திங்கள், 31 ஜனவரி, 2011

என் கிராமத்தின் நதியைப்போல......



 இலங்கையின் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் 'ஜீவநதி' கலை -இலக்கிய சஞ்சிகையில் இடம்பெற்ற  இந்த  நேர்காணல்.''ஜீவநதி நேர்காணல்கள்'' என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.

                                    நேர்கண்டவர்:-கலாமணி பரணிதரன்-  

01.கவிஞர் அஸ்மின் அவர்களே, நீங்கள் கவிதைத்துறையில், குறிப்பாக மரபுக்கவிதைத்துறையில் ஈடுபாடு கொண்டமைக்கு பின்னணியாக இருந்த காரணி பற்றிக் கூற முடியுமா?

தென்றலே கவிபாடும் தென்கிழக்குமண் கவிஞர்களின் கலைஞர்களின் கருவறையாக இருக்கின்றது.அதிலும் தேனொழுகும் நாட்டார் பாடல்களின் விளைநிலங்களில் ஒன்றாக விளங்குகின்ற பொத்துவில் மண்ணின் வித்தாக இருக்கும் நான் கவிஞனாக விளங்குவதில் வியப்பேதுமில்லை
நகரத்தின் புகையை குடித்து வாழ்பர்களைவிட கிராமத்தின் புழுதியை குடித்து வளர்பவர்களுக்கு நன்றாக கவிதை வரும்.என் கிராமமே ஒரு அழகிய கவிதை அதை வாசிக்க வாசிக்க நானும் கவிஞனாக மாறிவிட்டேன்
ஒரு கவிஞனை கற்பித்து வளர்க்க முடியாது.ஒருவன் கவிஞனாக மிளிர்வதற்கு கருவிலே திருவாக வேண்டும்.தான் வாழும் காலத்தின் கோலத்தை வார்த்தைக் கோடுகளால் வரைந்துவிடும் கவிஞனின் நாளத்திலே,நெஞ்சின் ஆழத்திலே,கற்பனைத்தீ உற்பத்தியாகி அது கவித்துவத்தோடு கனன்று எரிவதற்கு முதலில் அவன் பிறப்பின் மூலத்திலே கவிதை இருக்கவேண்டும்.எனக்குள் பந்தலிடும் பாட்டுப்பூக்களுக்குள் இருந்து என் பாட்டன் முப்பாட்டன் முன்னோர்கள் அனைவரும் முறுவலிக்கின்றார்கள்.
மேலும்சிறிய வயதில் இருந்தே எனக்குள் இருந்த இடையறாத வாசிப்பும் என்னை வளப்படுத்தியிருக்கின்றது.இற்றை வரை என்னை பலப்படுத்தி வருகின்றது.அத்தோடு பாடசாலைக்காலத்தில் என் கவிதைகளுக்கு கிடைத்த சின்னச் சின்ன பாராட்டுதல்கள்,பெரிய பெரிய விமர்சனங்கள் தேசிய மட்ட கவிதைப்போட்டிகளில் கிடைத்த அங்கீகாரங்கள் என்படைப்பு நிலத்தில் நம்பிக்கை விதைகளை நட்டுவைத்தன
பாலர் வகுப்பில் படிக்கும் போது ஆசிரியர் பாடப்புத்தகத்தில் உள்ள பாடல்களை இசையோடு பாடிக்காட்டுவார் அதிலே எனக்கு ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. பின்னர் ஐந்தாம் ஆறாம் தரங்களில் படிக்கின்றபோது புத்தகத்தில் உள்ள பாடல்களை ஓசை நயத்தோடு நானும் பாட ஆரம்பித்துவிடடேன்.அது இற்றைவரை தொடர்கின்றது.இப்பொழுதும் பாரதி,பாரதிதாசன்,காசியானந்தன்,நீலாவணன்,சுபத்திரன், கவிதைகளை ரசித்து ஓசையோடு பாடும் பழக்கம் இருக்கின்றது.அதுவும் எனக்குள் என்னையறியாமல் மரபறிவை விதைத்து சென்றிருக்கலாம்.பிற்காலத்தில் மறைந்த கவிஞர் ஈழக்குயில் இத்ரீஸ் மற்றும் காவியப் புலவர் கலாநிதி ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களிடமும் யாப்பிலக்கணத்தை கற்றுக்கொண்டேன்.


2) ஊடகத்துறையில் அதிக ஆர்வம் காட்டும் நீங்கள் வலுவான ஊடகமாக எதனைக் கருதுகின்றீர்கள்?

டகங்கள் யாவும் வலுவாகத்தான் இருக்கின்றன.சில கூஜா தூக்குவதில் வலுவாக இருக்கின்றன,சில பகைமையை தீயை பற்றவைத்து அதில் குளிர்காய்வதில் வலுவாக இருக்கின்றன.சில வாணிகம் செய்கின்றன,சில வளைந்து கொடுக்கின்றன.இன்னும் சில அன்னை மொழி அநாதையாய் கிடக்க அடுத்தவன் மொழியை ஆலாபனை செய்வதில் ஆர்வமாய் இருக்கின்றன.
இங்கே நிலைத்து நிற்பதற்கு கடினமாக உழைக்கத் தெரிந்திருக்கவேண்டும். அதைவிட காலத்தை அறிந்து பிழைக்கத் தெரிந்திருக்கவேண்டும்.இன்னும் குதிரை வேஷம் போட்டாலும் குரைக்கச் சொன்னால் குரைக்கத் தெரிந்திருக்கவேண்டும். அதைவிடுத்து முறைத்துக்கொண்டிருந்தால் இத்துறையில் முன்னேற முடியாது மூக்குடைபட நேரிடும்.மானுடத்தின் விடியலுக்கு மகுடி ஊதப்போனால் புகழ்வந்து புல்லாங்குழல் ஊதுகின்றதோ இல்லையோ சத்தியமாய் காலம் அவைகளுக்கு சங்கூதிவிடும்.எனவே, மக்களுக்காக குரல்கொடுத்து சிக்கலுக்குள் மாட்டி சீரழிந்து போகுமளவுக்கு யாரும் சிந்திப்பதில்லை.துணிவு வெறும் வார்த்தையாக இருக்கின்றதே தவிர வாழ்க்கைக்குள் கொண்டுவர முடிவதில்லை.அதனால் ஊடகங்கள் உண்மையை மட்டும் உரத்து பேசுவதாய் நாடகம் போடுகின்றன.உற்று நோக்கினால்  ஒவ்வொன்றுக்குள்ளும் ஒவ்வொறு அரசியல் இருக்கின்றது.சில அச்சம் காரணமாக அடக்கி வாசிக்கின்றன. ஏனையவை பல்லக்கு தூக்குகின்றன.இப்பொழுது சொல்லுங்கள் ஊடகங்கள் இங்கே வலுவாக இருக்கின்றதா?

3) உங்களுடைய நூலாக்கங்கள் பற்றிக் குறிப்பிட்டு அவை குறித்த விமர்சனங்கள் உங்களில் என்ன தாக்கத்தை உண்டு பண்ணின எனவும் கூறுங்கள்?

விண்ணைத்தாண்டி என் படைப்புக்கள் போவதாக இருந்தாலும் முதலில் அது என்னைத் தாண்டித்தான் போகவேண்டும்.அந்த வகையில் எனது படைப்புக்களின் முதல்வாசகனாகவும்,முதல் விமர்சகனாகவும் நானே இருக்கின்றேன்.நான் பொத்துவில் மத்திய கல்லூரியின் உயர்தர மாணவனாக இருக்கும் போதுதான் எனது இரண்டு கவிதை நூல்களும் வெளிவந்தன. 2001இல் வெளிவந்த 'விடைதேடும் வினாக்கள்' என்னை கடன்காரனாக்கியது.2002 இல் வெளிவந்த 'விடியலின் ராகங்கள் 'என்னை கவிஞனாய் மாற்றியது.ஸம்ஸம் இளைஞர் கழகத்தினால் வெளியிடப்பட்ட எனது கவிதை நூலுக்கு பொத்துவிலின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.பீ.ஏ.அஸீஸ் அவர்கள் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கிட்டின் மூலம் உதவி நல்கியிருந்தார் இவ் வேளையில் அவரை நான் நினைவுகூற விரும்புகின்றேன்.
நாம் எதையாவது எழுதினால் நாலுபேர் பாராட்ட வேண்டும் இல்லாவிட்டால் திட்டவாவது வேண்டும்.இரண்டும் இல்லையென்றால் எழுதாமலே இருந்துவிடலாம்என் கவிதை தொகுப்புக்களுக்கு விமர்சனங்களை விட பாராட்டுதல்கள்தான் அதிகம் கிடைத்திருக்கின்றன.எனினும் நான் பாராட்டுக்களை கேட்டு மயங்கி நின்றதில்லை.அவைகளை தாலாட்டுகளாகவே கருதி வந்திருக்கின்றேன்.நாங்கள் படைப்பு நிலத்தில் வேர்பாய்ச்சி நிற்பதற்கு விமர்சனங்கள்தான் நீர்பாய்ச்சுகின்றன இங்கு வழி சொல்லாமல் பழிசொல்லும் விமர்சகர்களும் இருக்கவே செய்கின்றார்கள்.விமர்சகர்களுக்கு போதிக்க தெரியுமே தவிர சாதிக்க முடிவதில்லை. நல்ல விமர்சனங்கள் எம்மை அழவைத்தாலும் விழவைக்காது என்றோ ஒரு எழவைக்கும் அதுதான் எனக்கு நடந்திருக்கின்றது.மூத்த படைப்பாளிகளாக இருந்தாலும் அன்போடு சொல்லும் விமர்சனங்களை அரவணைப்பேன் அகங்காரத்தோடு சொல்பவற்றை அடித்துவிரட்டிவிடுவேன்.சுருக்கமாய் சொன்னால் உண்மை விமர்சனங்களால் என்னை நான் செதுக்கிக்கொள்வேன்;இமற்றையவைகளை ஒதுக்கிக்கொள்வேன்.


4) இன்றைய சஞ்சிகைகளில் தரங்குறைந்த கவிதைகளைக் காணும்போது உங்கள் மனநிலை எப்படியிருக்கும்
ன்று கணிதத்தை விட கவிதையை விளங்குவது கடினமாய் இருக்கின்றது.புதுக்கவிதை என்ற பெயரில் சிலர் புலம்பல்களை அவிழ்க்கின்றார்கள்.கேட்டால் உலகத்தரம் வாய்ந்த படைப்பு அப்படித்தான் இருக்குமென்று பீற்றுகின்றார்கள்.வாய்க்கு வரும் வார்த்தைகளை ஓன்றன்பின ஒன்றாக ஒடித்துப்போட்டால் அதை கவிதை என்று இளையதலைமுறையினரில் ஒரு சிலர் நம்பிக்கொண்டிருக்கின்றார்கள்.தெருவுக்கு தெரு முளைத்திருக்கும் இத்தகைய காளான்களால் நல்ல கவிஞர்களின் பெயரும் நாறிக் கிடக்கின்றது.எனக்கு ஒன்றோடு ஒன்பதாகிப்போவதில் உடன்பாடில்லை.அதனால்தான் புதுமையென்னும் கவசத்தை அணிந்துகொண்டு மரபென்னும் போர்வாளை கையிலெடுத்தேன்.நான் மரபோடு கைகுலுக்கிக்கொள்வதால்தான் இன்று இருக்கின்ற இளையதலைமுறைக் கவிஞர்களில் இருந்து என்னால் வேறுபட்டு நிற்கமுடிகின்றது. மரபு என்பது அடித்தளம். இலக்கியத்தின் எத்தளத்திற்கு செல்வதாயினும் இத்தளத்தில் இருந்தே ஆரம்பிக்கவேண்டும்.அகரம் அறியாதவன் உகரத்தை உச்சரிக்கவே கூடாது.எட்டயபுரத்து கவிஞன் தொடக்கம் எங்கள் தேசத்தின் மூத்தகவிஞர்கள் வரை மரபு தெரியாமல் புதுமைக்குள் புகுந்தவர்கள் அல்லர்.அவர்கள் தம்முன்னோர்களைக் கற்று முத்துக்குளித்தவர்கள்.அதனால்தான் அவர்களால் முத்தமிழிழும் பிரவாகிக்க முடிந்தது.இற்றைவரை முழுநிலவாக பிரகாசிக்க முடிந்தது.எனவே,இளைய தலைமுறைப்படைப்பாளிகள் மரபு இலக்கியங்களை கசடற கற்றுக்கொள்ள வேண்டும். மூத்த படைப்பாளிகளின் அறிவுரைகளை பெற்றுக்கொள்ளவேண்டும்.அப்பொழுதுதான் வயதில் இளையவராக இருந்தாலும் எழுத்தில் முதியவராக எம்மால் மிளிர முடியும். காகிதச்சோலைகளில் மலரும் கவிதைப்பூக்களுக்கு காலம் கல்மாரி பொழிவதும் கல்வெட்டு செய்வதும் அவரவர் கவித்துவ ஆளுமையிலே அடங்கி இருக்கின்றது.மரபெனும் மகுடத்தை, பழந்தமிழ் கவிதைகளை,பழஞ்சோற்றைப்போல் பார்ப்பவர்களின் படைப்புக்களுக்கு எதிர்காலம் நல்ல சவப்பெட்டிகளை செய்துவைத்து காத்திருக்கின்றது.


5) இலங்கையில் இருக்கும் ஊடகங்கள் உங்களது பாடல்களுக்கு எந்தளவுக்கு களம்கொடுக்கின்றன
ம்மவர்கள் இங்கே இருக்கின்ற கலைஞர்களிடம் வைரமுத்து இளையராஜா ஏ.ஆர்.ரஹ்மான் போன்றோரின் அளவுக்கு எமது படைப்பு இருக்கின்றதா என்றே தேடுகின்றனர். அவர்களது உயரத்துக்கு எமது கலைஞர்களையும் கொண்டு வருவோம் என்று முனைவதில்லை.இனிமேலாவது எமது கலைஞர்கள் பற்றி எம்மவர்கள் சிந்திக்கவேண்டும்.இதனை ஒட்டுமொத்த இலங்கை கலைஞர்களின் உள்ளக் குமுறலாகவும்எடுத்துக்கொள்ளலாம்.
வானொலி,தொலைக்காட்சி,பத்திரிகை,இணையம் போன்ற ஊடகங்கள் எமது கலைஞர்களின் படைப்பாளிகளின் திறமைகளை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கின்ற வள்ளங்கள்.இங்கு வள்ளங்கள் நிறையவே இருக்கின்றன நல்ல உள்ளங்கள் அரிதாகவே கிடைக்கின்றன.இந்த வேளையில் எனது பாடலுக்கு களம்கொடுத்த வசந்தம்FM,பிறைFM,வெற்றி FM,தென்றல்,லண்டன் ஐ.பிஸி,இணைய வானொலிகள் அனைத்தையும் நினைவுகூற விரும்புகின்றேன்.கடையில் இருக்குக்கும் கடதாசி பூக்களுக்கு காசு கொடுக்கும் எம்மவர்கள் முற்றத்தில் இருக்கும் மல்லிகைப்பூக்களுக்கு முகம் கூட கொடுப்பதில்லை.உள் நாட்டின் அசல்களை காட்டிலும் வெளிநாட்டின் நகல்களுக்குத்தான் அதிகம் கிராக்கி இங்கு.இந்த நிலை தொடர்ந்தால் எமது தேசத்தின் கலை நதி வற்றிவிடும்.இலக்கிய செடிகள் செத்துவிடும்.எனது பாடல்கள் மட்டுமல்ல இலங்கையில் வெளிவருகின்ற எந்த பாடலையும் இவர்கள் கண்டுகொள்ளவதில்லை.தென்னிந்திய சினிமா பாடல்கள் வெளிவந்தால் தேடித்தேடி தரவிரக்கம் செய்து ஒலிபரப்பம் வானொலிகள் நாங்கள் தேடிப்போய் கொடுத்தலும் கண்டுகொள்வதில்லை.ஆனால் சகோதர மொழி இசைத்துறையை பொறுத்தவரையில் இந்த நிலை இல்லை.இன்றைய சகோதர மொழி இசைக்கலைஞர்களின் மாபெரும் வளர்ச்சியில் அவர்களது ஊடகங்கள்தான் அதிகமான செல்வாக்கு செலுத்துகின்றன.ஒரு ஊடகத்தின் போட்டி நிகழ்ச்சி மூலம் ஒருவர் அறிமுகமாகினால் மற்றைய ஊடகங்கள் அவரை புறக்கணிக்கின்றன.தென்னிந்தியாவில் இந்த நிலை இல்லை அவர்கள் கலைஞர்களை கலைஞர்களாகவே பார்க்கின்றனர.அந்த கலைஞருக்கு பின்னால் இருக்கும் அரசியலை தேட முனைவதில்லை.அதுதான் அங்கே சாதாரண கலைஞர்களும் சாதனை வீரர்களாக மாறிவிடுகின்றார்கள்.எனவே,இந்த வரட்டு நிலையிருந்து வளர்ச்சி நிலைக்கு செல்ல எமது ஊடகங்கள் முன்வரவேண்டும்.எனவே,எம்மண்ணிலே மாற்றங்கள் மலரவேண்டுமானால் நாற்றங்கள் உலரவேண்டுமானால்,ஏற்றங்கள் வளரவேண்டுமானால் இலங்கை எங்கள் தேசம் அது என்றும் எங்கள் சுவாசம் அந்த மண்ணில் தோன்றும் புற்கள் கூட பூக்கள் போன்று வாசம் என்று நேசம் கொண்டு எங்கள் படைப்பு பயிர்களுக்கு நாங்கள் பாத்திகட்டவேண்டும்.எமது நிலத்தில் நாம் விதைகளை தூவாமல் அடுத்தவர் பழத்தில் பல்லைப்பதிப்பதை நாங்கள் நிறுத்தவேண்டும் எம்மை நாம் திருத்தவேண்டும். வெளிச்சத்துக்கு மட்டும்விளக்கு பிடிக்க முனையும் ஊடகங்கள் காய்த்தல், உவத்தல், குத்தல்,வெட்டல் இன்றி 'இருட்டின்'மீது தமது வெளிச்சத்தை பாய்ச்ச முயன்றால்தான் வளர்ந்துவரும் இளைய தலைமுறை கலைஞர்களுக்கு விமோசனம் கிட்டும்.அவர்கள் குரல்களும் எட்டுத்திக்கும் எட்டும். இல்லாவிட்டால் வெங்காயம் நட்டால் வெடிகுண்டுதான் முளைக்கும்.


06. இந்த வரும் சிறந்த பாடலாசிரியருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது அது பற்றி கூறுங்கள்?
சை இளவரசர்கள் நிகழ்ச்சி மூலம் என்னை பாடலாசிரியனாக அறிமுகப்படுத்தி அங்கீகாரம் கொடுத்த சக்தி தொலைக்காட்சிக்கு முதலில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.அவர்கள் போட்ட அத்திவாரத்தில்தான் எனது பாடலாசிரியர் என்ற கட்டடம் எழும்பி நிற்கின்றது.தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் நடாத்தப்பட்ட வியர்வையின் ஓவியம் கலை விழாவில்புறப்படு தோழா வண்ணப்பூக்களாய் உலகை மாற்றலாம் என்ற பாடலுக்காக இந்த விருது வழங்கப்பட்டது.நம் நாட்டின் இளைய தலைமுறை இசையமைப்பாளர்களுள் ஒருவரான டிரோன் பெர்ணான்டோ இந்த பாடலுக்கு இசையமைத்திருந்தார்.இதில் இன்னுமொன்றை குறிப்பிட்டாக வேண்டும்.இந்தப் போட்டியில் என்னால் சமர்ப்பிக்கப்பட்ட எங்கோ பிறந்தவளே என்ற பாடலும்; போட்டியில் முதலிடத்துக்கு தெரிவாகி இருந்தது. இந்தப்பாடலுக்கு இசையமைத்திருந்தார் இசை இளவரசன் கந்தப்பு ஜெயந்தன்.விரைவில் வெளிவர இருக்கும் அவரின் யாழ்தேவிஇறுவட்டிலே இந்தப்பாடலும் இடம்பெற்றுள்ளது.காதல் பாடல் என்றபடியால் எங்கோ பிறந்தவளே பாடலை தவிர்த்து சமூக எழுச்சியை பேசுகின்ற புறப்படு தோழா பாடலை முதலாமிடம் என்று அறிவித்திருந்தார்கள்.
2008ம் ஆண்டு இசை இளவரசர்கள் நிகழ்ச்சியில் பாடலாசிரியராக தெரிவு செய்யப்பட்டு போட்டி நிமித்தம் சென்னை சென்றபோது இயக்குனர் ஏ.வெங்கடேஷ் அவர்கள் கதைச்சூழல் சொல்ல என்னால் ஓரிரு மணிநேரத்துக்குள் எழுதப்பட்டது எனது எங்கோ பிறந்தவளே.பாடல.இந்த பாடலைப் பற்றி பாடலாசிரியர்களான பா.விஜய்,நா.முத்துக்குமார்,விவேகா,சினேகன் ஆகியோர் நிறையவே சிலாகித்து பேசியிருந்தார்கள்.எனினும்துரதிஷ்ட வசமாக எமது ஹம்ஸத்வனி குழு இசையமைப்பாளரின் போதமையினால் இப்பாடல் பாட்டாகமல் பட்டுப்போனது.பின் இரண்டு வருடங்களுக்கு பிறகு,இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் அவர்களால் நிமிடங்களுக்குள் இசை அமைக்கப்பட்டு பாடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் கடல் கடந்தும் வரவேற்பு பெற்றுள்ளது வியப்பை தருகின்றது.பாடலை கேட்டுவிட்டு கடல் கடந்தும் தமிழகம் மற்றும் ஐரோப்பிய நண்பர்கள் பலரும் மின்னஞ்சல மூலமாகவும் தொலைபேசி வாயிலாகவும் தமது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.லண்டன் ஐ.பி.சி. வானொலியின் பாடல் தரப்படுத்தலில் ஏகோபித்த ரசிகர்களின் வாக்குக்கு இணங்க இரண்டுவாரம் எமது பாடல் இரண்டாமிடத்தில் இருந்துள்ளது.இது எமது இலங்கை கலைஞர்களுக்கும் எமது மண்ணுக்கும் கிடைத்த சிறப்பாகும்.

7) வசந்தம் தொலைக்காட்சியில் உங்கள் வகிபாகம் என்ன?
சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பினால் புதிய உலகின் பூபாளராகமாக 25.06.2009ம்  அன்று பதியமிடப்பட்ட வசந்தம் தொலைக்காட்சி குறுகிய காலப்பகுதிக்குள் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளையடித்து தமிழின் சுவாசமாக தமிழ்பேசும் மக்களின் விலாசமாக தடம்பதித்து வருகின்றது.வசந்தம் தொலைக்காட்சியின் முகாமையாளராக திரு.குலேந்திரன் முருகேசு அவர்களும் செய்திப்பிரிவு பொறுப்பதிகாரியாக திரு.இர்பான் முஹம்மட் அவர்களும் கடமையாற்றுகின்றனர்.நான் நிகழ்ச்சித் தொகுப்பாளராவும்,தயாரிப்பாளராவும் இயங்கி வருகின்றேன்.அனுபவமும்,ஆளுமையும் உள்ள இளையதலைமுறையினரின் கூட்டுமுயற்சியினால் பல்வேறு நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கிவருகின்றோம்.இலைமறைகாய்களாக இருக்கின்ற ஆற்றலுள்ளகலைஞர்களையும் இளைஞர்களையும்,படைப்பாளிகளையும் இனம்கண்டு வாய்ப்புக்களை வழங்கி வருகின்றோம்.எமது சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களும் ரசிக்கும்படி எமது நிகழ்ச்சிகளை  நிரல்படுத்தியிருக்கின்றோம். எமது தொலைக்காட்சியின்; நேரடி நிகழ்ச்சிகளை http://www.vasantham.lk/ என்ற இணையத்தளம் ஊடாக உலகெங்கும் உள்ள தமிழ் ரசிகர்கள் கண்டுகளிக்க முடியும்.மேல் மாகாணம் மற்றும் வடக்கில் மட்டும் ஒளிபரப்பாகிவரும் எமது அலைவரிசையை  நாடுபூராவுமுள்ள தொலைக்காட்சி ரசிகர்கள் விரைவில் கண்டுகளிப்பதற்குரிய பூர்வாங்க ஏற்பாடுகள் முடியும் தருவாயில் உள்ளன.அதன்பின் எமது அடுத்த கட்ட இலக்காக இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் சர்வதேச தமிழ் தொலைக்காட்சியாக எமது தொலைக்காட்சியை மாற்றுவதாகும்.


08.உங்களுக்கு மிகவும் பிடித்தமான கவிஞர் யார்? அவரின் மீதான பிடிப்பிற்கு காரணம்?
னக்கு முன்வாழ்ந்த படைப்பாளிகளின் படைப்புக்களை வாசிக்க,நேசிக்க முடியாதா ஒருவரால் நல்ல படைப்பாளியாக மிளிர முடியாது. ஒரு கவிஞன் முதலில் நல்ல வாசகனாக இருக்கவேண்டும்.ஒரு கலைஞன் முதலில் நல்ல ரசிகனாக இருக்கவேண்டும்.வாசிப்பு உள்ளவர்களுக்கு வார்த்தை வாலாயப்பட்டுவிடும்.வார்த்தை வாலாயப்பட்டால் வாவென்று அழைக்கு முன்பே கவிதைகள் வந்து வாலாட்டி நிற்கும்.நான் புதுக்கவிதைமரபுக்கவிதை,நவீன கவிதைஇ பின் நவீனம் என்று பாகுபாடு இல்லாமல் அனைத்துவகையான படைப்புக்களை வாசிப்பேன் என்றாலும் எப்போதும் தனித்துவமாவே யோசிப்பேன்.பாரதி, பாரதிதாசனுக்கு பிற்பாடு நான் அதிகமாக நேசிப்பது உணர்ச்சிக் கவிஞர் காசியானந்தன் அவர்களைதான்.அவரை தமிழ் ஈழத்தின் பாரதி என்று சொன்னால் கூட தவறில்லைஅவர் எழுத்துகள் எளிமையானவை ஆனால் ஒவ்வொன்றும் வலிமையானவை. அந்த  உணர்ச்சிக் கவிஞனின் உண்மையுள்ள கவிதை என்றென்றும் உயிர்வாழும் அதன் முன் தோற்றுவிடும் எதிரியின் போர்வாளும்.


09.புதுக் கவிதைகள் மரபுக் கவிதைகளை நீங்கள் பார்க்கும் விதம் குறித்துக் கூறுங்கள்

நீங்கள் இதைக்கேட்கும் போது...
பழமை கிடந்து மனதுள் விழுந்து
பயிராகி
செழுமை நிறைந்து புதுமை குழைந்து
விளைவாகி
அழகும் பொழிந்துஅறமும் புதைந்து
கலையாகி
இளமைக்கயிற்றில்கனவைத் தொடுத்தல்
கவியாகும்
'கவிதை' என்ற தலைப்பில் அமைந்த கவிஞர் நீலாவணன் புனைந்த இந்தக் கவிதைதான் எனக்கு நினைவில் வருகின்றது.என்னைப் பொறுத்தவரையில் மரபிலே புதுமையை விதைக்கவேண்டும்.புதுமையுள் மரபினை புதைக்கவேண்டும்; இரண்டும் கெட்டு கவிதை போல் அரிதாரம்பூசி நடிக்கின்றவற்றை ஓடஓட உதைக்கவேண்டும்.எனினும் மரபுக்கவிதையை சிறுபிள்ளைத்தனமாக எழுதுகின்ற மூத்த கவிஞர்களும் புதுக்கவிதையை காத்திரமாக படைக்கின்ற இளைய கவிஞர்களும் இங்கு இல்லாமலில்லை.மரபு என்பது கவிதையின் ஆணிவேர் புதுக்கவிதை என்பது அதில் தோன்றும் பூக்கள்தான். ஆணிவேர் இல்லாமல் பூக்கள் பூக்குமா சொல்லுங்கள்..

10.) தாங்கள் பெற்ற விருதுகள் பற்றிக் குறிப்பிட முடியுமா? 
ப்பொழுதும் நான் எழுத்தைத்தான் சுவாசிப்பவனாகவும் சுவாசிப்பதைத்தான் எழுதுபவனாகவும் இருக்கின்றேன்.தரிசுகளுக்கு கிடைக்கும் பரிசுகளால் தரமற்ற காகிதங்கள் தலைப்பாகை சூடிக்கொள்ள வரம்பெற்ற காவியங்கள் வாய்பார்த்து நிற்கின்றன.இதனை அடிநாதமாக கொண்டு என்னால் எழுதப்பட்ட விருதுகள் பெறும் எருதுகள் கவிதை சர்வதேச தமிழ் இலக்கிய மட்டத்திலும் சலசலப்பை ஏற்படுத்தியது.போலிகளுக்கு கிடைக்கும் இத்தகைய பொய் அங்கீகாரங்களைத்தான் எனது கவிதையில் அவ்வாறு கேலி செய்திருந்தேன்.எனவே.உனக்கு நாளை சூட்டுகின்றேன் எனக்கு இன்று சூட்டு என்று திட்டம் போட்டு திருடப்பட்டதல்ல நான் பெற்ற விருதுகள் அத்தனையும் என் எழுத்தின் கழுத்தில் வீழ்ந்த பூமாலைகள்.என் எண்ணங்களுக்கு கிடைத்த கிண்ணங்கள்.அவைகளை ஆன்றோர்கள் என் ஒரு சில படைப்புக்களுக்கு வழங்கிய அங்கீகாரமாகவே கருதுகின்றேன்.எனினும் இனிவரும் என் ஒட்டுமொத்த படைப்புக்களின் ஆவணமாகஒருபோதும் கருதியதில்லை.
தேசியமட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதை போட்டிகளில் எட்டுக்கும் மேற்பட்ட தடவை வெற்றியீட்டியுள்ளேன்.அஸ்ரப் ஞாபகார்த்த மன்றத்தினால் அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் முதலாமிடம் பெற்றதற்காய் 2001.09.16 அன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த மகாநாட்டு மண்டபத்தில் வைத்து ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது.அந்த விருதினை அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க எனக்கு வழங்கிவைத்தார்.2003ம் ஆண்டு பேராதனை பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் பவளவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் முதலாம் இடம்பெற்றதற்காய் தங்கப்பதக்கம் வழங்கி கௌரவித்தார்கள்.இது தவிர அகில இலங்கை தமிழர் நற்பணி மன்றத்தினால் நடாத்தப்பட்ட சொல்லோவியப்போட்டி(2003), விபவியின் இளம் எழுத்தாளருக்கான படைப்பிலக்கிய போட்டி(2003),பேராதனைப் பல்கலைக்கழக்தின் தமிழ் சாஹித்தியவிழாவை முன்னிட்டு நடாத்தப்பட் கவிதைப்போட்டி(2002),தென் கிழக்கு பல்கலைக்கழக தமிழ் சங்கத்தினால் நடாத்தப்பட்டகவிதைப்போட்டி(2008),சக்தி தொலைக்காட்சியினால் நடாத்தப்பட்ட இசை இளவரசரகள் போட்டி (2008) ,2007 ஆம் ஆண்டு பிரான்சில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் ஞாபகார்த்த மன்றத்தினால் நடாத்தப்பட்ட சர்வதேச கவிதைப்போட்டி போன்றவற்றில் கலந்து கொண்டு இரண்டாம்,மூன்றாம் இடங்களை பெற்றுள்ளதோடு சிறப்பு இடங்களையும் பெற்றுள்ளேன். அண்மையில் தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட வியர்வையின் ஓவியம் கலை இலக்கிய போட்டிகளில்கவிதைப்போட்டியில் இரண்டாம் இடத்தையும் பாடலியற்றல் போட்டியில் முதலாமிடத்தையும் பெற்றுக்கொண்டேன்.பாடலியற்றல் போட்டியில் முதலாமிடம் பெற்றதற்காய் வியர்வையின் ஒவியம் கலை விழாவில் 2010ம் ஆண்டுக்கான சிறந்த பாடலாசிரியருக்குரிய விருது வழங்கப்பட்டுள்ளதுஅது என் பாட்டுக்கு கிடைத்த விருது அல்ல அந்த பாடலை எழுதுவதற்காகவும் நான் பட்ட பாட்டுக்கு கிடைத்த விருதாகவே கருதுகின்றேன் இத்தகை விருதுகளின் நிழலில் நான் இளைப்பாறப்போவதில்லை. தொடர்ந்து ஓடிக்கொண்டிருப்பேன் என் கிராமத்தின் நதியைப்போல......


                          நன்றி
*ஜீவநதி கலை- இலக்கிய சஞ்சிகை.
*ஜிவநதி நேர்காணல்கள்.





ஞாயிறு, 30 ஜனவரி, 2011

கண்ணோடு கலந்திட்ட காதல் பூ!


ண்ணோடு கலந்திட்ட காதல் பூவே-என்னை
          கனிவோடு நீபார்த்து கவிதைபேசு!
என்னோடு நீவந்தால் என்றன் நெஞ்சே-என்றும்
         உன்னோடு வாழ்வேன்நான் காசுதூசு..!

படிப்போடு தானுள்ளேன் பவளத்தேரே-உயிர்
         துடிப்போடு தானுள்ளேன் துவண்டு போகேன்-உள
வெடிப்போடு இன்றுன்னால் வெந்து போனேன்-நீ
          வெறுப்போடு பார்க்கின்றாய் நொந்துபோனேன்..!

வளமோடு வாழ்கின்ற வண்ணப்பூவே-வண்டு
        வடிவோடு வந்தாலா இதயம் தேடும்..?
நலமோடு வாழ்கின்ற நங்கையுன்னை-வெள்ளை
        நரையோடு வாழ்ந்தாலும் இதயம்பாடும்

ஓடாத நதியென்னை ஓடவைத்தாய்-எவரும்
         பாடாத பாடல்கள் பாடவைத்தாய்-பெண்ணை
நாடாத என்நெஞ்சை நாடவைத்தாய்-இந்த
         நரகத்தில் பின்னேயேன் வாடவைத்தாய்

கூடாத கூட்டத்தில் கூடினேனா-எவரும்
           பாடாத பாடல்கள் பாடினேனா
தேடாத வழியில்யான் தேடினேனா-ஏன்
          வாடாத என்னைநீ வாட்டுகின்றாய்.?

விதியோடு விளையாடி பட்டுப்போனேன்-உன்
        விழியோடு விளையாடி கெட்டுப்போனேன்
சதியோடு விளையாடி சரிந்துபோனேன்-அடி
         'சல்வாரே' உன்னாலோ எரிந்துபோனேன்.!!




                                  நன்றி.
*தினகரன் வாரமஞ்சரி -2011.01.30
*கவிதைப்பூங்கா(கவிஞர் ரஷீத் எம். ரியாழ்)

உயிர்வண்டு..!


யிர்வண்டு உனைக்கண்டு ரீங்காரம் பாடும்!
உணர்வெங்கும் கவிபொங்கி தேனாக ஓடும்!
பயிர்காடு நிலம்யாவும் பனிதின்னும் நேரம்!
பசியாடும் வேளையிலும் கவியென்னுள் ஊறும்!

வளமான தேன்கவியே வாசமுடன் வாழும்!
வாழ்வெடுத்து பேசாத பாட்டொருநாள் வீழும்
உளமார நான்பாடல் பாடுகிறேன் நாளும்!
உணர்வுகளை உசுப்புமவை உயிர்த்தமிழை ஆளும்!

நன்றி*சுடர்ஒளி
*தித்திக்குதே







அடிநெஞ்சில் நின்றிருந்தாய் மானாய் ...!


 டிநெஞ்சில் நின்றிருந்தாய் மானாய் -அடியே
அத்தனையும் நீமறந்து போனாய்...
வெடிநெஞ்சில் பட்டவன் போலானேன் -கொடும்
வெந்தழலில் நீறாகி போனேன்.........

சில்லென்ற தென்றல்வரும் காலை -நீ
சிரிப்புதிர்த்து பள்ளிசெல்லும் வேளை...
வள்ளென்று நாய்குரைக்கும் நேரம் -நான்
வாழ்ந்திருப்பேன் உன்னினைவின் ஓரம்...

வேலிக்கு மேலாலெட்டிப் பார்ப்பாய் -என்
வேதனையை புன்னகையால் தீர்ப்பாய்..
கேலிபலர் எனைச் செய்தபோதும்-அடி
கேள்கிளியே உன்நினைவே மோதும்.....

காண்பவரை மயங்கவைக்கும் அழகி...
காதல்கொண்டு என்னுடன்நீ பழகி
நீயின்றி நான்வாழேன் என்றாய்-பின்
தீயின்மேல் எனைவீசிக் கொன்றாய்......

கடற்கரையில் கைகோர்த்து நடந்தோம்
கால்நூற்றான்டை கால்நடையில் கடந்தோம் -எம்
உடல்கறையை காணாததும் உண்மை-அதை
உணர்த்தியதா கணவனுக்குன் பெண்மை..?

         நன்றி
*சுடர்ஒளி
*தினகரன் கவிதைப்பூங்கா (20.3.11)

தோல்வி..!


தோ
ல்விகளை
தோற்கடிக்கப் பழகு-
இன்றேல்
உன்தோள்மீது ஏறிநிற்கும் உலகு
ஆணுக்கு அழுவதுவா அழகு ?-
இன்றே
அனலாகு வணங்கி நிற்கும் உலகு....

                                       நன்றி
*தித்திக்குதே-(வசந்தம் தொலைக்காட்சி)

மாய்கின்ற மாநிலத்தின் மாடு...



குண்டுமழை பொழிகிறது
            கண்டு மனம் கிழிகிறது
துண்டுதுண்டாய் போனதெங்கள் தேசம்-யுத்தத்
              தூக்கினிலே தொங்குதெங்கள் நேசம்

துப்பாக்கி அழுகிறது
             'தோட்டாக்கள்' சிரிக்கிறது
தப்பாட்டமாடுகிறீர் ஏனோ..?-உங்கள்
              தலையெங்கும் களிமண்ணே தானோ..?

வேதனைதான் அளித்தீர்கள்
            வேறென்ன கிழித்தீர்கள்..?
சாதனைகள் செய்கின்றீர் நாளும்-பேய்கள்
            சரித்திரத்தில் உம்பெயரும் வாழும்!

ஆயுதத்தை தூக்குபவர்
            அடித்துஉயிர் போக்குபவர்
மாய்கின்ற மாநிலத்தின் மாடு-அவரை
            மானிடராய் மாற்றிவிடப் பாடு!!

நன்றி.
*சுடர்ஒளி

நாளைய உலகம் நமக்காக விடியட்டும்....


 புதிய சிறகுகள்-2011' தேசிய கலைஞர்கள் ஒன்றுகூடல் நிகழ்வை முன்னிட்டு 'லங்கா' பத்திரிகை நிறுவனத்தினரால் நடாத்தப்பட்ட தேசிய மட்ட கவிதைப்போட்டியில்  சிறப்பிடம்பெற்ற கவிதை.இக்கவிதை பட்சிகளின் உரையாடல் கவிதை நூலில் இடம்பெற்றுள்ளது.
 பூலோக சொர்க்கம் என்று
புகழப்பட்ட பூமி
ரத்தினத்துவீபம் என்று
ரசிக்கப்பட்ட
தேசமானது
நாசமானது
மனங்களுக்கு
பித்தம் பிடித்தபோது
மனிதர்களுக்குள்
யுத்தம் வெடித்தபோது....

மனம் முரண்பாடு கண்டபோது
இனமுரண்பாட்டை கண்டோம்
இனமுரண்பாட்டினால்
இருண்ட யுகத்துக்குள் நின்றோம்.
எங்களை நாங்களே
கொன்றோம்....
ஆனால்
மனிதர்கள் நாங்கள் என்றோம்.

மூன்று தசாப்த காலமாக
முகவரியை தொலைத்தோம்
முகாரிராகம் இசைத்தோம்.
மூக்குடைபட்டு
மூர்ச்சையாகி கிடந்தோம்
மூவின மக்களாகிய நாங்கள்...

யுத்தத்தீ எழுந்தபோது
ஷெல்லடிகள் விழுந்தபோது
துப்பாக்கி அழுதபோது
தோட்டாக்கள் உழுதபோது

பூக்கள் பூத்து
பூரித்துகிடந்த பூமியில்
புழுக்கள் நெழிந்தன...
எங்கள் குருதியால்
வங்கக் கடலே
பொங்கி வழிந்தன...
ஒரு அழகிய தேசம்
அழுகிய தேசமாய் காட்சிகொடுத்தது....
நாங்கள் வாழ்வது
ஈழத்திருநாட்டிலா
ஆபிரிக்கா காட்டிலா
என்று அங்கலாய்த்தோமே தவிர
மூவின மக்களும்
முகிழ்த்துக்கிடந்த
சிக்கலை நீக்கி
முக்கலைப்போக்கி
புரிந்துணர்வு எனும் கடலுக்குள்
மூழ்கி
புன்னகை முத்துக்களை
குளிக்கவில்லை
குருதியில்தான்
தினம் தினம்
குளித்துக் கொண்டிருந்தோம்...

நாம் எல்லோரும்
சேர்ந்துதான்
பிரியத்தை
கல்லறையாக்கினோம்
பிணங்களை சில்லறையாக்கினோம்
நேசத்தை சிறையறைக்கினோம்
பாசத்தை வரையறையாக்கினோம்

நாங்கள் ஒற்றுமை எனும் கயிற்றை
ஒருமித்து பிடித்திருந்தால்
வேற்றுமை எனும் வேதாளம்
போர் எனும் முருங்கைமரத்தில்
ஏறியிருக்காது...
எம்தேசம் நாறியிருக்காது....

பட்டது போதும்
எம்மைநாமே
சுட்டது போதும்...
வசந்தத்தை தேடும்
வானம்பாடிகளே
ஒன்று படுவோம் வாருங்கள்..

இனமதங்கள் நாம் கடந்து
தாய் நாட்டை நேசிப்போம்
இருக்கும் வரை
இறக்கும் வரை
தமிழ்மொழியை சுவாசிப்போம்....
நாளைய உலகம்
நமக்காக விடியட்டும்....

                       நன்றி *'புதிய சிறகுகள்-2011'  ..
*பட்சிகளின் உரையாடல் (கவிதை நூல்)

தலைப்பில்லா கவிதைகள்..!


 இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தால் தேசிய மட்டத்தில் கவிஞர்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் இக்கவிதை முதலாம் இடம் பெற்றுள்ளது . இக்கவிதை அடங்கிய நூல் 'அடையாளம்' எனும் பெயரில் தென்கிழக்கு பல்கலைக்கழக வெளியீடாக வெளிவந்துள்ளது.

வாவியை கடப்ப தென்றால்
             வள்ளமொன் றிருந்தால் போதும்..
ஓவியம் வரைவ தற்கு
             ஓரிரு வரைகள் போதும்
ஆவியை ஆட்சி செய்யும்
             அரசரை; மக்கள் நெஞ்சை
கூவியே விழிக்கச் செய்த
            குயிலினை; குறிஞ்சிப்பூவை...


காவியம் பாடு தற்கு
          கவிவரி போதா தெனவே
நோவினை தந்து; தலைவர்
          நோக்கினை சாம்பர் செய்த
தாவிடும் குரங்கு மாரை
         தலையில்லா தலைவர் மாரை...
சாவியை தொலைத்துவிட்டு
          சாமரை வீசு வோரை...

கேவிநாம் அலறும் போது
           'கேக்குண்டு' வாழு மந்த
பாவிகள் பற்றித்தான் யான்
             பாவினை ஏந்தி வந்தேன்..
காவிகள் வென்றால் கூட
            கவலைநான் கொள்ளேன் 'எந்தன்
பூவிலே உள்ள தேனை
           புரிந்திட காலம் செல்லும்....'.


(வேறு)

தென்கிழக்கின் பொன்விளக்கு என்றவர்க்கு
               தேனோடும் வார்த்தைகளால் கோலம் போட்டு
நின்றிருக்கும் காலமல்ல; நிமிரச் செய்த
                நிமலனவர் இருந்தாலும் ஏற்கமாட்டார்....
புண்களுக்கு மருந்திடுவோம்; பூசல்விட்டு
                புன்னகைப்போம்; புரிந்துணர்வை முளைக்கச் செய்வோம்...!
கண்களுக்குள் இருக்கின்ற கவிதை அஸ்ரப்
              கனவுகளை நனவாக்க முயற்சி செய்வோம்...!

அன்று,மஹான் காந்தியைப்போல் அஸ்ரப் வாழ்ந்து
            அனைத்துஇன மக்களையும் அணைத்துச் சென்றார்..!
தின்றுவிட்டு தூங்காதீர்; சமூகமொங்க
            திருந்திடுவீர்; திக்கெங்கும் மரங்கள் செய்வீர்....
ஒன்றுபட்டு வென்றிடுவீர்;பிரிந்திடாமல்
            ஒற்றுமை யெனும் கயிற்றை பற்றிக்கொள்வீர்...!
என்றாரே; நடந்தோமா..? நாறினோமா..? அற்ப
            எச்சிலைக்காய் கட்சிபல ஆக்கினோமே....


இன்றெங்கள் இழிநிலையால் நடந்ததென்ன....?
         இடிவிழுந்த மரங்களைப்போல் இருக்குறோமே....
பொன்னையர்கள் என்றெம்மை கீழோரெண்ணி
          பொறிவைத்து போகின்றார்; ஆனால் நீங்கள்
கண்ணயர்ந்து இருக்கின்றீர் எங்கள் மண்ணை
          களவாடும் கழுதைகளை உதைத்து தள்வீர்
கொன்றிடுவீர் சுயநலத்தை அஸ்ரப் போன்று
          கொதித்தெழுவீர் எம்வலியை எடுத்துச் சொல்வீர்

                                               (வேறு)

தலையெழுத்தை தலைகீழாய் எழுதிவிட்ட ஆண்டவனே
           தந்துவிடு நல்வாழ்வை எமக்கு!-'தங்கத்
தலைவரினை' இழந்துவிட்டு தவிக்கின்ற 'எம்சமூகம்'
           தலையிழந்து முண்டமெனக் கிடக்கு!

தலைவர்நாம் என்றவர்கள் தறுதலைகள் முன்னாலே
           தலைகவிழ்ந்து நிற்கின்றார் எதற்கு-?அவர்
தலையாட்டி பொம்மைகள்போல் தனித்துவத்தை விட்டுவிடின்
            தருவாரே சிலஎலும்பு அதற்கு!

தலையில்லாத் தலைகளினை தலைவரென நினைத்ததற்காய்
            தலையிடிதான் எங்களுக்குப் பரிசு!-பதவிக்காய்
தலைசொறிந்து பல்லிளிக்கும் தலைவர்களால்
            தடுமாறும் எம்வாழ்க்கை தரிசு!

தலைதடவி கண்களிலே கண்கெட்டோர் கைவைக்க
            தலையணையில் எம்தலைகள் இருக்கு!-தங்கள்
தலைதப்பி னால்போதும் என்கின்ற கோழையரை
            தேர்ந்தெடுத்த நாங்கள்தான் கிறுக்கு!

தலைப்பிறையை மேகத்தால் தகர்த்தெறிய முடியாது
            தலைவர்களே கொண்டிடுவீர் ஒப்பு!-உங்கள்
தலைகளினை காப்பாற்ற கண்ணிருந்தும் குருடர்களாய்
            தவறுகளை பார்த்திருத்தல் தப்பு!

தலையில்லா முண்டங்களாய் மாறிவிட்ட எம்மவர்க்கு
            தலையாக ஒருதலைவன் எழுவான்!-அவன்
தலைவரவர் சுவடுகளில் தயங்காமல் நிதம்நடக்க
            தளையொடிந்து சிரிக்குமெங்கள் எழுவான்!!

                                                              நன்றி
*அடையாளம்(இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்ட கவிதை நூல்)



இழுத்துவைத்து அறுப்போம்!



மிழை தமிழாக உச்சரிக்கவேண்டும்-அதன்
தலையறுக்க வருபவரை எச்சரிக்கவேண்டும்...…
எண்திசையும் எம்தமிழை எத்திவைக்கவேண்டும்..-அதை
எரிக்கவரும் கழுத்துக்கு கத்திவைக்கவேண்டும்...

குழந்தைநாவில் இனியதமிழை தொட்டுவைக்கவேண்டும்-அதை
குறையிலாமல் பேசும் வாயில் லட்டுவைக்கவேண்டும்...
எதிரிதமிழில் ஏசுறானா விட்டுவைக்கவேண்டும்-தமிழன்
தமிழில் பேசக் கூசுறானா சுட்டுவைக்கவேண்டும்...!!

இன்றுமுதல் எம்மொழியில் பற்றுடனே இருப்போம்-அதை
இழிந்ததென்று சொல்லும்நாவை இழுத்துவைத்து அறுப்போம்!
உயிரைகேட்டு நின்றால்கூட உடனேநாங்கள் கொடுப்போம்-ஆனால்
உயிர்தமிழை அழிக்கவரின் தலையைநாங்கள் எடுப்போம்..!

                               நன்றி.
*வெளிச்சம்FM
*தித்திக்குதே-வசந்தம் தொலைக்காட்சி

சனி, 29 ஜனவரி, 2011

அத்தனையும் உன்குற்றம்....

தழோரப் புன்னகையோ
இதயத்தைக் கைப்பற்றும்
உன்னோரப் பார்வைகளால்
உள்நெஞ்சில் தீப்பற்றும்

பார்வைகளால் பலபாடம்
பலதடவை நான்கற்றும்
உணர்வெல்லாம் உன்னோடு
உணர்விழந்து ஊர்சுற்றும்

நட்பிடத்தில் காதல்வந்து
நட்பென்று பூச்சுற்றும்
நட்பொருநாள் கர்ப்பமுற்ற
நடுக்கத்தில் தலைசுற்றும்....

காதலிக்கும் வேளையிலே
கனவினிலும் தேன்கொட்டும்
அத்தனையும் கனவானால்
அடிநெஞ்சில் தேள்கொட்டும்

மயங்கவைத்து மறைவதுவா
மல்லிகையே உன்திட்டம்
ஆசையெலாம் அரைநொடியில்
ஆயிடுமா தரைமட்டம்...?

உன்னுயிரை நீ வெறுத்தால்
உனக்கும்தான் பெறும்நஷ்டம்
ஆழ்மனதைச் சொல்லிவிட்டேன்
அதற்குப்பின் உன்னிஷ்டம்

கன்னியுனை தேடியது
கண்களது குற்றமன்று
கவிதைகளைப் பாடியது.
கவிஞனது குற்றமன்று

அழகை படைத்தளித்து
அதைரசிக்க விழிபடைத்து
ஆட்டிவைக்கும் ஆண்டவனே
அத்தனையும் உன்குற்றம்...


           நன்றி.
*தமிழ் ஆதர்ஸ்
*பதிவுகள்
*காற்றுவெளி -செப்டம்பர் -2010

நெருப்பாய் எரியும் வாழ்வு!


ல்வியை விற்கிறான் கடையிலே!-இங்கு
கற்பவன் நிற்கிறான் படையிலே!
கழுதைகள் காவலன் உடையிலே!-மனம்
கண்டு துடிக்குதே இடையிலே…!

பேயர சாளுது நாட்டிலே!-இன்று
பேனையை போடுறார் கூட்டிலே!
கணவனும் மனைவியும் கோட்டிலே!கொண்ட
காதலால் வந்தது றோட்டிலே…!

நினைவுகள் காதலின் மடியிலே!-நிதம்
நிம்மதி தேடுறார் குடியிலே!
வாழ்வு நிலைப்பது படியிலே!-இன்றேல்
வாடிட வேண்டுநாம் அடியிலே!

அனைத்தையும் இழந்தார் அலையிலே!-இன்று
அகதியாய் நனைகிறார் மழையிலே!
வாழ்க்கை செலவுயர் மலையிலே!-இட்ட
வாக்கினால் வந்தெதம் தலையிலே!

சும்மா புகழுவார் பேச்சிலே!-கொடும்
சுயநல முள்ளது மூச்சிலே!
வாழ்க்கை எரியுது நெருப்பிலே!-உலகில்
வாழ்வது அவரவர் பொறுப்பிலே!!

2007.11.04

          நன்றி.
*பதிவுகள்
*வார்ப்பு
*சுடர்ஒளி


நவீன துச்சாதனனும் நாயான யூதாஸும்!

பாலாறு தேனாறு ஓடிநின்ற பூமி!
படுபாவிகளினாலே அழியுதடா சாமி!
யாழ்தன்னைப் பந்தாடத் துடிக்குதடா ‘ஆமி’!
யாரென்று உனைக்காட்ட ‘துவக்கெடுத்து காமி!

நாள்தோறும் நல்லவரை ‘கொட்டி'யென்றடைப்பார்
நடுறோட்டில் அவர்பின்னே பிணமாக கிடைப்பார்!
காலாற நடந்தாலே காணமல் போவோம்!
கண்ணிவெடி கிளைமோரில் கால்பறந்து சாவோம்!

கோளாறு கொண்டோரை கொன்றன்று வென்றோம்!
கோடாலிக் காம்புகளால் பின்வாங்கிச் சென்றோம்!
ஏழாறு நாள்போதும் மீண்டுமதை வெல்வோம்!
எமன்வந்து தடுத்தாலும் அவனையுமே கொல்வோம்!

பாவிகளின் இடுப்பொடிக்க ஒருபோதும் அஞ்சோம்!
பல்லிளித்து ஈழம்தா என்றும்நாம் கெஞ்சோம்!
ஆவிபறி போனாலும் மீண்டும்நாம் பிறப்போம்
அடிவருடி களையொழிக்க உயிருறவை துறப்போம்!

எம்மவனே எமையழிக்க யூதாஸாய் போனான்!
எச்சிலைக்காய் வாலாட்டும் நாய்போன்றே ஆனான்!
அம்மாவின் சேலையினை ‘துச்சாதன்' உரித்தான்!
ஆஹாகா! மேலுமுரி எனப்பிள்ளை சிரித்தான்!

ஐவிரலும் ஒன்றல்ல! அவன்பிள்ளை யல்ல!
ஐயையோ என்றலர்வான் எதிரிகளே கொல்ல!
பொய்யுலர பூமலரும் போரொருநாள் ஓயும்!
பொறுதமிழா! உன்வாழ்வில் இன்பத்தேன் பாயும்!




          நன்றி.
*பதிவுகள்
*சுடர் ஒளி
*தாயகம்
*வார்ப்பு




தூசு!

 பேராதனைப்பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் பவளவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட 
தேசிய மட்ட கவிதைப்போட்டியில் முதலாமிடம் பெற்று
'தங்கப்பதக்கம்' பெற்ற கவிதை-2003.

மார்கழியில் மாற்றிடவா மாலை!-நீ
மனமுவந்தால் பூக்குமடி சோலை!-நான்
கார்வளவு கேட்டிடதா காளை!-எனை
காதலிக்க வந்திடுநல் வேளை!

மோருண்ட சுகம்தந்த பெண்ணே!-நிதம்
மோதுதடி என்மனசில் மின்னே!
நீர்காற்று வானமழை முன்னே-உயிர்
நீதானே வேணுமடி கண்ணே!

பேரழகி என்மனசு வெள்ள!-நீ
பேசிடாது போவதேன்டி முல்ல!
பாருலகில் உன்னழகை வெல்ல -எந்த
பேரழகும் ஊருலகில் இல்ல...!

பாடலிலே உன்னழகை சொல்ல!-தினம்
பாடுபட்டு பாணனிவன் துள்ள!-நீ
ஊடலிலே பார்வைகளால் கொல்ல!-பயந்து
உதிருதடி வார்த்தைகளும் மெல்ல!

பனிமலரே பரிவுடனே பாரு!-நீ
பாசமுடன் நேசமொழி கூறு..!
கனிமொழியே காதலுடன் சேரு!-நிதம்
கனிந்துடலால் பெற்றிடுவாய் பேறு!

மாரழகி மனம் திறந்து பேசு!-இளம்
மாருதமே தென்றலென வீசு!
சீர்வரிசை தேவலடி காசு!-அவையுன்
சிருங்கார மொழிமுன்னே தூசு!

                                                     நன்றி.
*இளங்கதிர் (பேராதனை பல்கலைக்கழக தமிழ் சங்க வெளியீடு-2003)
*கவிதைப்பூங்கா-தினகரன் வாரமஞ்சரி
*சுடர் ஒளி வாரவெளியீடு
*வார்ப்பு
*பதிவுகள்

"ஒரு இளையராஜாவை இலங்கையில் எதிர்பார்க்க முடியாது"

இலங்கையின் தினகரன் வாரமஞ்சரி 'செந்தூரம்' சஞ்சிகையில் இடம்பெற்ற எனது நேர்காணல்.தினகரன் வாரமஞ்சரி செந்தூரத்தின் முகப்பில்   எனது புகைப்படத்தை பிரசுரித்து என்னை கௌரவித்திருந்துது.
நேர்கண்டவர்:-வாசுகி சிவகுமார்-


01.உங்கள் ‘எங்கோ பிறந்தவவளே' பாடல், இலங்கையில் மாத்திரமல்லாமல் புலம்பெயர் நாடுகளிலும் பிரசித்தம் பெற்றிருக்கிறது. நம் நாட்டு, இசை, பாடல்களுக்கான ஒரு சாதகமான நிலை இங்கு தோன்றியிருப்பதாக நீங்கள் கருதுகின்றீர்களா..?

இலங்கையில் சாதகமான சூழ்நிலை தோன்றிவிட்டது என்பதிலும் பார்க்க, வெளிநாடுகளில் இப்பாடல்களுக்கு வரவேற்பு அதிகம் என்றுதான் நான் சொல்வேன் உள்நாட்டு வானொலிகளில் தென்றல், பிறைFM,வசந்தம்FM என்பனதான் என்பாடல்களை ஒலிபரப்பின.லண்டன் IBCவானொலியில், அக்காலத்துக்கான சிறந்த பாடல்கள் வரிசையில் இரண்டாம் இடத்தை 'எங்கோ பிறந்தவளே' பாடல் இரண்டு வாரகாலத்துக்குத் தக்கவைத்திருந்தது.

இலங்கையிலுள்ள மேற்சொன்ன வானொலிகளைத் தவிர வேறெந்த வானொலிகளும் என் பாடலை ஒலிபரப்பவில்லை. YouTubeஇல் இப்பாடல் இருப்பதால் புலம்பெயர் நாடுகளைச் சேர்ந்த பலர் இதனைக் கேட்டுவிட்டு,எனக்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள். இயக்குனர் செல்வகுமார் விஜய் அன்டனி ஆகியோரும் இப்பாடலைக் கேட்டுவிட்டு, மிகவும் அற்புதமாக அமைந்த பாடல் எனச் சிலாகித்திருக்கிறார்கள்.

02.இப்பாடலை எழுத நேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள்....

நான் ஏற்கனவே பல பாடல்கள் எழுதியிருந்தாலும், ‘எங்கோபிறந்தவளே' பாடல் பிறந்த விதமே சுவாரஸ்யமானது தான். 2008 ஆம் ஆண்டு, சக்தி தொலைக்காட்சியின் 'இசை இளவரசர்கள்' நிகழ்ச்சியில் 16 பாடலாசிரியர்களைத் தெரிவு செய்து இந்தியாவுக்குக் கொண்டு சென்றார்கள். அதில் நானும் ஒருவன். அங்கு தென்னிந்தியாவின் பிரபல பாடலாசிரியர்களை, இசையமைப்பாளர்களைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.எங்கள் 16 பேரையும் ஒவ்வோர் குழுவாகப் பிரித்திருந்தார்கள்.எங்கள் குழுவுக்கு இயக்குனர் வெங்கடேஷ் தான் பாடல் எழுதுவதற்கான சூழலைச் சொன்னார். சொன்னதும் ஒரு மணித்தியாலத்துக்குள் நான் பாடலை எழுதிவிட்டேன்.முதலில் பாடலாசிரியர் பா. விஜயைச் சந்தித்தோம். அவருக்கு நான் எனது பாடலை படித்துக் காட்டினேன். பாடலைக் கேட்ட விஜய் என்னை மிகவும் சிலாகித்தார்.அதில் 'உன் டாவின்சி பார்வைகளால் நான் ஓவியமாகிவிட்டேன்' என்ற வரி வருகின்றது அதைக் கேட்டுவிட்டு ஆங்கிலக் சொற்களை உபயோகிக்காதீர்கள். தமிழிலேயே முற்றுமுழுதாக எழுதினால் இன்னும் சிறப்பாக வரும் என்றார்.அதேபோல்
நா. முத்துகுமார்,சினேகன், கவிஞர் விவேகா போன்றோரும் என்னைப் பாராட்டினார்கள்.ஆனால், எனது பாடல் வரிகளுக்கு இசையமைப்பது கடினமானதாக இருப்பதாக இங்குள்ள இசையமைப்பாளர் ஒருவரால் கூறப்பட்டது.பாடலாசிரியருக்கும், இசையமைப்பாளருக்குமிடையில் ஒரு நல்ல புரிந்துணர்வு இருந்தால் மாத்திரமே பாடல் வெற்றியடைய முடியும். அதனால் இப்பாடல் இசையமைக்கப்படாமலேயே போய்விட்டது.ஆனாலும் எல்லாவற்றையும் தாண்டி அது பிரபல பாடலாக வந்துவிட்டது. வவுனியாவில் உள்ள பிரபல இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தனின் தொடர்பு எனக்குக் கிடைத்தது.அவர் தனது 'யாழ்தேவி' அல்பத்துக்கு ஒரு பாடல் எழுதித்தரும்படி என்னிடம் கேட்டார். ஏற்கனவே என்னிடம் இயற்றப்பட்ட பாடல் ஒன்று இருப்பதாகக் கூற, 5 நிமிடத்திலேயே அதற்கு இசையமைத்துவிட்டார். அதுவும் பிரபலமடைந்து விட்டது.இங்குள்ள ஊடகங்கள் தென்னிந்தியத் திரையிசைப் பாடல்களுக்குத் தரும் முக்கியத்துவத்தில் கால்பங்கேனும் நம் நாட்டவர்களின் பாடல்களுக்குத் தருவதில்லை.நாங்கள் தேடிப் போய்க் காலடியில் கொடுத்தால் கூட அவர்கள் ஒலிபரப்புவதில்லை. இலங்கைத் தமிழிசையில் மாற்றம் ஏற்படப் போவதில்லை. இங்குள்ள தமிழிசைக் கலைஞர்களுக்கு உரிய வாய்ப்புகள் தரப்பட்டிருந்தால் அவர்கள் எங்கோ சென்றிருப்பார்கள். இலங்கையில் உள்ள இசையமைப்பாளர்களிடம் ஏ. ஆர். ரஹுமானையோ, இசைஞானி இளையராஜாவையோ எதிர்பார்க்கிறார்கள். பாடலாசிரியர்களில் கவிப் பேரரசு வைரமுத்துவை எதிர்பார்க்கிறார்கள்.அவர்களது நிலைக்கு இங்குள்ளவர்களை வளர்க்க வேண்டும் என அவர்கள் நினைப்பதில்லை. கனடாவில் புலம்பெயர் தமிழர்களால் இயக்கப்படுகின்ற ஒரு திரைப்படத்துக்கு நான் பாடல் வரிகளை எழுதுகிறேன். இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் அதற்கு இசையமைத்திருக்கிறார்.

இலங்கையின் கலைஞர்கள் பலர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழ்கிறார்கள். அவர்கள் இசை அல்பங்களை வெளியிடுகிறார்கள். பலருக்கு தென்னிந்திய திரையிசை உலகிலும் பாடல்கள் இசையமைக்கவும் பாடவும் சந்தர்ப்பங் கிடைத்திருக்கிறது. இலங்கையில் உள்ள கலைஞர்களுக்கு அவ்வாறான வசதி வாய்ப்புகள் எவையும் இல்லை.
எந்தவொரு வானொலியும் கூட இலங்கை கலைஞர்களின் பாடல்களை ஒலிபரப்பத் தாயாராக இல்லை. ஊடகங்களின் இம்மனோநிலை மாற வேண்டும். ஆரம்பகாலத்தில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் மெல்லிசைப் பாடல்களுக்கு நிறையவே களம் கிடைத்தது. மெல்லிசைப்பாடல்கள் அதிகளவில் ஒலிபரப்பப்பட்டன. எல்லாப் பாடலாசிரியர்களுக்கும் தாமும் எழுத வேண்டும் என்ற உத்வேகம் ஏற்பட்டது. ஆனால் இப்போது அவ்வாறில்லை. எந்தவொரு வானொலியும் எங்கள் பாடல்களை ஒலிபரப்புவதில்லை.

03.இங்கு தமிழ் சினிமாத்துறை அழிவடைந்ததுதான் எமக்கென ஒரு இசை அடையாளம் இல்லாமல் போனதற்கான காரணமாக இருந்திருக்கலாமோ...?

இல்லை.அவ்வாறு குறிப்பிட முடியாது. அமெரிக்காவைப் பாருங்கள். அங்கு, சினிமா இசை ஒரு தளத்திலும் மெல்லிசை, அல்லது பொப்பிசை என்பது வேறு தளத்திலும் பயணிக்கிறது.
ஆங்கிலப்படங்களில் அனேகமானவற்றில் பாடல்கள் இல்லை. சினிமாத்துறையைப் போலவே, அங்கே இசையும் இதன் உச்சத்தை எட்டியிருக்கிறது.
இங்கு அப்படியில்லை. இலங்கையில் ஆரம் பத்தில் தமிழிசை பாரிய வளர்ச்சி கண்டிருந்தது. தமிழர்கள்தான் சிங்களப்பாடல்களுக்கு இசையமைத்தார்கள் இன்று நிலைமை மாறிவிட்டது.
இங்கு முக்கிய பிரச்சினையாகவிருப்பது எமக்குக் களமின்மை. இங்குள்ள ஊடகங்கள் களம் தராவிட்டால் வேறு யார் தருவார்கள்? 

                                          நன்றி.
*சாதீக் சிஹான்(தினகரன் ஆசிரியர் பீடம்)
*வாசுகி சிவகுமார்(தினகரன் ஆசிரியர் பீடம்)
*பரீட்(செந்தூரம் பொறுப்பாசிரியர்)
*தினகரன் வாரமஞ்சரி- செந்தூரம்

பேருந்து...!


மாதத்தின் முதலாம்நாள் கன்னிப்பெண்ணின்
         மார்பினைப்போல் விம்மிநிற்கும் சேப்பைத்தொட்டு
ஆதரவாய் தடவுகின்றேன் அம்மாஅப்பா
        அன்புமுகம் என்நினைவில் வந்துபோச்சு...…
காதவழி தான்நடந்தேன் போனமாசம்
         கடன்தந்த கனகுமுகம் தோன்றலாச்சு...…
வாதமுற்ற எண்ணமுடன் வீதியோரம்
       'வஸ்'ஸொன்றின் வருகைக்காய் காத்திருந்தேன்…

தினம்குடித்து ஆடியாடி வீடுஏகும்
           திக்குவாயர் எலிக்குஞ்சு தியாகுபோன்று...
சனமடுக்கி புகைகக்கி வந்த பஸ்ஸோ
           சட்டென்று 'பிரேக்'கடிக்க உலுகுவந்தேன்..
பணம்நிறைந்த பையினிலே கையைவிட்டேன்
           பத்தெடுத்தேன் பஸ்ஸினிலே ஏறிவிட்டேன்..
தொணதொணக்கும் கண்டக்டர் காதடைக்க
          கரகரக்கும் பீக்கராகி கடந்து போனான்..

பத்துமிச்சம், பாவியென்னை பார்த்தும்கூட
        'ஸ்ஸரட்ட யன்டமல்லி' என்றுபோனான்
முத்துமுத்தாய் சொட்டுகின்ற வியர்வைதன்னை
       முடிந்தவரை நான்துடைத்து முக்கிநின்றேன்
செத்துவிட்ட அவள்நினைவு ஆங்கும்வந்து
        செய்கவிதை எனமீண்டும் தொல்லை செய்தும்
கத்திக்கத்தி கத்திநெஞ்சில் வீசும் கனகர்
       கடன்தந்த ஞாபகமே தொடரலாச்சு..

என்னருகில் ஒருகிழவி 'ஏன்டா மோனே
        ஏன்காலில் மிரிக்கின்றாய் தள்ளு 'என்றாள்...
என்னசெய்ய? வியர்வைநாற்றம் பொறுமையோடு
       'எங்கதள்ள இடமிருக்கா பொத்து'என்றேன்
கண்ணருகில் காந்தம்பூட்டி நின்றபெண்ணோ
        கஸ்ட்டநிலை உணர்ந்ததுபோல் இடம்கொடுத்தாள்...
பெண்ணவளில் சுவரிலுள்ள பல்லிபோன்று
        பெருமூச்சு விட்டவாறு ஒட்டிக்கொண்டேன்..

என்னசுகம் 'திக்கதிக்' நெஞ்சடிக்க குருதியெங்கும்
         எரிமலையின் குழம்புபொங்கி ஓடலாச்சு..
சின்னவன்நான் சனநெரிசல் உள்ளபஸ்ஸில்
        சித்தமெங்கும் தீப்பிடிக்க சிக்கிநின்றேன்!.
அன்னமவள் 'பெயின்டடிச்ச' கூந்தல்வாசம்
        அடிவயிற்றில் உருண்டையொன்றை உருட்டக்கண்டேன்..
கன்னம்வீங்கும் என்றுணர்ந்து கவலையோடு
        காற்றுபோக இடம்கொடுத்து தள்ளிநின்றேன்.

எந்தவித சலனமற்ற அந்தப் பெண்ணோ..
       ஏக்கமடன் பார்வைகளால் 'ஓகே' என்றாள்
அந்தவேளை கொழுந்துவிட்ட ஆசைத்தீயில்
       அறிவுதன்னை போட்டெரித்து மோட்சம் கண்டேன்!
சிந்தையெங்கும் சிறுக்கியவள் விந்தைசெய்ய
        சீர்கெட்ட எண்ணங்களே எழும்பலாச்சு
மந்தையாகி, நானுமங்கே பெற்றெடுத்த
       தந்தைதாயை என்னைக்கூட மறந்திருந்தேன்…

'ரோசி'யென்று பெயருரைத்தாள் மேனியெங்கும்
          'ரோஜாசென்டு' பூசிநெஞ்சை கிறங்கடித்தாள்!
தாசியவள் என்றறியா விடலைநானோ
           தடுமாறி வீழ்ந்துவிட்டேன் நடந்ததென்ன..?
பேசுதன்னை பறிகொடுத்தேன் வாழ்க்கை என்னும்
          பேருந்தில் வந்தபெண்ணை காணவில்லை...!
காசுதன்னை தொலைத்துவிட்ட கவலையோடும்
         கவிதை யொன்றை வாங்கியேங்கி வீடுவந்தேன்!!





                         நன்றி.

*சுடர்ஒளி வார வெளயீடு
*ஞானம்

*கீற்று
*வார்ப்பு
*பதிவுகள்