமில்லாத
வெண்பசுக்கள்
முலைகளை
மூடிமறைக்காததால்
முள்ளம் பன்றிகள் பார்த்து
மூச்சிரைத்தன…
பார்க்கு மிடமெங்கும்
பாலே ஓடியது…


பூனைகள் எலிகளோடு
புன்னகைத்தவாறு
முயல்களை
முழங்குவது போல் பார்ப்பதில்
மும்முரமாய் இருந்தன…


எருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…


வாழ்த்துப் பாடின
வால் பிடித்தே
வயிறு வளர்க்கும்
வாலான் தவளைகள்….

கால் பிடித்தே
காரியம் முடிக்கும்
காகங்களும்
கழிசரைக் கழுதைகளும்
காளைகளுக்கு மாறி மாறி
கவரிவீசின…

மாக்கள் கூடிய
மாநாடு அல்லவா…?
பூக்களுக் கங்கே
புகழாரமில்லை

அழுக்குத்தான் அன்று
அரியணையில் இருந்ததால்
சாணமே அங்கு
சந்தனமாயிருந்தது…

தயிர்ச் சட்டிளாலும்
நெய் முட்டிகளாலும்
இவ்வருடத்திற்கான விருதுகள்
இழைக்கப்பட்டிருப்பதாகவும்
பருந்துகளுக்கு
விருந்து வழங்கினால்தான்
அடுத்த வருடத்திற்கான
‘ஆளுநர்' தெரிவாவரென்றும்
அதிலும்
முதுகு சொரிவதில்
‘முதுமாணி’ முடித்தவர்களுக்கே
முன்னுரிமை இருப்பதாகவும்
முதலைகள்
முணுமுணுத்தன…

எருதுகளுக்கு
விருதுகள் வழங்க
மாடுகள் கூட்டிய
மாநாடு அது…

நாக்கிலுப்புழு ஒன்றே
நடுவராக இருந்ததால்
மான்களுக்கும்
மயில்களுக்கும்
மரியாதை அங்கில்லை.
வான் கோழிகளுக்குத்தான்
வரபேற்பிருந்தது.
பரிகளும் வரவில்லை
நரிகளும்
நாய்களுமே
நாற்காலியை நிறைத்திருந்தது.

மாநாட்டின் ஈற்றில்
எருமைகள் பற்றி
பெருமையாய்
சாக்கடை ஈக்கள்
சங்கீத மிசைத்தன….


மரம்விட்டு
மரம்தாவும்
மந்தி
மந்திரிகள்
கையடித்தன
கைலாகு கொடுத்தன…
எதுவுமே தெரியாத
எருமைகளுக்கு
பன்னாடைகளால
பொன்னாடை போர்த்தி
பொற்கிழி வழங்கின…

மாடுகளின் மாநாட்டில்
விருதுகள் பெற்ற
எருதுகளின்
வீர பிரதாபங்களும்
பல்லிளிப்புடன் கூடிய
படங்களும்
விளம்பரமாய்
நாளை வரலாம்
நாய்களின் பத்திரிகையில்...

*சுடர் ஒளி, 
*செங்கதிர், 
*தினகரன் வாரமஞ்சரி, 
*பதிவுகள், 
*வார்ப்பு

சனி, 29 ஜனவரி, 2011

அத்தனையும் உன்குற்றம்....

தழோரப் புன்னகையோ
இதயத்தைக் கைப்பற்றும்
உன்னோரப் பார்வைகளால்
உள்நெஞ்சில் தீப்பற்றும்

பார்வைகளால் பலபாடம்
பலதடவை நான்கற்றும்
உணர்வெல்லாம் உன்னோடு
உணர்விழந்து ஊர்சுற்றும்

நட்பிடத்தில் காதல்வந்து
நட்பென்று பூச்சுற்றும்
நட்பொருநாள் கர்ப்பமுற்ற
நடுக்கத்தில் தலைசுற்றும்....

காதலிக்கும் வேளையிலே
கனவினிலும் தேன்கொட்டும்
அத்தனையும் கனவானால்
அடிநெஞ்சில் தேள்கொட்டும்

மயங்கவைத்து மறைவதுவா
மல்லிகையே உன்திட்டம்
ஆசையெலாம் அரைநொடியில்
ஆயிடுமா தரைமட்டம்...?

உன்னுயிரை நீ வெறுத்தால்
உனக்கும்தான் பெறும்நஷ்டம்
ஆழ்மனதைச் சொல்லிவிட்டேன்
அதற்குப்பின் உன்னிஷ்டம்

கன்னியுனை தேடியது
கண்களது குற்றமன்று
கவிதைகளைப் பாடியது.
கவிஞனது குற்றமன்று

அழகை படைத்தளித்து
அதைரசிக்க விழிபடைத்து
ஆட்டிவைக்கும் ஆண்டவனே
அத்தனையும் உன்குற்றம்...


           நன்றி.
*தமிழ் ஆதர்ஸ்
*பதிவுகள்
*காற்றுவெளி -செப்டம்பர் -2010

நெருப்பாய் எரியும் வாழ்வு!


ல்வியை விற்கிறான் கடையிலே!-இங்கு
கற்பவன் நிற்கிறான் படையிலே!
கழுதைகள் காவலன் உடையிலே!-மனம்
கண்டு துடிக்குதே இடையிலே…!

பேயர சாளுது நாட்டிலே!-இன்று
பேனையை போடுறார் கூட்டிலே!
கணவனும் மனைவியும் கோட்டிலே!கொண்ட
காதலால் வந்தது றோட்டிலே…!

நினைவுகள் காதலின் மடியிலே!-நிதம்
நிம்மதி தேடுறார் குடியிலே!
வாழ்வு நிலைப்பது படியிலே!-இன்றேல்
வாடிட வேண்டுநாம் அடியிலே!

அனைத்தையும் இழந்தார் அலையிலே!-இன்று
அகதியாய் நனைகிறார் மழையிலே!
வாழ்க்கை செலவுயர் மலையிலே!-இட்ட
வாக்கினால் வந்தெதம் தலையிலே!

சும்மா புகழுவார் பேச்சிலே!-கொடும்
சுயநல முள்ளது மூச்சிலே!
வாழ்க்கை எரியுது நெருப்பிலே!-உலகில்
வாழ்வது அவரவர் பொறுப்பிலே!!

2007.11.04

          நன்றி.
*பதிவுகள்
*வார்ப்பு
*சுடர்ஒளி


நவீன துச்சாதனனும் நாயான யூதாஸும்!

பாலாறு தேனாறு ஓடிநின்ற பூமி!
படுபாவிகளினாலே அழியுதடா சாமி!
யாழ்தன்னைப் பந்தாடத் துடிக்குதடா ‘ஆமி’!
யாரென்று உனைக்காட்ட ‘துவக்கெடுத்து காமி!

நாள்தோறும் நல்லவரை ‘கொட்டி'யென்றடைப்பார்
நடுறோட்டில் அவர்பின்னே பிணமாக கிடைப்பார்!
காலாற நடந்தாலே காணமல் போவோம்!
கண்ணிவெடி கிளைமோரில் கால்பறந்து சாவோம்!

கோளாறு கொண்டோரை கொன்றன்று வென்றோம்!
கோடாலிக் காம்புகளால் பின்வாங்கிச் சென்றோம்!
ஏழாறு நாள்போதும் மீண்டுமதை வெல்வோம்!
எமன்வந்து தடுத்தாலும் அவனையுமே கொல்வோம்!

பாவிகளின் இடுப்பொடிக்க ஒருபோதும் அஞ்சோம்!
பல்லிளித்து ஈழம்தா என்றும்நாம் கெஞ்சோம்!
ஆவிபறி போனாலும் மீண்டும்நாம் பிறப்போம்
அடிவருடி களையொழிக்க உயிருறவை துறப்போம்!

எம்மவனே எமையழிக்க யூதாஸாய் போனான்!
எச்சிலைக்காய் வாலாட்டும் நாய்போன்றே ஆனான்!
அம்மாவின் சேலையினை ‘துச்சாதன்' உரித்தான்!
ஆஹாகா! மேலுமுரி எனப்பிள்ளை சிரித்தான்!

ஐவிரலும் ஒன்றல்ல! அவன்பிள்ளை யல்ல!
ஐயையோ என்றலர்வான் எதிரிகளே கொல்ல!
பொய்யுலர பூமலரும் போரொருநாள் ஓயும்!
பொறுதமிழா! உன்வாழ்வில் இன்பத்தேன் பாயும்!




          நன்றி.
*பதிவுகள்
*சுடர் ஒளி
*தாயகம்
*வார்ப்பு




பேருந்து...!


மாதத்தின் முதலாம்நாள் கன்னிப்பெண்ணின்
         மார்பினைப்போல் விம்மிநிற்கும் சேப்பைத்தொட்டு
ஆதரவாய் தடவுகின்றேன் அம்மாஅப்பா
        அன்புமுகம் என்நினைவில் வந்துபோச்சு...…
காதவழி தான்நடந்தேன் போனமாசம்
         கடன்தந்த கனகுமுகம் தோன்றலாச்சு...…
வாதமுற்ற எண்ணமுடன் வீதியோரம்
       'வஸ்'ஸொன்றின் வருகைக்காய் காத்திருந்தேன்…

தினம்குடித்து ஆடியாடி வீடுஏகும்
           திக்குவாயர் எலிக்குஞ்சு தியாகுபோன்று...
சனமடுக்கி புகைகக்கி வந்த பஸ்ஸோ
           சட்டென்று 'பிரேக்'கடிக்க உலுகுவந்தேன்..
பணம்நிறைந்த பையினிலே கையைவிட்டேன்
           பத்தெடுத்தேன் பஸ்ஸினிலே ஏறிவிட்டேன்..
தொணதொணக்கும் கண்டக்டர் காதடைக்க
          கரகரக்கும் பீக்கராகி கடந்து போனான்..

பத்துமிச்சம், பாவியென்னை பார்த்தும்கூட
        'ஸ்ஸரட்ட யன்டமல்லி' என்றுபோனான்
முத்துமுத்தாய் சொட்டுகின்ற வியர்வைதன்னை
       முடிந்தவரை நான்துடைத்து முக்கிநின்றேன்
செத்துவிட்ட அவள்நினைவு ஆங்கும்வந்து
        செய்கவிதை எனமீண்டும் தொல்லை செய்தும்
கத்திக்கத்தி கத்திநெஞ்சில் வீசும் கனகர்
       கடன்தந்த ஞாபகமே தொடரலாச்சு..

என்னருகில் ஒருகிழவி 'ஏன்டா மோனே
        ஏன்காலில் மிரிக்கின்றாய் தள்ளு 'என்றாள்...
என்னசெய்ய? வியர்வைநாற்றம் பொறுமையோடு
       'எங்கதள்ள இடமிருக்கா பொத்து'என்றேன்
கண்ணருகில் காந்தம்பூட்டி நின்றபெண்ணோ
        கஸ்ட்டநிலை உணர்ந்ததுபோல் இடம்கொடுத்தாள்...
பெண்ணவளில் சுவரிலுள்ள பல்லிபோன்று
        பெருமூச்சு விட்டவாறு ஒட்டிக்கொண்டேன்..

என்னசுகம் 'திக்கதிக்' நெஞ்சடிக்க குருதியெங்கும்
         எரிமலையின் குழம்புபொங்கி ஓடலாச்சு..
சின்னவன்நான் சனநெரிசல் உள்ளபஸ்ஸில்
        சித்தமெங்கும் தீப்பிடிக்க சிக்கிநின்றேன்!.
அன்னமவள் 'பெயின்டடிச்ச' கூந்தல்வாசம்
        அடிவயிற்றில் உருண்டையொன்றை உருட்டக்கண்டேன்..
கன்னம்வீங்கும் என்றுணர்ந்து கவலையோடு
        காற்றுபோக இடம்கொடுத்து தள்ளிநின்றேன்.

எந்தவித சலனமற்ற அந்தப் பெண்ணோ..
       ஏக்கமடன் பார்வைகளால் 'ஓகே' என்றாள்
அந்தவேளை கொழுந்துவிட்ட ஆசைத்தீயில்
       அறிவுதன்னை போட்டெரித்து மோட்சம் கண்டேன்!
சிந்தையெங்கும் சிறுக்கியவள் விந்தைசெய்ய
        சீர்கெட்ட எண்ணங்களே எழும்பலாச்சு
மந்தையாகி, நானுமங்கே பெற்றெடுத்த
       தந்தைதாயை என்னைக்கூட மறந்திருந்தேன்…

'ரோசி'யென்று பெயருரைத்தாள் மேனியெங்கும்
          'ரோஜாசென்டு' பூசிநெஞ்சை கிறங்கடித்தாள்!
தாசியவள் என்றறியா விடலைநானோ
           தடுமாறி வீழ்ந்துவிட்டேன் நடந்ததென்ன..?
பேசுதன்னை பறிகொடுத்தேன் வாழ்க்கை என்னும்
          பேருந்தில் வந்தபெண்ணை காணவில்லை...!
காசுதன்னை தொலைத்துவிட்ட கவலையோடும்
         கவிதை யொன்றை வாங்கியேங்கி வீடுவந்தேன்!!





                         நன்றி.

*சுடர்ஒளி வார வெளயீடு
*ஞானம்

*கீற்று
*வார்ப்பு
*பதிவுகள்

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

இறந்து போவது மேலாகும்..!

சோரும் போது ''சொறிந்து'' கொடுத்தால்
சோகம் எமக்கு காலாகும்!
பாலைக் கறந்து படுத்துக் கிடந்தால்
பாலும் கூட பாழாகும்!

துணிவை உனக்குள் வளர்த்துப்பாரு
துயரம் யாவும் தூளாகும்!
''இரந்து வாழும் வாழ்வைக் காட்டிலும்
இறந்து போவது மேலாகும்''

உணர்ச்சியற்று கிடக்கும் நெஞ்சை
உசுப்பும் கவிதை வாளாகும்
வீரம்மறந்து வீழ்ந்து கிடந்தால்
விடியல் தோன்ற நாளாகும்

''பயந்து வாயை பொத்தியிருந்தால்
பழைய சோறும் கிடைக்காது!''
துணிந்து எதிர்த்து கேட்கும் நெஞ்சை
தோட்டாக் கூட துளைக்காது!

நாய்கள் போடும் கூச்சல் கேட்டால்
நாளை உனக்கு விடியாது!
உறுதிநெஞ்சில் இருந்தால் உந்தன்
உயர்வை தடுக்க முடியாது.!

நன்றி.
*பதிவுகள்
*இருக்கிறம்
*தமிழ் ஆதர்ஸ்
*காற்றுவெளி -செப்டம்பர் -2010

சனி, 31 ஜூலை, 2010

நேசமென்னும் தென்றல்வர நெஞ்சத்தை திறந்திடுவோம்...!!

லங்கையர்கள் நாங்களெல்லாம் சகோதரர்கள் என்றிடுவோம்!
இசையோடு நாதம்போல் இணைந்தேநாம் நின்றிடுவோம்!
கலங்குவதால் பயனில்லை கவலைகளை கொன்றிடுவோம்!
விலங்குகளாய் விளங்காமல் விலங்குகளை வென்றிடுவோம்..!

உலகத்தின் ஐக்கியத்தை ஒன்றாகி நெய்திடுவோம்..!
உலர்ந்துநிற்கும் மனங்களுக்குள் மழையாக பெய்திடுவோம்..!
கலகத்தை காதலிக்கும் உணர்வுகளை கொய்திடுவோம்..!
களைவளர்ந்த பூமியிலே கலைவளர செய்திடுவோம்..!

நேசமென்னும் தென்றல்வர நெஞ்சத்தை திறந்திடுவோம்!
நேர்வழியில் பூப்பறித்து பாரினிலே சிறந்திடுவோம்!
சிரமம்தான் என்செய்ய கடந்தவற்றை மறந்திடுவோம்!
சிக்கல்களை விட்டுவிட்டு சிறகடித்து பறந்திடுவோம்!

சாதிமதம் பார்க்கின்ற சறுகுகளை உதைத்திடுவோம்!
சாத்தானின் சரித்திரத்தை குழிதோண்டி புதைத்திடுவோம்!
சாந்தியினை ஊர்கூடி உலகெங்கும் விதைத்திடுவோம்!
சண்டையிட்டு சரிந்தவர்கள் உளம்திறந்து கதைத்திடுவோம்..!

அடிமைக்கும் மிடிமைக்கும் கொடுமைக்கும் கொள்ளிவைப்போம்!-எம்மை
அழவைக்கும் விழவைக்கும் தவறுகளை தள்ளிவைப்போம்!
புரிந்துணர்வு கோலமிட புன்னகையால் புள்ளிவைப்போம்-நாம்
புரிந்துகொண்ட சேதிகளை பூக்களுக்கும் சொல்லிவைப்போம்..!

எம்நாடு முன்னேற எம்மவர்கள் சேரவேண்டும்!
நம்நாடு இலங்கையென நம்மவர்கள் கூறவேண்டும்!
கண்ணோட வலிதந்த காயங்கள் ஆறவேண்டும்!
மண்ணோடு போய்விடமுன் மனதெல்லாம் மாறவேண்டும்!

எம்துயரம் இன்றோடு வீழவேண்டும்.
எமக்குள்ளே நல்லுறவு சூழவேண்டும்-நாம்
ஒருதோப்பு குயிலாக வாழவேண்டும்-எம்
ஒற்றுமையால் எம்தேசம் வாழவேண்டும்.

மண்ணாகும் வாழ்வினிலே மனமுவந்து விட்டுக்கொடு!
மாற்றானின் முயற்சிக்கும் துவேசமின்றி முட்டுக்கொடு!
இல்லாத மனிதருக்கு இருப்பதனை பெற்றுக்கொடு-நாம்
இலங்கையராய் வாழ்வதற்கு உன்குழந்தைக்கும் கற்றுக்கொடு..!

மடமைகளை துரத்திவிட்டு மனங்களினை வாசிப்போம்!
மறைந்திருக்கும் கலைஞர்களை மனமுவந்து ஆசிப்போம்!
இனமதங்கள் நாம்கடந்து தாய்நாட்டை நேசிப்போம்.!
இருக்குவரை இறக்கும்வரை தமிழ்மொழியை சுவாசிப்போம்...!!

                  நன்றி
  * வார்ப்பு
 *தமிழ் ஆதர்ஸ்
 *பதிவுகள்

 *பட்சிகளின் உரையாடல்(கவிதை நூல்)

சருகல்ல இவனென்று சாற்று.

'தேமாங்காய்'' ''புளிமாங்காய்'' ஒரு மண்ணும் விளங்காமல்
தெம்மாங்காய் பாடுகிறேன் பாட்டு-ஆமையா!
நான்பாடும் பாட்டை நானறியேன் பெருங்கவியே
கூனுண்டோ ஆயந்துநீர் கூறும்.

கிறுக்கும் கவியெல்லாம் கீழென்று வளர்கவியை
நறுக்கி பின்னவரே நாறுகின்றார்-திருக்கவியே
நொறுக்கி என்நெஞ்சில் நோக்காடு தந்தோர்முன்
சருகல்ல இவனென்று சாற்று.

அழகுத்தமிழ் கவியின் ஆற்றலினை உணராதோர்'
மிளகாய் போல்மரபை நினைக்கின்றார்'-விலகாமல்
 பழகும் தமிழ்மொழியில் மரபுத்தாய் மாண்புகளை
உலகுக்கு சொல்வீர் உணர்ந்து.

நன்றி.
*பதிவுகள்

*காற்றுவெளி- செப்டம்பர் -2010
*சம்மாந்துறையில் நடைபெற்ற தென்கிழக்கு தமிழ்சங்கத்தின் 'அடையாளம்' கவிதை நூல் வெளியிட்டு விழாவில் பாடப்பட்டது.-2010.12.23

வியாழன், 6 மே, 2010

மாட்டுக்கு மாலை போடு..



காலினைப் பிடித்தேன் என்றன்
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

எழுத்திலே காணின் ஏதும்
எழுதுவீர் அதுவே போதும்!

வாலினை பிடிப்ப வர்தான்
வாழுவர் தெரியும் கெட்ட

தேளினை பிடித்தோர் கூட
தேம்புவர் எனவே உங்கள்

காலினைப் பிடித்தே னையா
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

கழுதையும் குரங்கும் மாடும்
கழுத்திலே மாலை பூண்டு…

மூலைக்கு மூலை கூடி
“முதுகினை சொரிந்து” எங்கும்

“போட்டோக்கு” பல்லைக் காட்டி
“போஸினை’’ கொடுத்து பின்னர்

எங்களை வெல்லும் கொம்பன்
எவனடா இங்கு உண்டு…?

என்றுதற் புகழ்ச்சி தன்னில்
எம்பித்தான் குதிக்கும் போது

அற்பன்நான் அவைகள் பாத
அடியிற்கு இன்னும் கீழே

ஆகையால் மாலை வாங்க
அடியேனுக் காசை யில்லை

காலினைப் பிடித்தேன் ‘வாப்பா’
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

மாண்டுநாம் மடிந்த பின்தான்
மனதினால் மாலை இடுவர்

ஈண்டிவர் போடும் மாலை
இதயத்த லல்ல வேசம்..

மாலையில் மாலை போட்டு
மாலைதான் மறையுமுன்னே

கூழையன் நாங்கள் போட்ட
“கூழுக்கு” ஆடிப் போனான…

ஆளினைப் பிடித்து வைத்தால்
ஆளலாம் என்பீர் உங்கள்

காலினைப் பிடித்தேன் ‘’வாப்பா’’
கழுத்துக்கு மாலை வேண்டாம்!

எலும்புக்காய் எச்சிலைக்காய்
எங்கள்நாய் வாலை ஆட்டும்

பிணமான பின்தான் உண்மை
பிரியத்தை அதுவும் காட்டும்

ஆகையால் மாலை சூட்ட
ஆருமே வராதீர் தேடி!

எழுத்திலே ஏதும் காணின்
எழுதுவீர் அதுவே கோடி!!

          நன்றி.
*சுடர் ஒளி வாரவெளியீடு
*தினகரன் வாரமஞ்சரி
*வார்ப்பு

*செங்கதிர்
*பதிவுகள்