வியாழன், 23 பிப்ரவரி, 2012

கவியரங்கில் பாடப்பட்ட கவிதை


'தடாகம்' கலை இலக்கிய வட்டத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட கவிஞர் எஸ்.ஜனூஸ் எழுதிய ''தாக்கத்தி'' கவிதை நூல் வெளியீட்டு விழாவில் இடம்பெற்ற சிறப்பு கவியரங்கில் பாடப்பட்ட கவிதை.(20.2012)


இறைக்கும்
இறை மறைக்கும்
உண்மை உரைக்கும்
உயர் நபிக்கும்

என்னை முறைக்கும்
இந்த அறைக்கும்
எங்கள் பிறைக்கும்
கண்டு விறைக்கும்
கலைத் துறைக்கும்
அதன் திரைக்கும்...

என்னை அணைக்கும்
கல்முனைக்கும்
இங்கே இணைக்கும்
தாக்கத்திக்கும்....

இந்த அவைக்கும்
கவிஞர் சபைக்கும்
கவிதை சுவைக்கும்
உங்கள் செவிக்கும்....
இந்த புவிக்கும்...

இங்கே முளைக்கும்
எங்கள் கலைக்கும்
என்னை அழைக்கும்
தமிழ் மழைக்கும்
அஸ்ஸலாமு அலைக்கும்...!

நான் உரைக்கும் கவிதை
இனிக்கும் பின்னர் இடிக்கும்
உறைக்கும்-மென்மை
குறைக்கும்-நெஞ்சை
கரைக்கும்-கொஞ்சம்
குரைக்கும்

கொடுமை எரிக்கும்.
அரிக்கும் உரிக்கும் முறிக்கும்
காலம் நரைக்கும் வரைக்கும்
புதுமை கிறுக்கும்
இருக்கும்...!


(வேறு)

சாய்ந்த மருதூரின்
சர்க்கரைப் பந்தலிலே
சீனி விற்கவந்த
சின்னப்பயல் நான்...

நாணி நாவரண்டு
நடுநடுங்கி நிற்கின்றேன்-
பத்தேக்கர்
காணி செய்வது போல்
படபடப்பாய் இருக்கிறது....

கவிதைத் தலைவா...
நீங்கள் ஆய்ந்து ஆய்ந்து
அறிஞனாய் போனவர்-நான்
காய்ந்து காய்ந்து
கவிஞனாய் போனவன்...
தேய்ந்து தேய்ந்து
தெருவிலே நிற்பவன்...
பயந்து பயந்து
கவிதைகள்  பாடுவேன்
நயந்து நயந்து
ஓதுவேன் கேளுங்கள்.!

(வேறு)

வானொலியில் தேனொலிக்கும்
வரகவிகள் மத்தியிலே
நானொலிக்கும் கவிதை
'நான்' ஒழிந்து நிற்கிறது..!

ஏன்வந்தோம் என்று
ஏக்கத்தில் துடிக்கிறது..
தேன் சொரியும் திருமலர்கள்
தேன்கிழக்கின் நறுமலர்கள்
இருக்கையிலே இருக்கையிலே...

பேன்சொரியும் என்கரங்கள் - உங்களுக்கு
பிடிக்குமா தெரியவில்லை. -என்
குழந்தைக் கவிதையிலே
குறை கண்டால் மன்னிப்பீர்..!



(வேறு)
 
நரிகள் எல்லாம்
ஒன்றாய்க் கூடி
நாடக மொன்றை கிறுக்கட்டும்...!
பரிகள் போர்த்திய
பாயும் புலிகள்
பதுங்கி என்னை அறுக்கட்டும்...!

சுரிகள் எல்லாம்
என்னைக் கண்டால்
முகத்தை சுழித்து வெறுக்கட்டும்..!-தற்
குறிகள் கூட
தடையாய் நின்று
முளைக்கும் என்னை நறுக்கட்டும்...!

எந்தன் வானம்
எந்தன் பூமி
எந்தன் வாழ்க்கை கறுக்கட்டும்...!
எல்லாம் சேர்ந்து
என்றோ ஒருநாள்
ஏவுகணையினை கருக்கட்டும்...!

எரியும் கவிதை
விரியும் கரமாய்
எய்ப்போர் பல்லை நொறுக்கட்டும்...!
புரியும் வரைக்கும்
எந்தன் நாமம்
புரியாதுனக்கு இருக்கட்டும்...!

காலம் யாவும்
சேர்த்து வைத்த
சோகம் கவியால் கருகட்டும்...
இமய மலைபோல்
இருக்கும் மனசும்
இன்றே பனியாய் உருகட்டும்...!

இளையவன் எந்தன்
கவிதை கேட்டு
இன்பம் எங்கும் பெருகட்டும்...!
வெடிக்கும் கவிதை
இடிக்கும் கொஞ்சம்
பிடிக்கும் என்றால் கைதட்டும்...!




(வேறு)

உம்மாநான் சவூதிக்கு போறேன்-எங்கட
கவலைகள் கரச்சல்கள் கலஞ்சோடிப்போக...!
உம்மென்று இருக்காதே நீயும்-என்ட
உசுரப்போல்  எப்போதும் புள்ளநான் பாப்பேன்!

வாப்பாநீங்க ஒழச்சது போதும்-ஒங்கட
பெரச்சின லாத்தையும் நானினி பாப்பேன்...!
சாப்பாட்டுக் கினியென்ன பஞ்சம்...?-ஒங்கள
மௌத்தாகும் வரைக்கும்நான் மனசாற பாப்பேன்..!

கலியாண வயசுள்ள என்ன-நீங்க
கரசேக்க படுகிற பாட்ட நான் அறிவேன்...!
என்னகா செய்றநான் உம்மா
பொம்புளயா  பொறந்தது யாரோட குத்தம்..?

அப்பம் வித்து காக்கா படிச்சார்
கடசியில் நமக்கெல்லாம் என்னத்த கிழிச்சார்...?
கொமர நெற வேத்த முந்தி-காக்கா
கொறுக்காட பேத்திய  கலியாணம் முடிச்சார்...

புழிஞ்ச தேங்காப் பூவப் போல
புளிச்சித்தான் போனோம் அவருக்கும் நாங்க-என்ட
கிழிஞ்ச 'சல்வார'' மாத்த-உம்மா
ஒங்கிட்ட காசில்ல யார்ட்ட வாங்க...?

படிச்சாக்கள் இப்பெல்லாம் கூட-இஞ்ச
படிப்புத்தான் உசிரென்றோர் சோத்துக்கு வாட-நான்
பட்டங்கள் படிச்சதும் வீந்தான்-இப்ப
தொழிலின்றி இருந்திட்டா கெடைக்குமோ தீன்தான்...?

அரசாங்க தொழிலையும் காணோம்-நாங்க
அலையாலும் மழையாலும் அழிஞ்சிதான் போனோம்
'எம்பி''மார் பொய்கள கேட்டா - உம்மா
இதவிட மோசமா அழிஞ்சுதான் போவோம்...!

அதுவரும் இதுவரும் என்பார்-எம்பி
ஆனைய குடுத்தாலும் சோத்தோட திம்பார்
ஊட்டுக்கு தேடிநாம் போனா-'சேர்''
எடுபிடி அனுப்பி 'பிஸி'' எனச்சொல்வார்...

ரோட்டுல கண்டாலும்கூட
தெரிஞ்சாலும் தெரியாத மாதிரி போவார்
வோட்டுத்தான் அவருக்கு வேணும்-நாங்க
ஏமாந்து ஏமாந்து அழுதது காணும்...

வக்கின்றி வாக்குகள் கேட்டு-ஊட்ட
வருவோர்க்கு உம்மாநீ வாருகள் காட்டு
எருமைங்க கதையல கேட்டு
ஏமாந்து இனிமேலும் போடாதே ஓட்டு....

ஒழைக்காட்டி ஒசந்தவர் யாரு? -நாங்க
ஒழைக்காம தின்டிட்டா மதிக்குமா ஊரு?
ஒழச்சத்தான் கக்கிஷம் போகும்-இத
ஒணராட்டி எப்புடி சோகங்கள் சாகும்..,?

நெனச்சமாரி நாங்க உடுக்க-இழிவா
நெனச்ச மச்சானுக்கு சீதனம் குடுக்க
சவூதிக்கு உம்மாநான் போறேன்-எல்லாம்
சரியாக வந்திடும் சிலநாளில் பாரேன்.

சொளையாக அனுப்புறன் காசி- ஊட்டில்
சொகமாநீ வாழலாம் பூட்டும்மா 'ஏசி'
தொணையாக இருக்கிறேன் உம்மா-நீயும்
கொளராத கக்கிஷம் போய்விடும் சும்மா...

சொர்க்கத்த வாங்கிட்டு வருவேன்-அந்த
மக்கத்து சொகமெல்லாம் ஒனக்குத்தான் தருவேன்
சொத்துக்கள் உம்மாநீ வாங்கு-எங்கட
சொர்க்கத்தில் இனியாச்சும் சொகமாக தூங்கு...!

மனம்வெச்சி என்னநீ அனுப்பு-சவூதி
நானிப்ப போனாத்தான் எரியும்நம் அடுப்பு..!
போஎன்டு செல்லித்தான் பாரு..-சொட்டு
நாளைக்குள் ஓடும்மா தங்கத்தில் ஆறு.....

ஒயித்தாட புள்ளநான் என்று
ஒதுக்கித்தான் பாக்காக ஊராக்கள் இன்று
அவியலின் முன்னால நாங்க
ஆரேண்டு காட்டித்தான் வாழனும் ஓங்க...

உம்மாநான் சவூதிக்கு போறேன்-எங்கட
கக்கிஷம் எல்லாமே காத்துல போகும்-என்ன
சும்மா நெனைக்காதே நீயும்-நாங்க
சொகுசாக வாழலாம் சொமையெல்லாம் தீயும்...!!










இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

6 கருத்துகள்:

ஸ்ரீ சரவணகுமார் சொன்னது…

அருமை

Dato Jamarulkhan சொன்னது…

Migavum Arumai. Malaysiavil unggal kavithaiyai migavum rasithen.Valthukkal .Salaam

Dato Jamarulkhan சொன்னது…

அருமை மிகவும் அருமை உங்கள் கவிதையை மலேசியாவில் உலக தமிழ் இலக்கிய மாநாட்டிலும் மிகவும் ரசித்தேன்

PANITH THEE சொன்னது…

மிகவும் அருமையான கவிதை அஸ்மின். ஒவ்வொரு வரியும் உயிரோட்டத்துடன் இருக்கிறது. மனம் நிறைந்து பாராட்டுகிறேன். - என். நஜ்முல் ஹுசைன்

jgmlanka சொன்னது…

கவிதை ஒவ்வொரு வரியும் சுவைக்கிறது... மிக அருமையான நடை..
//நீங்கள் ஆய்ந்து ஆய்ந்து
அறிஞனாய் போனவர்-நான்
காய்ந்து காய்ந்து
கவிஞனாய் போனவன்...//நாங்கள்
மாய்ந்து மாய்ந்து
கவிதை சுவைப்பவர்..உம் கவியில்
தோய்ந்து தோய்ந்து
தீன்சுவை கண்டவர்...
வாழ்த்துக்கள்

கவிஞர் அஸ்மின் சொன்னது…

என்னுடைய வலைப்பூவின் வாசலிலே கோலங்களை இட்டுச்சென்ற
*ஸ்ரீ சரவணகுமார்
*Dato Jamarulkhan
*PANITH THEE(கவிஞர் நஜ்முல் ஹீசைன்)
*பூங்கோதை ஆகியோருக்கு எனது மனம்நிறைந்த நன்றிகள்.

கருத்துரையிடுக