ஞாயிறு, 24 நவம்பர், 2013

பிரபல எழுத்தாளர் கே.எஸ்.சிவகுமாரன் அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட எனது கவிதைகள்



எனது ''பாம்புகள் குளிக்கும் நதி ''கவிதை நூலில் இடம்பெற்றுள்ள 3 கவிதைகளை இலங்கையின் பிரபல விமர்சகரும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான கே.எஸ்.சிவகுமாரன் அவர்கள் மொழி பெயர்த்துள்ளார் அவருக்கு மனம் நிறைந்த நன்றிகள்.


The following is my attempt to translate three of the poems written in Tamil by Pottuvil Asmin, a young Lankan poet and TV producer. The poems were taken from his collection “Paampukal Kulikkum Nathi” (Snakes bathing in the River). 
-K S Svakumaran-


01. The poem missed

Rising in the morning I opened the door.
The sky seen lying at my doorstep
Seen were stars lying here and there
As dried leaves.
I searched all around
Couldn’t find the Sun.
The fallen pieces of the Moon
Spread everywhere in the grassland
As snow.
Came to the street, couldn’t find it either.
The electric post submerged in the water
Said that the flood pulled them along
Right throughout the night.
Tried to open my lips to cry out
Found it to have been locked
With a padlock by someone.
I ran hurriedly
To open the Notebook
Where I wrote my poem y’day
Found the poem also missing.
What remained were mere
Words.

03. Snakes bathing in the River

The Sun’s value is not seen
Even if it’s in the Heavens.
Because the rain falls on the ground
Its value doesn’t lessen.
Pretty hands not necessary
To give love
The body alone doesn’t
Give pleasure to enjoy
The worthiness of the lover
Is not known as she sits
Next to you.
Even if there is distance
Love doesn’t extinguish
The river water doesn’t get poisoned
Just because snakes bathe there
The Almighty doesn’t give
Everything as jealousy persists
We humans cannot create the world
But I would say a spot of word
Is enough to break the world.

02.Legs-Attention

Dogs chasing, bit the legs
Legs trembling tread
On flowers
The worms too
Appreciated the
Crumbled flowers.
Dirt resided in the
Minds of the worms
Even the legs are life
Flowers too life
Even the Almighty
Felt it today
But the man died.
He was like an animal
It’s why he   forgot today
The balanced justice.

செவ்வாய், 19 நவம்பர், 2013

எனது பாம்புகள் குளிக்கும் நதி நூல் வெளியீட்டு விழாவின்போது கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் எழுத்தாளர் உடுவை தில்லை நடராசா அவர்கள் ஆற்றிய உரை






எனது ''பாம்புகள் குளிக்கும் நதி'' நூல் வெளியீட்டு விழாவின்போது கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர், எழுத்தாளர் உடுவை தில்லை நடராசா அவர்கள் ஆற்றிய உரை...

இப்போதெல்லாம் தினமும் எங்காவது ஓர் இடத்தில் நூல் வெளியீடு .அதுவும் கவிதை நூல்கள் அதிகம். இன்றும் கூட இளம் கவிஞன் அஸ்மினின் “பாம்புகள் குளிக்கும் நதி “ கவிதை நூல் வெளியீடு வெகு சிறப்பாக நடை பெற்றுக் கொண்டிருக்கிறது . வழமையான நூல் வெளியீடு போல இல்லாமல் குளிரூட்டிய மண்டபம் நிறைய மகிழ்ச்சியான ஆர்வலர்களுடன் பெறுமதியும் கனதியும் இணைந்த கவிதை நூல் வெளியீட்டின் ஒவ்வொரு அம்சமும் வித்தியாசமானதாகவும் சிறப்பானதாகவும் அமைத்திருப்பது பாராட்டுக்கு உரித்தாகும் .

பொன்னாடைகள் பூமாலைகள் புகழ்மாலைகள் என்றில்லாமல் நூலைப் பற் றியும் நூலாசிரியர் பற்றியும் கருத்துகள் தெரிவிக்கப்படும் அதே வேளை பல முக்கியமான தகவல்கள் பல்லலூடாக வழி தெளிவாக திரையில் பார்த்து தெரிந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

திரைப்படங்களில் இடம் பெற்ற கவிஞரின் பாடல்களோடு மலேசியாவில் அவரது புலமையையும் திறமையையும் பாராட்டிய அவையையும் நாங்கள் தரிசிக்க முடிந்தது
நெடுந்தூரமிருந்து வருகை தந்த வாசகர் வட்டத்தை வைத்தே நண்பர் அஸ் மினின் நட்பின் வீச்சை எடை போடலாம் .

அழகான அளவான நல்ல நல்ல சொற்களைத் தெரிந்தெடுத்து பொருளும் கருத்தும் சேரத்தக்கதாக அமைத்து விட்டால் அது கவிதை .இசையோடு பா டத்தக்கதாக அமைத்து விட்டால் அது பாடல் .திரைப்படத்துக்கு ஏற்றபடி அமைத்து விட்டால் திரைப்படப்பாடல்.கவிதையோ பாடலோ எவ்வளவு தான் நன்றாக அமைந்து விட்டாலும் அது திரைப்படம் என்ற வாகனத்துகக்கூடாக பயணிக்கும்போது பலரை சென்றடைகின்றது
இலங்கையில் சிலர் திரைப்படபாடல்களை எழுதினாலும் அது இலங்கைத் திரைப்படம் என்ற சிறிய வட்டத்துக்குள் –எமது வானொலி எமது தொலைக்காட்சி என மட்டுப்படுத்தப்பட்டதால் பலரைச்சென்று சேரவில்லை என்பது என கருத்து .இருப்பினும் அஸ்மின் பாடல் எழுதிய நேரம் நல்ல நேரம் . இந்தியப் திரைபடத்தில் இடம்பெற்று இந்திய வானொலி –இந்திய தொலைக்காட்சி என பரவலாக ஒலி –ஒளி பரப்பப்பட்டதால் அது பல இடங்களையும் சென்று சேர்ந்திருக்கிறது .

அகராதியிலோ அல்லது நாம் பேசுகின்ற .-எழுதுகின்ற மொழியிலோ உள்ள சொற்களை எல்லாம் சாதாரணமாகப் பலர் கருத்தில் கொள்வதில்லை -கவனிப்பதில்லை . கவனம் எப்படியென்றால்
எங்கள் வீட்டுக்கு முன்னால் நல்ல வெள்ளை நிற மல்லிகைப் பந்தல். காலையில் பார்க்கும்போது பூக்கள் மிக அழகாக இருக்கின்றன. அதை அடுத்த வீட்டுப்பெண் தனது மெல்லிய கைகளால் கொய்து மாலையாகக் கட்டும் போது அந்த மல்லிகை மாலை மேலும் அழகாக இருக்கிறது. மாலையில் அந்த மாலையை அவள் கூந்தலில் சூடி வரும் போது இன்னும் மின்னும் வெகு அழகாக எடுப்பாக இருக்கிறது.
கவிஞர்களும் இப்படித்தான் இனிமையான சொற்களைத் தெரிந்தெடுத்து அழகாக சேர்த்து வார்த்தை ஜாலம் காட்டி மயங்க வைப்பார்கள் . பாரதி பாடினார் அல்லவா ?

“சின்னஞ்சிறு கிளியே – கண்ணம்மா
பிள்ளைக்கனியமுதே –கண்ணம்மா
பேசும் போற்சித்திரமே –
அள்ளியணைத்திடவே –என முன்னே ஆடி வரும் தேனே”
பாரதியார் உயிர் பிரிந்த பின் கூட இந்தப்பாட்டின் வரிகளிலிருந்து இரண்டு புதிய பாடல்கள் தோன்றி இருப்பது போல நான் உணர்வதுண்டு
ஒரு பாடல் –
“பிள்ளைக்கனியமுது ஒன்று பிறந்திட வேண்டும் .அதை அள்ளிக் கையால் அணைத்திட வேண்டும்” .
மற்றது –“ ‘பேசும் பொற் சித்திரமே ‘ என்ற வரி மாறுகிறது –
“ சித்திரம் பேசுதுதடி-என் சிந்தை மயங்குதடி “
இன்றைய விழா நாயகன் இளங்கவிஞன் அஸ்மின் எழுதிய “பாம்புகள் குளிக்கும் நதி” நூல் வெளியீடு பற்றிய தகவல்கள் சில நாட்களாக முகநூலில் முக்கிய இடம் பிடித்து வருகிறது. அவற்றில் ஒருவர் தெரிவித்த கருத்து –‘பாம்புகள் குளிக்கும் நதி’ என்பதற்குப் பதிலாக பாம்புகள் குளிக்கும் நதி என்ற தலைப்பு பொருத்தமாக இருக்கும் என்பதே அது
கவிஞனுக்குத்தான் எதனை என்னமாதிரி எழுதவேண்டும் என்பது சரியாகத் தெரியும்
.” சின்னஞ்சிறு கிளியே – “ பாடலில் குழந்தை நடந்து வருவதை பார்த்த கவிஞர் குழந்தையை ‘ஆடி வரும் தேனே ‘ என்று அழகாகப் பாடுகிறார் .சிறு குழந்தை நடக்க மாட்டாது –ஓடவும் முடியாது ஆடி ஆடித்தான் தள்ளாடி வரும் .அதனால்தான் பாரதியார் “ஆடி வரும் தேனே “ எனப்பாடுகின்றார் .

யாழ்பாணத்தில் நாங்கள் கீரிமலைக்கு நீந்தப் போவது வழக்கம் இருந்தாலும் குளிக்கபோறோம் என்று தான் சொல்வோம் . அது போலத்தான் அஸ்மின் “பாம்புகள் குளிக்கும் நதியைக் கவிதையில் காண்பிக்கின்றார் .
சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் தமிழ் இலக்கியங்களைச்சிறிது படித்து தமிழ் பாடல்கள் கேட்டு இளைஞனாக இருந்த காலத்தில்தான் நேரம் போகாது. பிறகு ஒருத்தியை பார்த்த பின் நேரம் கட கட என ஓடத் தொடங்கியது உண்மையாகச் சொன்னால் நேரம் காணாது .நான் இப்படி நினைத்ததை கவிதை மாதிரி எழுதினேன் .பத்திரிகையில் வெளியானது கவியரங்கிலும் ஏற்றி விட்டார்கள் பத்திரிகைக்காக ஒரு தரம் எழுதியதியதை கவியரங்கில் இரண்டு தரம் வாசித்தேன் இப்படி....
“நான் அவளைப் பார்ப்பதுண்டு
அவள் என்னைப் பார்ப்பதில்லை
நான் அவளைப் பார்ப்பதுண்டு
அவள் என்னைப் பார்ப்பதில்லை –அவள்
பார்க்காததால் உறக்கம் வருகுதில்லை –
பார்க்காததால் உணவும் இறங்குதில்லை – அவள்
பார்க்காததால் உறக்கம் வருகுதில்லை –
பார்க்காததால் உணவும் இறங்குதில்லை “
என்றதும் –
“போதும் இறங்குதில்லை’ “போதும் இறங்குங்கோ தில்லை’ –
என கவியரங்கில் இருந்து என்னை இறக்கிவிட்டார்கள்

இப்போது ஒரு திரைப்படப்பாடல் அடிக்கடி ஒலிக்கிறது
பாடல் இதுதான் “ பூக்கள் பூக்கும் தருணம் “ பாடலில்
‘நேற்று வரை நேரம் போக வில்லை –உனதருகே
நேரம் போதவில்லை ‘
பாடல் கவித்துவத்துடன் இசையோடு ஓசையும் சேர்ந்து அமைத்தால் செவிக்கும் சிந்தைக்கும் இன்பம் தரும் அது காலமெலாம் நிலைத்திருக்கும்
சிறு வயதில் யாழ் திறந்தவெளியரங்கில் பார்த்து மகிழ்ந்த நாடகம்தான் ‘கண்டி அரசன் ‘ அந்த இசை நாடகத்தில் ஒரிரு வரிகள்-
“ மாட்டாள் என்றவள் சொன்னாளா ? -சொன்னாள் ஐயா சொன்னாள்”
பின்னர் அது போன்ற பாடல் ஒன்றை திரைப்படத்திலும் ரசித்தேன்
“அவளா சொன்னாள் –இருக்காது அப்படி இருக்கவும் கூடாது ! ”-
என்ற வசனம் பாடல் வரிகளாகி சௌந்தரராஜன் குரலில் பாடலாக ஒலிக்க விஸ்வநாதன் ராமமூர்த்தி இசைவழங்க சிவாஜி கணேசன் நடிக்க அந்த நினைவுகள் நெஞ்சில் நிலைத்திருக்கிறது
பாடல் எப்படி அமைத்தால் நன்றாக இருக்கும் என எம். ஜி. ஆர். கண்ணதாசன்- வாலி போன்றோருக்கு சொல்வாரம் .பாடல் வரிகளுக்கு பல மெட்டுகள் போட்டு ஒலிப்பதிவு செய்து கொடுப்பார்களாம். எம். ஜி .ஆர் .எல்லாவற்றையும் பலமுறை கேட்டு ஒன்றை தெரிவு செய்த பின்னர் இசைத்தட்டாக படம் திரைக்கு வருவதற்கு முன்னரே பாடல் பரவலாக்கப் பட்டுவிடும் . அப்படி ஒரு பாடல் “ தூங்காதே தம்பி தூங்காதே” ரேடியோவில் தூங்காதே தம்பி தூங்காதே பாடல் கேட்டு எப்போது ‘நாடோடி மன்னன் ‘ படம் வரும் என யோசித்துக்கொண்டே பாடசாலைப் புத்தகங்களை மேசையில் விரித்து வைத்திருப்பேன்., அம்மா யோசிப்பா ‘பொடியன் கடுமையாக படிக்கிறான்- தூங்காமல்- நித்திரை கொள்ளாமல் படிக்கிறான்’
இது போல அந்த நாட்களில் பிரபலமான இன்னும் சில பாடல்கள்
“குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வர வேண்டும் “
“ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து “
“நாங்க புதுசாக் கட்டிக்கிட்ட ஜோடி தாங்க “
எத்தனையோ வருடங்களுக்கு முந்திய பாடல் என்றாலும் இப்போதும் கேட்கலாம் போல இருக்கிறது
முதல் முதலாக நடந்த விடயங்களை மறக்க முடியாது அதுவும் அன்போடு கிடைத்தால் மறக்கவே முடியாது
பள்ளிக்கூட காலத்தில் வீட்டில் கஷ்டம் அம்மா சோறு தருவா .சில வேளை வெறும் சோறு கறி இருக்காது உப்புத்தண்ணி தெளித்து அம்மா அதை பக்குவமாக குழைத்து தருவா அந்த சோறு நல்ல ருசி . அன்பையும் பாசத்தையும் குழைத்துத்தருவா . நல்ல ருசி
இன்று பல ஆடம்பர ஹோட்டலில் பல வகை வகையான கறிகளோடு சாப்பிட்டாலும் அம்மா தந்த உப்புசோற்றுக்கு அவற்றை ஒப்பிட முடியாது. அது தான் அம்மாவின் அன்புகையாலை குழைத்துத் தந்த பாசமும் அன்பும்
என்னைப் பொறுத்த அளவில் அஸ்மினுக்கும் அவரது முதல் திரைப்படப்பாடல் மறக்க முடியாமல் இருக்கும்
எம். ஜி. ஆரின் ரிக் ஷா காரன் படத்தில் ‘அழகிய தமிழ் மகள் இவள் என்ற பாடலை கனவுக் காட்சியாக சேர்த்திருந்தார் படம் வெளியானதும் அவரை வானொலியில் பேட்டி கண்டார்கள் பிடித்தமான பாடல் எது என்ற கேள்விக்கு எல்லாரும் ‘அழகிய தமிழ் மகள்’ என்ற பாடலை சொல்வார் என எதிர்பார்த்தார்கள் . ஆனால் எம் ஜி ஆர் தனக்கு பிடித்த பாடல் எம். கே. தியாகராஜ பாகவதரின் ‘மன்மத லீலை ‘ பாடலைச் சொன்னார் .
கால ஓட்டத்தில் ‘நடக்கும் என்பார் நடக்காது “ என்ற பாடல் அல்லது ‘குங்குமம் சிவப்பு கூந்தல் கறுப்பு “ போன்ற பாடல்கள் மறைந்துவிடும் .
ஆனால் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது ‘ பாடல் –சீர்காழியின் குரலும் சிவாஜியின் நடிப்பும் மறக்கமுடியாது-நினைவில் இருக்கவே செய்யும்
அஸ்மினின் சில பாடல்களும் நினைவில் இருக்கவே செய்யும்
அஸ்மினிடம் இளமை –இனிமை –திறமை –புலமை எல்லாம் நிறையவே இருக்கிறது .எல்லாவற்றையும் சேர்த்து புதுமையான பாடல்கள் –கனிவான பாடல்கள் அறிவான பாடல்கள் காலத்தால் அழியாத பாடல்கள் ஆக்கித் தர வேண்டும் எனக் கேட்டு , அவர் கவிதைகளால் பாடல்களால் சமூகம் பயனுற வாழ்த்துகின்றேன்

வெள்ளி, 8 நவம்பர், 2013

என்னுடைய பாம்புகள் குளிக்கும் நதி கவிதை நூலுக்கு வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்கள் வழங்கிய சிறப்புரை




நதியை விழுங்கிய பாம்பு
 

சொட்டச் சொட்ட நனைக்கும் மழை...கிட்டக்கிட்ட நெருங்கும் காதலி... எட்டி நின்று பேசும் மௌனம்...யாவுமே அழகு கவிதைக்கான தருணம் வாய்க்கும் பொழுது! வாழ்வியலின் ஒவ்வொரு நொடியையும் கவிதையே அழகானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றுகிறது.

கவிதை குறித்து பேசுவதும் கவிதை குறித்து யோசிப்பதும் கவிதையே போலவே மிடுக்காகிறது.

அந்தவகையில் இலங்கை நண்பர் கவிஞர் அஸ்மின் அவர்களின் 'பாம்புகள் குளிக்கும் நதி' எனும் இக்கவிதை தொகுப்பு உணர்வுகளின் உயிரோட்டமாய் மிளிர்கிறது.

'கூட இருந்தே
குழிப்பறிப்போம்
கும்பிட்ட கைகளால்
குண்டுவைப்போம்

கதைத்து பேசியே
கழுத்தறுப்போம்
அடுத்தவன் வளர்ச்சிக்கு
ஆப்படிப்போம்'


என்று மனித நேயமற்ற சமூகத்தை கண்ணீர் வரிகளால் கண்கலங்க சொல்கிறார்.
மேலும் கவிதை குறித்த அவர் பார்வையும் வீரம் குறித்த பார்வையும் வேறொரு இடத்தில் பதிகிறார்.

''உணர்ச்சியற்று கிடக்கும் நெஞ்சை
உசுப்பும் கவிதை வாளாகும்
வீரம்மறந்து வீழ்ந்த கிடந்தால்
விடியல் தோன்ற நாளாகும்''


என்று விடியலுக்கு சூரிய எழுச்சி பாடல் பாடுகிறார்.

உண்மையில் யதார்த்த உணர்வுகளை கவிதையில் பதிவதென்பது யாவருக்கும் எளிதில் அமையவதில்லை. ஆழமானதாகவும் அழுத்தமானதாகவும் மாறி வாசிப்பவனை சொற்கட்டுக்குள் சிக்க வைக்காமல் வாழ்வியலின் வலியையும் சௌந்தர்யத்தையும் சொல்லி சொக்கவைப்பதென்பது கவிதையின் நுண்ணியல் வித்தை. அவ்வித்தை இலங்கை கவிஞர் அஸ்மின் அவர்களுக்கு எளிதில் கைவர பெற்றிருக்கிறது.

தொடர்ந்து எழுதுங்கள்.எழுதிக்கொண்டே இருங்கள். எழுத்து வானில் விடிவெள்ளியாகும் உங்கள் எழுத்துக்கள்.

வாழ்த்துகளுடன்
வித்தக கவிஞர். பா.விஜய்
11.3.2013

என்னுடைய பாம்புகள் குளிக்கும் நதி கவிதை நூலில் இடம்பெற்றுள்ள என்னுரை



''எனக்கு அம்மணமாய் இருப்பதற்குச் சம்மதமில்லை''

 தென்றலே கவிபாடும் தென்கிழக்கு மண் கவிஞர்களின் கலைஞர்களின் கருவறையாக இருக்கின்றது. அதிலும் தேனொழுகும் நாட்டார் பாடல்களின் விளைநிலங்களில் ஒன்றாக விளங்குகின்ற பொத்துவில் மண்ணின் மைந்தனாக இருக்கும் நான் கவிஞனாக விளங்குவதில் வியப்பொன்றுமில்லை.

நகரத்தின் புகையை குடித்து வாழ்பவர்களைவிட கிராமத்தின் புழுதியை குடித்து வளர்பவர்களுக்கு நன்றாக கவிதை வரும்.

என் அப்பாவிக் கிராமமே ஒரு அழகிய மரபுக்கவிதை அதை வாசிக்க வாசிக்க நானும் கவிஞனாக மாறிவிட்டேன்.

கவிஞனை கற்பித்து வளர்க்க முடியாது. ஒருவன் கவிஞனாக உருவாவதற்கு கருவிலே திருவாக வேண்டும்.

தான் வாழும் காலத்தின் கோலத்தை வார்த்தைக் கோடுகளால் வரைந்துவிடும் கவிஞனின் நாளத்திலே, நெஞ்சின் ஆழத்திலே, கற்பனைத் தீ உற்பத்தியாகி அது கவித்துவத்தோடு கனன்று எரிவதற்கு முதலில் அவன் பிறப்பின் மூலத்திலே கவிதை இருக்க வேண்டும்.

எனக்குள் பந்தலிடும் பாட்டுப் பூக்களுக்குள் இருந்து என் பாட்டன் முப்பாட்டன் முன்னோர்கள் அனைவரும் முறுவலிக்கின்றார்கள்.

மேலும் சிறிய வயதில் இருந்தே எனக்குள் இருந்த இடையறாத வாசிப்பும் என்னை வளப்படுத்தியிருக்கின்றது. இற்றை வரை என்னை பலப்படுத்தி வருகின்றது.

வாசிப்பு உள்ளவர்களுக்கு வார்த்தை வாலாயப்பட்டுவிடும். வார்த்தை வாலாயப்பட்டால் வாவென்று அழைக்கு முன்பே கவிதைகள் வந்து வாலாட்டி நிற்கும். என்னை வாசிப்பதற்காய் சிறிய வயதிலே ஊக்கப்படுத்திய வாப்பாவை இந்த நேரத்தில் நினைத்துப்பார்க்கின்றேன்.

பாடசாலை காலம் என் வாழ்வில் மறக்க முடியாதது. பொத்துவில் மத்திய கல்லூரியில் கற்கின்ற காலத்தில் என் கவிதைகளுக்கு கிடைத்த சின்னச் சின்ன பாராட்டுதல்கள், பெரிய பெரிய விமர்சனங்கள் தேசிய மட்ட கவிதைப் போட்டிகளில் கிடைத்த வெற்றிகள்தான் என் இதய பூமியில் நம்பிக்கை விதைகளை நட்டுவைத்தன. அதன் பின்பே இந்த இளைய கவியின் பாதங்களும் ஈழத்து இலக்கியத்தை நோக்கி எட்டுவைத்தன.

பாலர் வகுப்பில் படிக்கும் போது ஆசிரியர் பாடப்புத்தகத்தில் உள்ள பாடல்களை இசையோடு பாடிக்காட்டுவார் அதிலே எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.
பின்னர் ஐந்தாம் ஆறாம் தரங்களில் படிக்கின்ற போது புத்தகத்தில் உள்ள பாடல்களை ஓசை நயத்தோடு நானும் பாட ஆரம்பித்துவிடடேன். அதுவும் எனக்குள் என்னை அறியாமல் மரபறிவை விதைத்து சென்றிருக்கலாம்.

மரபு என்பது அடித்தளம். இலக்கியத்தின் எத்தளத்திற்கு செல்வதாயினும் இத்தளத்தில் இருந்தே ஆரம்பிக்கவேண்டும்.

அகரம் அறியாதவன் உகரத்தை உச்சரிக்கவே கூடாது.

எட்டயபுரத்து கவிஞன் தொடக்கம் எங்கள் தேசத்தின் மூத்த கவிஞர்கள் வரை மரபு தெரியாமல் புதுமைக்குள் புகுந்தவர்கள் அல்லர். அவர்கள் தம் முன்னோர்களைக் கற்று முத்துக்குளித்தவர்கள். அதனால்தான் அவர்களால் முத்தமிழிழும் பிரவாகிக்க முடிந்தது. இற்றைவரை முழுநிலவாக பிரகாசிக்க முடிந்தது.

காகிதச்சோலைகளில் மலரும் கவிதைப்பூக்களுக்கு காலம் கல்மாரி பொழிவதும் கல்வெட்டு செய்வதும் அவரவர் கவித்துவ ஆளுமையிலே அடங்கி இருக்கின்றது.
மரபெனும் மகுடத்தை, பழந்தமிழ் கவிதைகளை, பழஞ்சோற்றைப்போல் பார்ப்பவர்களின் படைப்புக்களுக்கு எதிர்காலம் நல்ல சவப்பெட்டிகளை செய்துவைத்து காத்திருக்கின்றது.

இன்று கணிதத்தை விட கவிதையை விளங்குவது கடினமாய் இருக்கின்றது.

புதுக்கவிதை என்ற பெயரில் சிலர் புலம்பல்களை அவிழ்க்கின்றார்கள். கேட்டால் உலகத்தரம் வாய்ந்த படைப்பு அப்படித்தான் இருக்குமென்று உளறுகிறார்கள்.

வாய்க்கு வரும் வார்த்தைகளை ஒன்றன்பின ஒன்றாக ஒடித்துப்போட்டால் அதை கவிதை என்று இளையதலைமுறையினரில் ஒரு சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள். தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் இத்தகைய காளான்களால் நல்ல கவிஞர்களின் பெயரும் நாறிக் கிடக்கின்றது.

எனக்கு ஒன்றோடு ஒன்பதாகிப்போவதில் உடன்பாடில்லை. அதனால்தான் புதுமையென்னும் கவசத்தை அணிந்துகொண்டு மரபென்னும் போர்வாளை கையிலெடுத்தேன்.

நான் மரபோடு கைகுலுக்கிக் கொள்வதால்தான் இன்று இருக்கின்ற இளைய தலைமுறைக் கவிஞர்களில் இருந்து என்னால் வேறுபட்டு நிற்க முடிகின்றது.

நவீனம், பின் நவீனம் என்ற பெயரில் கவிதையுலகில் கலவரத்தை ஏற்படுத்தி பின் காலச்சுனாமியில் காணமல் போகின்ற வரட்டு எண்ணம் எனக்கோ என் கவிதைகளுக்கோ கடுகளவும் இல்லை.

நான் மரபுக்கும் புதுமைக்கும் இடையிலான பாலமாகவே இருக்க விரும்புகின்றேன்.

என்னைப் பொறுத்த வரையில் மரபு என்பது கவிதையின் ஆணிவேர் புதுக்கவிதை என்பது அதில் தோன்றும் பூக்கள்தான். ஆணிவேர் இல்லாமல் பூக்கள் என்றும் புகழ்பெறப்போவதில்லை.

ஆடையின்றி நிர்வாணத்தை அணிந்து கொண்டிருக்கும் கூட்டத்தின் முன் ஆடையணிந்து ஒருவன் சென்றால் அவனை நாகரீகம் தெரியாதவன் என்று நகைப்பார்கள்.

அதே நிலை எனக்கும் ஏற்படலாம்.அதற்காக விழுதுகள் பல பரப்பி விருட்ஷமாய் வியாபித்து விரிந்திருக்கும் தமிழ் மொழியின் மரபை வெறும் விருதுகளுக்காக விட்டுக்கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை.

நவீனம், பின்நவீனம் இன்று நேற்று உருவானதல்ல அது நாகரீக மனிதன் தொட்டு உருவாகிவிட்டது. துருப்பிடித்ததை தூசுதட்டி எடுத்து அதை தாம்தான் முதலில் கண்டுபிடித்தாக பலரும் பசப்பித்திரிகின்றனர்.

வேட்டையாடி திரிந்த மனிதன் என்று வெட்கப்பட ஆரம்பித்தானோ என்று ஆடை உடுத்து அந்தரங்கம் மறைத்து அழகு பார்த்தானோ அன்று அவன் நவீனமாகிவிட்டான்.

சங்கக் காலத்தில் தோன்றிய கவிதை அக்காலத்தில் நவீன கவிதையாக கருதப்பட்டது. அது தற்போதைய யுகத்தில் செய்யுளாக, மரபுக்கவிதையாக பேசப்படுகின்றது.

தற்காலத்தில் நவீன கவிதையாக பேசப்படும் கவிதை இன்னும் ஒரு யுகம்போக அது மரபுக் கவிதையாக அக்கால சந்ததியினரால் பேசப்படும். இன்றைய நவீனம் நாளைய மரபாக தெரியலாம்.படைப்பு நிலைப்பதென்பது படைப்பாளனின் கையில்தான் இருக்கிறது.

மண் அடுப்பில் சமைத்தாலும் மின் அடுப்பில் சமைத்தாலும் அரிசைத்தான் சோறக்கா முடியுமே தவிர புதுமை என்ற பெயரில் வெறும் நெல்லை உலைவைக்க முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள். பாவம் கவிதையை புரியாமல் கொல்லாதீர்கள்.

படைப்பாளி படைப்புக்கான வார்த்தையை வாழ்க்கையிலிருந்து பெறவேண்டும்.ஒரு படைப்பை வாசிக்கும் வாசகன் அந்த படைப்பு தன் வாழ்க்கையுடன் ஒத்துப்போவதாக உணரும்போதே ஒரு படைப்பு வெற்றிப்பெருகின்றது.

ஒன்றுக்கும் உதவாத வெறும் வெற்று கற்பனைகள் கவர்ச்சியான அழகியலாக இருக்கும். காலப்போக்கில் அழுகி அது இறக்கும்
.
மரபுக் கவிதைகள் பற்றி இன்னும் எளிமையாக சொன்னால் மரபுக் கவிதை என்பது அழகிய பொட்டு வைத்து பூச் செருகி சேலையுடுத்திய கலாசாரப் பெண். புதுக்கவிதை என்பது சுடிதார் அணிந்த பெண். நவீனம், பின் நவீனம் என்பது ஆடைகளின்றிய அம்மண உலகம்.

''மறைக்கும் பொருளுக்கே மதிப்பதிகம்'' என்பார்கள். எனக்கு அம்மணமாய் இருப்பதற்கு சம்மதமில்லை.

தம்மை உலக கவிஞர்களாய் நினைத்துக் கொண்டிருக்கும் உள்ளூர் கவிஞர்கள் தலை கீழாக நின்றாலும் கூட எம் தாய் மொழியான தமிழ் மொழி ஈன்றெடுத்த பிள்ளை மரபு சார்ந்த கவிதை மட்டும்தான் ஏனையவை முத்துப்பிள்ளையானாலும் தத்துப்பிள்ளைகள்தான்.

பாரதி புனைந்தான் புதுமைப்பித்தன் வனைந்தான் என்பதற்காக மேலைத்தேய இறக்குமதிகளை நாம் நமது தமிழின் அடையாளமாகக் கொள்ள முடியாது.

அரசியல்வாதிகளில் இலக்கிய வாதிகளும் இருந்திருக்கின்றனர் இருக்கின்றனர். ஆனால் இன்று இலக்கியவாதிகளும் அரசியல்வாதிகள்போல் ஆகிவிட்டனர்.

பிரதேசத்துக்கு பிரதேசம், மாநிலத்துக்கு மாநிலம் , நாட்டுக்கு நாடு ஆளுக்கொரு சஞ்சிகையினை உருவாக்கி ஆளுக்கொரு இலக்கிய அரசியலை முன்னெடுக்கின்றனர்.

இவர்கள் தமக்கு வேண்டியவர்களை 'மகா -கவிகள்' என்றும் வேண்டப்படாதவர்களை 'தற்குறிகள்' என்றும் நிறுவுவதற்கு முனைகின்றனர்.

இத்தகைய குழுமனப்பான்மை கொண்ட குழப்பக்காரர்களிடம் இருந்து என்றும் நான் விலகி இருக்கவே விரும்புகின்றேன்.

மேலைத்தேயத்தில் இருந்து நாடுகடத்தப்பட்ட இலக்கிய சிந்தனைகளை சிறு சஞ்சிகைகள் மூலமாக வெள்ளோட்டம் விட்டு மூக்குடைந்து போனவர்களுக்கும் , மொழி பெயர்க்கப்பட்ட கவிதைகளை படித்துவிட்டு அதனை தமிழில் நடித்துக்காட்ட முனைந்தவர்களுக்கும் , வடமொழியை கலந்து தமிழில் வடமிழுக்க வந்தவர்களுக்கும் , ஆபாச வார்த்தைகளால் அழகு பார்ப்பவர்களுக்கும் , இன அரசியலை இலக்கியத்துக்குள் திணிக்க நினைப்பவர்களுக்கும் எனது கவிதை வானம் புஷ்வாணமாக தெரியலாம். அதனைப்பற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை.

'கவிதை எப்பொழுதும் கவிஞனுக்கும் வாசகனுக்கும் இடையே நடைபெறும் ஆன்ம உரையாடலை முன்னெடுக்கிறது. ஒரு நல்ல கவிதை எனும் நிலையை ஒரு கவிதை எட்டுவது கவிஞனின் கைகளில் மட்டுமல்ல. உள்வாங்கும் வாசகனிடமும் இருக்கிறது.'அதனால்தான் வாசகனிடத்தில் அனைத்தையும் விட்டுவிட்டேன்.

கடந்த பதினைந்து வருடங்களாக நான் பத்திரிகைகளிலும் , சஞ்சிகைகளிலும் , இணையத்தளங்களிலும் எழுதியவற்றுள் தேவையான கவிதைகளை தேர்ந்தெடுத்து உங்கள் முன் சமர்ப்பித்திருக்கின்றேன்.

'எனது ஒவ்வொரு கவிதையும் ஓர் அனுபவப் பொருளாக இருக்க தேர்ந்தெடுக்கப்பட்டவை. எனது எல்லாக் கவிதைகளும் பயன்பாட்டுக் கருவிகளாக உருவாக்கப்பட்டவை.' எனக்குப் பின்னர் வரும் வேறு எவரோ புதிய அடையாளங்களைச் செதுக்கிக் கொள்ளக் காத்திருக்கும் கல்லோ மரத்துண்டோதான் இந்த கவிதைகள்.

எனது ''பாம்புகள் குளிக்கும் நதி'' பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் இதனை படிக்கக் கொடுங்கள் பிடிக்காது விட்டால் தீக்குச்சிக்கு கடிக்கக் கொடுங்கள் அப்படிக் கொடுத்தாலும் அந்தத் தீ கவித்துவத்தோடு கனன்று எரியும் என்று எனக்கு தெரியும்.

எனவே, நிறைவாக நன்றி நவிழலுடன் வாசக உள்ளங்களுக்கு வழிவிடுகின்றேன்....

இந்த கவிதை நூலுக்கு அணிந்துரை வழங்கிய கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் ,வாழ்த்துரை வழங்கிய வித்தக கவிஞர் பா.விஜய் அவர்களுக்கும், இந்த நூலை வெளியிடும் ப்ளின்ட் பதிப்பகத்தின் நிறுவனர் , ஊடகம் இணைய சஞ்சிகையின் ஆசிரியர் நண்பர் ஜாஃபர் சாதீக்(துபாய்) அவர்களுக்கும் , எழுத்துப்பிழைகளை ஒப்புநோக்கி கவிஞர் கிண்ணியா அமீரலி மற்றும் அறிவிப்பாளர் ஏ.எம்.அஸ்கர் அவர்களுக்கும் இந்தநூல் வெளிவருவதற்கு மேலும் என்னை ஆற்றுப்படுத்திய நண்பர்களுக்கும் நூலை அழகுற வடிவமைத்துத் தந்த நண்பர் இம்தாத் அவர்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

-நன்றி-
பொத்துவில் அஸ்மின்